உறவும் பகையும் உயிர்க் கொலையும் : புலிகளும் முஸ்லிம்களும் -
எஸ்.எம்.எம்.பஷீர்
வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவு: ஒரு முன்நிகழ்வு (Flashback)
வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழர்களுடன் மிக நெருக்கமாகவும் நல்லுறவுடனும் வாழ்ந்தனர் என்பதை இரு பகுதியினரும் ஏற்றுக் கொள்கின்றனர். குறிப்பாக குடா நாட்டில் வாழ்ந்த தமிழர்களும் முஸ்லிம்களும் மிக நெருக்கமாகவும் அந்நியோன்யமாகவும் எவ்வித வேறுபாடுமின்றி வாழ்ந்ததாக இன்றுவரை கூறுகின்றனர். ஆனால் மாறாக கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் - தமிழர்களுக்கிடையே மனக்கசப்புக்கள், சிறு சிறு பிணக்குகள் காலங்காலமாக இடம் பெற்றிருந்தாலும், அவையாவும் பொருளாதார சமூக நடவடிக்கைகளில் காணப்பட்ட பரஸ்பர தங்கியிருத்தல் காரணமாக இலகுவில் மறக்கப்பட்டு அல்லது சமரசம் செய்யப்பட்டு பொதுவான சகஜீவிதம் பேணப்பட்டு வந்தது. அவ்வாறான பிணக்குகள் இரண்டு சமூகத்தினரதும் மொத்த சமூகப் பிரச்சினையாக இரண்டு இனங்களுக்கிடையிலான பிரச்சினையாகப் பார்க்கப்படவில்லை. மேலும் அவ்வாறான பிணக்குகளின் விளைவாக ஏற்பட்ட சிறு சிறு கைகலப்புக்கள் கூட, அவ்வப் பிரதேச தனி நபர்களின் அல்லது அப்பிரதேச மக்களின் தனிப்பட்ட பிணக்காக அல்லது கைகலப்பாகவே கருதப்பட்டது.