ஜனாதிபதி தேர்தலில் முற்போக்கு – ஜனநாயக சக்திகளின் நிலைப்பாடும் அணுகுமுறையும் என்ன?
நவம்பர் 30, 2014
இலங்கை ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக இப்போது பல்வேறு சர்ச்சைகள் அரசியல் அரங்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை அகற்ற வேண்டும் என்பது. இன்னொன்று, தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது.
இதில் ஒரு வேடிக்கையான விடயம் என்னவெனில், 1978இல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் தலைவராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன புதிய அரசியல் சாசனத்தைக் கொண்டு வந்து, நிறைவேற்று ஜனாதிபதி பதவி, விகிதாசாரப் பிரதிநிதித்துவம், விருப்பு வாக்கு முறைமை என்பனவற்றை அறிமுகப்படுத்திய போது, சிறீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும், வெகுஜன அமைப்புகளும் அதைக் கடுமையாக எதிர்த்தன.
ஆனால் பின்னர், 1994 முதல் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசுகள் கடந்த 20 வருடங்களாக ஆட்சியில் இருந்தபோதும் அதை மாற்ற முயற்சிக்கவில்லை. அதேபோல, விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை எதிர்த்த கட்சிகள், அதிலும் குறிப்பாக சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய மற்றும் சிறிய கட்சிகள், இந்த விகிதசாரப் பிரிதிநிதித்துவ முறை இருந்தால்தான் தம்மிலும் இரண்டொருவர் நாடாளுமன்றம்; செல்லக்கூடியதாக இருக்கும் என்பதால், அதைப்பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொண்டன.