நாட்டில் 30 வருட அழிவுகரமான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மீண்டும் ஒரு அழிவுகரமான நிலைமையை உருவாக்குவதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு நாசகார சக்திகள் தங்கள் வேலையை ஆரம்பித்துள்ளன. முன்பு போல இனப்பிரச்சினை வடிவத்திலேயே மீண்டும் அந்த வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதற்காக சகல பிற்போக்கு தமிழ் தேசியவாத சக்திகளும் ஓரணியில் திரட்டப்பட்டு வருகின்றன.
இலங்கையில் தோன்றிய இனப்பிரச்சினை என்பது பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளால் தமது காலனியாதிக்க தேவைகளுக்காக மக்களைப் பிரித்தாளும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டு, அவர்களது உள்நாட்டு அடிவருடிகளான சிங்கள – தமிழ் முதலாளித்துவ சக்திகளால் வளர்க்கப்பட்ட ஒன்றாகும்.
பிரித்தானியர் தென்னாசியாவில் – குறிப்பாக இந்தியாவில் தமது காலனியாதிக்கத்துக்கு எதிராக எழுந்த சுதந்திரப் போராட்ட அலை காரணமாக இலங்கையையும் விட்டு 1948 இல் வெளியேற நேர்ந்தாலும், தமது உள்நாட்டு அடிவருடிகள் மூலம் இலங்கை அரசியலிலும் பொருளாதாரத்திலும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டே இருந்தனர். அதற்கு ஏதுவாக சுதந்திர இலங்கையின் முதலாவது ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியும், தமிழ் பிற்போக்கு மேட்டுக்குழாமும் செயற்பட்டன.