“நமது நாடு ஆழமான அரசியல் நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டுள்ளதால்
2019இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் மூலம் கூட நாட்டில்
ஸ்திரத்தன்மையை மீட்டுவிட முடியாது” இவ்வாறு கூறியிருக்கிறார் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் டியு
குணசேகர. டியு குணசேகரவின் 60 ஆண்டுகால அரசியல் பங்களிப்பைக்
கௌரவிக்குமுகமாக கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் அவர் பேசும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில், “நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும்
அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து காத்திரமான
நடவடிக்கைகளை மேற்கொள்ளாது விட்டால் பாரதூரமான விளைவுகள்
ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
படம்: தோழர் டியு குணசேகர.
தேசியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தேசியத் தலைமை ஒரு ஆக்கபூர்வமான கொள்கையைப் பின்பற்றும் என நம்புகிறேன். நாடாளுமன்றம் இன்று ஒரு குழப்பமான சூழ்நிலையில் உள்ளது.
பிரச்சினைகளைக் கையாள்வதில் உறுப்பினர்கள் ஆற்றல் அற்றவர்களாக
உள்ளனர். தற்போதைய நெருக்கடிக்கு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நிகழும் மோதலும் ஒரு காரணம். நாட்டில் அதிகாரத்தில் இருப்பவர்கள் வெளிநாட்டுச் சக்திகள் நமது நாட்டில் செயல்படும் விதங்கள் குறித்து பாராமுகமாக இருந்து வருகின்றனர். உலகளாவிய நெருக்கடிகள் குறித்து இலங்கை பாராமுகமாக இருந்துவிட முடியாது.