எமது கடந்த மாத (ஐப்பசி – 2018) வானவில் இதழின் முன்பக்க கட்டுரையின் தலைப்பு இவ்வாறு அமைந்திருந்தது:
“நாட்டு மக்களே, ஆட்சி மாற்றத்துக்கு தயாராவீர்!”
அந்தக் கட்டுரையில் நாம் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம்:
“இந்த அரசு எந்த நேரமும் கவிழலாம் என்ற நிலை தோன்றியுள்ளது. ஆட்சியின் வீழ்ச்சி என்பது ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் என்பனவற்றின் மூலமும் நடைபெறலாம் அல்லது அதற்கு முதல் வேறு வழிகளிலும் நடைபெறலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் நாட்டு மக்கள் ஆட்சி மாற்றமொன்றை விரும்பினாலும், இந்த அரசைப் பதவிக்கு கொண்டு வந்த ஏகாதிபத்திய சக்திகளும், அவர்களது உள்நாட்டு அடிவருடிகளும் அதற்கு இலேசில் இடம் கொடுக்க விரும்பமாட்டார்கள். அவர்கள் சகல வழிகளிலும் நாட்டில் ஒரு ஏகாதிபத்திய விரோத, முற்போக்கு அரசு ஏற்படுவதைத் தடுக்கும் கடும் பிரயத்தனங்களில் ஈடுபடுவர்.
எனவே, மக்கள் விரோத சக்திகளைக் குறைத்து மதிப்பிடாமல், சகல ஏகாதிபத்திய விரோத, முற்போக்கு, ஜனநாயக சக்திகளையும் ஒரு பரந்துபட்ட அணியில் திரட்டுவது முற்போக்கு சக்திகளின் வரலாற்றுக் கடமையாகும். இந்தப் பணி இன்றைய ஆட்சியின் கீழ் பல இன்னல்களைச் சந்தித்து வரும் தமிழ், முஸ்லீம், மலையக மக்களினதும் கடமையாகும்.
“ஆட்சி மாற்றம்” என்ற சொல் அனைத்து மக்களினதும் தாரக மந்திரமாக ஒலிக்க வேண்டும்”.
எமது இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து நாட்டில் யாருமே எதிர்பாராத வகையில் பல அரசியல் மாற்றச் சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.