டாக்டர் பிடல் காஸ்ட்ரோ தியாஸ் பலார்ட், (Fidel Castro Diaz-Balart) 2018 பிப்ரவரி 1 அன்று மரணததைத் தழுவினார்.
‘பிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை’ என்று உலகெங்கிலும் உள்ள ஊடகங்கள் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டன. கியூபப் புரட்சியின் மாபெரும் தலைவரது மகன் கடைசியில் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போனார் என இழிவுபடுத்துவதே இந்த தலைப்பின் நோக்கமாக இருந்தது.
உண்மையில் டாக்டர் பிடல் தற்கொலை செய்து கொண்டாரா?
கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘கிராண்மா’ வெளியிட்ட செய்தியில், தற்கொலை என்ற வார்த்தை இடம்பெறவில்லை.
“பிடலிட்டோ (டாக்டர் பிடல் காஸ்ட்ரோவின் செல்லப்பெயர்; அவரை ‘லிட்டில் பிடல்’ என்றும் அழைப்பார்கள்) கடந்த சில மாதங்களாக மன அழுத்தம் சார்ந்த உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்த நிலையில் வியாழனன்று (2018,பிப்ரவரி 1) அதிகாலை மரணமடைந்தார். தோழர் பிடலிட்டோ, தனது வாழ்நாள் முழுவதையும் அறிவியலுக்காக அர்ப்பணித்தவர். தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்த பல அங்கீகாரங்களை பெற்றிருந்தவர்” என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது.