எஸ்.எம்.எம்.பஷீர்
“நான் சாகத் தயாராக இருக்கிறேன் , ஆனால் நான் கொல்வதற்கு தயாராகவிருப்பதற்கான காரணம்தான் இல்லை” (மகாத்மா காந்தி)
(I am prepared to die, but there is no cause for which I am prepared to kill” . ~Mahatma Gandhi)
நோர்வேயில் சென்ற வெள்ளிக்கிழமை பயங்கரவாத செயல்புரிந்து முழு ஐரோப்பாவையும் மட்டுமல்ல உலகின் மேற்குலக பயங்கரவாதம் பற்றிய கருத்தியலுக்கு புதிய பார்வை வீச்சினை ஏற்படுத்திய பிரிவிக் ஒரு கிரீஸ்தவனில்லை , ஒரு முஸ்லிம் எதிர்ப்பாளன் , ஒரு வலதுசாரி என்ற அடையாளப்படுததலே உலகின் பிரபல ஊடகங்களால் இன்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஒரு பயங்கரவாதியாக பிரிவீக் கிறிஸ்தவ மதத்தின் பெயரில் மனித விரோத கருத்தியல்களுடன் தன்னை அடையாளப்படுத்தி புலிப்பயங்கரவாதிகளுக்கு புகலிடமும் போஷனையும் செய்த நோர்வே நாட்டின் கதவுகளை அந்நாட்டு பிரஜை ஒருவனே தட்டியுள்ளான் என்பதை நோர்வே ஜீரணிக்கவே கஷ்டப்படுகிறது. அழிவுகள் மூலம் மேற்குலகினை அவன் இரு விதத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளான் . ஒன்று மேற்குலகில் எடுத்ததற்கெல்லாம் சகட்டு மேனிக்கு முஸ்லிம் பயங்கரவாதம் என்று பிரபல சர்வதேச உள்ளூர் ஊடகங்களிலும் எழுதியும் பேசியும் வரும் பல் துறைசார் விற்பன்னர்களுக்கும் , முஸ்லிம் பயங்கரவாதம் என்று முஸ்லிம் மக்கள் மீதும் போர் முரசறையும் பொய் ஜனநாயக மனித உரிமை முகமூடியணிந்த மேற்குலக அரசுகளுக்கும இது பெரிய அதிர்ச்சிதான்.. நோர்வேயும் பயங்கரவாதத்தின் நேரடி விளைவை சந்தித்திருப்பதால் இலங்கையில் பயங்கரவாதம் எப்படி இருந்திருக்கும் என்பதை தமது பட்டறிவு மூலம் அறிந்து கொள்ள நேரிட்டுள்ளது.
பிரிவிக் ஒரு மனநிலை சரியற்றவன் , புத்தி பேதலித்தவன் என்று கிறிஸ்தவ மத அடிப்படையில் பயங்கரவாதம் புரிந்தவனை அடையாளப்படுத்துவதில் மூடி மறைப்புக்களை செய்ய மேற்குலகின் ஊடக ஆய்வாளர்கள் , ஆரசியல் கருத்துரையாளர்கள் முயற்சிப்பதை கூட இப்போது காணக் கூடியதாகவுள்ள நிலையில் , உண்மையில் உலகின் பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதில் சம்பந்தப்பட்டதாக சொல்லப்பட்ட நபர்கள் தொடக்கம் இந்திய ஹிந்துத்துவ ஆர். எஸ்.எஸ். இயக்க , சிவசேன இயக்க சார்பாக பயங்கரவாத செயல்களுடன் அடையாளப்படுத்தப்பட்ட நபர்கள் , என புலிகள் வரையும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டோர் மனநிலை பாதிக்க பட்டவர்கள் அல்லர் எனபதும் அவர்களில் பலர் நன்கு சிந்திக்க கூடியவர்களாக மூளச்சமநிலை உள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது ஒரு வெளிப்படையான கசப்பான உண்மை . அந்த வகையில் பிரிவிக்கும் அதற்கு விதிவிலக்கல்ல.