( விமல் குழந்தைவேலின் “கசகறனம் ” நாவல் பற்றிய ஒரு பார்வை)
எஸ்.எம்.எம்.பஷீர்
“உரிமை உள்ள இனமாக (முஸ்லிம்கள்) வாழவேண்டும் . இதனை யாராலும் தடுக்க முடியாது.; தமிழரும் முஸ்லிம்களும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து வாழ வேண்டும் . ஒரு இனத்தை வீழ்த்தி மற்ற இனம் வாழ்ந்துவிட முடியாது.”
( மறைந்த கல்முனை முன்னாள் மஜீத் எம்.பீ ஆற்றிய உரையிலிருந்து. -25 மாசி மாதம் 1987 )
இந்த நாவல் இரண்டு அத்தியாயங்களும் இருவேறுபட்ட கால கட்டங்களை , ஒரு காலகட்டம் பிறிதொரு சடுதியான அக புற மாற்றங்களுக்கு உள்ளாகும் காலமாற்ற புள்ளியினை அடையாளம் காண்பதில் நாவலாசிரியர் முனைந்ததன் விளைவாகவே தனது நாவலையும் இரு வேறுபட்ட சூழல்களை அடிப்படையாகக் கொண்டு , இரண்டு அத்தியாயங்களாக பிரித்து கதை சொல்லுகிறார். முதல் அத்தியாயம் அதிகம் கதை மாந்தர்களையும் அவர்களை சுற்றியிருக்கிற பண்பாட்டு புவியியல் அம்சங்களை மட்டுமன்றி அவற்றினை மிக நுணுக்கமாக அச் சூழலில் வாழும் மனிதர்கள் , விலங்குகள் , தாவரங்கள் , மரங்கள் என்றெல்லாம் தானும் ஒரு ஆழ்ந்த ஈடுபாட்டுடன் அதிக விவரிப்புக்களை செய்வதன் ஊடாக வாசகனை ஓட்டவைக்கலாம் என்று நாவலாசிரியர் நம்பியிருப்பார் போலும் . ஏனெனில் கதை மாந்தர்கள் அவர்கள் பேசுகின்ற மொழி என்பன ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் மட்டும் பேசப்படும் மொழியாக பெரிதும் காணப்படுவதும் , கதை சொல்லியியும் கதை மாந்தரின் மொழியில் பேசுவதும் , கதை மாந்தர் வாழ்ந்த காலம் , அவர்களின் மொழி பற்றிய எழுத்துக்களை கதை சொல்பவர் பொதுவான எழுத்து மொழியில் எழுதியிருந்தால் முதல் அத்தியாயம் நிச்சயம் வாசக ஈர்ப்பினை கொண்டிருந்திருக்கும்
பல தசாப்தங்களுக்கு பிறகு ஒரு தமிழ் நாவலை முழுமையாக வாசிக்கவேண்டி ஏற்பட்டது கடினமாக தோன்றினாலும், போர்க்கால சூழல் சம்பந்தமான , ஒரு பார்வையாளனான படைப்பாளியை தேடும் வாசிப்பில் நாவலை முழுமையாக படிக்க வேண்டி நேரிட்டு விட்டது. குறுகிற நிலப்பரப்புக்குள் இலங்கை குறுகியதாய் தன்னை இனத்தால் மொழியால் மதத்தால் கூறுபோட்டுக் கொண்ட கூர்ப்புக் கோட்பாடுகளால் , வடக்கிலே இருந்து வந்த மூளைச்சலவை செய்யப்பட்ட கிழக்கின் இளைஞர்களால் , இராணுவ கொடூரங்களால் எவ்வாறு கோலமிழந்து போனது என்பதை முதல் ஏதோ ஒரு புள்ளியில் அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் தொடங்கி முடிக்கும் புள்ளியை கண்டு கொள்ளாமல் தனது நூலின் பெயருக்கு ஏற்ற பொருளாய் கதையை கொண்டு முடித்திருக்கிறார். ஒரு வழக்கொழிந்த பேச்சு மொழியை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார். கிழக்கிலே அருள் செல்வநாயகம் தமிழ் முஸ்லிம் மக்களின் பேச்சு மொழி பற்றி தொல்காப்பிய அடிப்படையில் செய்த ஆய்வுகளை அலசிப் பார்க்கின்றபோது மக்களையும் நாவல் சொல்லும் காலகட்ட பேச்சு மொழியையும் ஆவணப்படுத்த வேண்டிய தேவையுமிருப்பதால் இந்த நாவல் அந்த இடைவெளியையும் நிரப்பலாம்.