இலங்கையில் நடைமுறையில் உள்ள மாகாண சபைகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கருத்துக்கள் தற்போதைய அரசாங்கத்தின் ஒரு பகுதியினரிடம் இருந்து கிளம்பி இருக்கிறது. அதன் பொருட்டு 1987இல் செய்து கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக அரசியல் அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் எனவும் அவர்கள் கோருகிறார்கள்.
அவர்களது இந்தக் கோரிக்கை சம்பந்தமாக பிரதான எதிர்க்கட்சியான சஜீத் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியோ, ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது ஜே.வி.பியோ கூட வாய் திறக்காது மௌனமாக இருக்கின்றன. ஏன் வடக்கு கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட சிங்களப் பேரினவாதிகளின் இந்தக் கோரிக்கை பற்றி தமது வன்மையான எதிர்ப்பைத் தெரிவிக்காமல் ஆமை தலையை ஓட்டுக்குள் இழுத்து வைத்திருப்பது போல தலையை இழுத்து வைத்திருக்கின்றது.