Photo: courtesy:blackopinion.
உலக நாடுகளின் வரலாறுகளில் உபோராட்டங்கள் இரத்தம் தோய்ந்த
பக்கங்களாகவே உள்ளன. 39 வயதில் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு ராஜாளிப்
பறவையை நினைவுகூர்வது, நமது ஆன்மாவின் பசிக்கு அமுதத்தையே
வார்ப்பது போன்றது. அந்த ராஜாளிப் பறவை யார்? தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஆர்ஜென்ரினாவில் பிறந்த அவர், ‘சே’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட சேகுவேரா. சேகுவேராவின் வாழ்க்கை, சாகசங்கள்
நிறைந்த சரித்திரம். சேயின் சம்பவங்கள் ஒவ்வொன்றையும் கற்பனை செய்து
கணநேரம் பார்த்தால் போதும், நமது இரத்த ஓட்டத்தையே உறைந்து
போகச் செய்யும், மயிர்க் கூச்செறிய வைக்கும் வீர தீர விளையாட்டுகளாகும்.
மருத்துவ மாணவராக இருந்தபோதே அவர் ஆர்ஜென்ரினாவில் தமது ஊரை
விட்டுவிட்டு வெளியேறினார். 1950களில் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நடந்து வந்த மக்கள் எழுச்சிகளைப் பற்றியெல்லாம் அந்த 17 வயதிலேயே
அறிந்து வைத்திருந்தார்.
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு நாட்டில் வாழ்ந்து வந்த புரட்சிவாதி ஹில்டா காடியா அகஸ்டா மூலமாக மார்க்சீயக்
கோட்பாடுகளைக் கற்றதோடு,சோசலிசத்தைப் பரப்பவும் சேகுவேரா
தன்னை அர்ப்பணிக்கத் திட்டமிட்டார். உருகுவே நாட்டின் பத்திரிகையாளர்,
சே குவேராவைப் பற்றிக் கூறுகையில், அவரை ஓர் அதிபுத்திசாலி என்றும்,
அவருக்கு உயர் கணிதத்தில் அபார ஞானம் இருந்தது என்றும், சிக்கல்
நிறைந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிப்பது அவருக்குப் பிடித்திருந்தது
என்றும், தொல்லியல் அகழ்வாராய்ச்சியிலும் ஈடுபாடு காட்டினார் என்றும் குறிப்பிட்டுள்ளது ஒருவிதக் குறைவு நவிற்சிதான்.அவரோ, பிறவி ஆஸ்துமா நோயாளி. ஆனாலும், அதைப் பொருட்படுத்தாமல் புரட்சிகரச் சிந்தனைகளிலும் செயல்பாடுகளிலும் உற்சாகமாக ஈடுபட்டவர். மருத்துவக் கல்விக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 17 வயதில் மாணவராக இருந்தபோதே தனது
ஊரைவிட்டு வெளியேறினார்.
மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது தன் சொந்த நாடான
ஆர்ஜென்ரினாவில் 4500 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து,
தமது கிராமங்களைப் பற்றிய புரிதலைப் பெற்றுள்ளார். அவர் கடைசியாகச்
சென்ற கார்டோபா நகரில் ‘புத்தகத்தில் நமது நாட்டைப் பார்த்தது போதும் –
தேசத்தை நேரில் பார்க்கப் புறப்படுவோம் வா’ என்று தனது நண்பர் டாக்டர் ஆல்பர்ட்டோவுடன் இணைந்து பயணத்தைத் தொடர்ந்துள்ளார்.
இருவரும் 8 ஆயிரம் கி.மீ. இந்த இரண்டாம் பயணத்தில் மோட்டார் சைக்கிளில் போனார்கள். அதனைப் பற்றி அவர் எழுதிய நாட்குறிப்பு, ‘மோட்டார் சைக்கிள் டயரி’ நூல். அப்பயணத்தில் ஓர் ஊரில் வீடில்லாத தம்பதிகளைப் பார்க்க நேரிட்டது.அவர்கள் சொன்ன செய்தி, இவர்களை உலுக்கிவிட்டது. போலீஸ்காரர்கள் தங்களைக் கம்யூனிஸ்ட்டுகள் என்று ஊரிலிருந்தே அடித்துத் துரத்தி விட்டனர் என்பது அச்செய்தியாகும். அதிர்ச்சியடைந்த சே குவேரா,முதலாளித்துவத்தின் ஈவு இரக்கமற்ற சுரண்டல் முறையை உணர்ந்தார். இதனை எதிர்க்க வேண்டும் என அவருடைய மனம் எரிமலையானது.அங்கிருந்து அதே மோட்டார் சைக்கிளில் சிலி நாட்டின் செம்புச் சுரங்கப் பகுதிகளுக்குப் போனார்கள். அச்சுரங்கத் தொழிலாளர்கள் இரக்கமில்லாமல் சுரண்டப்படுவதைக் கண்டு கோபமடைந்தார்கள். சுரங்கத்தின் மேலாளரிடம் அத்தொழிலாளிகளுக்குக் குடிக்கத் தண்ணிர் தருமாறு கேட்டனர். அந்த மேலாளரோ, எப்போது கொடுப்பது என்று எனக்குத் தெரியும். இப்போது அவர்கள் சாகப் போவதில்லை என்று பதில் கொடுத்தாராம்.