
பிரபாகரன் தமிழ் மக்களை நந்திக் கடலில் கைவிட்டுச் சென்றார்.
சம்பந்தன் தமிழ் மக்களை நட்டாற்றில் விட்டுச் சென்றிருக்கிறார்.
இரண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.
தமிழ் மக்கள் பிரபாகரன் விட்டுச்சென்ற கடலில் இருந்து எப்படி திக்குமுக்காடி சிரமப்பட்டு வெளியேறினார்களோ அதேபோல, சம்பந்தன் விட்டுச்சென்ற நடு ஆற்றிலிருந்தும் வெளியே வருவதற்கு முயற்சிப்பதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.
கடலில் சில வேளைகளில் அலையோடு அலையாகச் சேர்ந்து கரையேற முடியும். ஆனால் ஆற்றில் எதிர்நீச்சல் போட்டுத்தான் வெளியே வரவேண்டி இருக்கும்.
அந்த வகையில் பிரபாகரனைவிட சம்பந்தன் தமிழ் மக்களுக்கு அதிகமான பிரச்சினைகளை உண்டுபண்ணி வைத்திருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
ஜனாதிபதி தேர்தலில் முதலில் விலகி நிற்பது என்றும், பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த 13 அம்சக் கோரிக்கைகளை ஏற்கும் வேட்பாளரை ஆதரிப்பது என்றும், அதன் பின்னர் ஐ.தே.க. நிறுத்தியுள்ள வேட்பாளரை ஆதரிப்பது என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்தது.
இது, ஏவுகணை ஒன்று விண்ணை நோக்கி ஏவப்பட்டவுடன் கட்டம் கட்டமாக வெடித்து மேலே செல்வது போன்றது. சிலர் கூட்டமைப்பின் முதலாவது வெடிப்பை நம்பினார்கள். இன்னும் சிலர் கூட்டமைப்பின் இரண்டாவது வெடிப்பை நம்பினார்கள். ஆனால் இறுதி வெடிப்புதான் அறுதியானது.