இலங்கையில் சுமார் 5 இலட்சம் பேர் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விவசாயத் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள் மற்றும் உர வகைகளாலேயே இந்த நோய் ஏற்பட்டுள்ளதாக, இந்த நோய் பற்றி ஆராய்ந்த விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். அதேநேரத்தில், இந்த நோய் ஏற்படுவதற்கு ஐ.நா. சபையின் உணவு விவசாய ஸ்தாபனமே (FAO) காரணகர்த்தா என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. உணவு விவசாய ஸ்தாபனம் விவசாய இரசாயனங்களை (Agro Chemicals) உற்பத்தி செய்யும் பல்தேசிய கம்பனிகளை ஊக்கப்படுத்தி வருவதாகவும், அதனாலேயே அந்த இரசாயனங்களை இலங்கையில் பயன்படுத்தும் விவசாயிகள் இந்த வகையான நோய்களுக்கு ஆளாகி வருவதாகவும், சுவர்ண ஹன்சா பவுண்டேசன் (Swarna Hamsa Foundation) என்ற அபிவிருத்தி ஊக்குவிப்பு நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விவசாய ஸ்தாபனம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு வழங்காவிடின் ஐ.நா. உணவு விவசாய ஸ்தாபனத்துக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும், “வெகுஜன இயக்கம்” ஒன்றை ஆரம்பிக்கப் போவதாகவும், அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
ஆனால் தாங்கள் எவருடைய வியாபார நலன்களுக்காகவும் வேலை செய்பவர்கள் அல்ல என, இந்தக் குற்றச்சாட்டை உணவு விவசாய ஸ்தாபன அதிகரி ஒருவர் மறுத்துள்ளதாக, கொழும்பில் உள்ள தமது நிருபர் தெரிவித்ததாக பிபிசி செய்தி சேவை தெரிவித்துள்ளது.
எது எப்படியிருந்த போதிலும், இலங்கையில் கடந்த 20 வருடங்களில் சுமார் 20,000 பேர் வரை இந்த சிறுநீரக நோயினால் இறந்துள்ளனர். அதைவிட 450,000 பேர் வரையிலானவர்கள் இந்த நோயின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நோயின் தாக்கம் குறித்து கருத்து தெரிவித்த சுவர்ண ஹன்சா பவுண்டேசன், இது முதலில் முற்றுமுழுதான விவசாய பிரதேசமான வட மத்திய மாகாணத்தில் தோன்றியதாகவும், பின்னர் இப்பொழுது இன்னொரு விவசாய பிரதேசமான தென் மாகாணத்திலும் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அங்குள்ள ஒரு கிராமத்தில் 50 வீதமான குடும்பங்கள் இந்நோய்க்கு ஆளாகி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, இலங்கை அரசின் விவசாய அமைச்சு அதிகாரி ஒருவர், இந்த நோய் ஏற்பட்டுள்ள மாவட்டங்களின் நீர்தான் அதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார் (விவசாய இரசாயனங்களில் உள்ள நஞ்சுகள் நீரின் மூலம்தான் மக்களின் உடலை சென்றடையும் என்பதை இப்படி சொல்லாமல் சொல்கிறார் போலும்). அத்துடன் அரசாங்கம் அதிக நச்சு தாக்கம் உள்ள விவசாய இரசாயனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சில மாதங்களுக்கு முன்னர் அப்படியான மூன்று வகையானவற்றுக்கு இறக்குமதி தடை விதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சிறுநீரக நோய் பற்றி மிகவும் கவனமாக ஆராய்ந்த உள்நாட்டு – வெளிநாட்டு விஞ்ஞானிகள், விவசாய இரசாயனங்களில் Cadmium, Arsenic போன்ற அதிக நச்சு தன்மையுள்ள toxic metals சேர்க்கப்படுவதாலேயே இந்த நோய் ஏற்படுவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
இதேநேரத்தில், விவசாயத்துறையில் அதிக ஈடுபாடுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்த நோயின் தாக்கம் குறித்து ஆய்வுகள் எதுவும் செய்யப்பட்டதாக இதுவரை தகவல்கள் எதுவும் வெளிவர இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
Source : vaanavil
ஓகஸ்ட் 25, 2015
No comments:
Post a Comment