நினைவுகளை உறுத்தியவை - (1)
எஸ்.எம்.எம்.பஷீர்
"நான் , நிழல்களின் இராணுவத்துடன் , தோல்வியின் வீதி ஓரமாக திரும்பிக் கொண்டிருக்கிறேன்
இபொழுது எல்லாமே முடிந்துவிட்டன , என்னுடைய பயணத்தின் இறுதி கட்டம் -உறுதியானது - நெருங்கிவிட்டது."
( சேகுவாரா தனது மனைவிக்கு தன்சானியாவில் இருந்து எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டது )
இலங்கையில் ஜே வீ பீ எனப்படும் மக்கள் ஐக்கிய முன்னணியின் ஸ்தாபகரும் தலைவருமான ரோகண விஜயவீரா மாறு வேடத்தில் தலைமறைவாக உலப்பனையில் வாழ்ந்த பொழுது பிரிகேடியர் ஜானக பெரேராவினால் கைது செய்யப்பட்டார்.
அங்கிருந்து கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார் , சித்திரவதை செய்யப்பட்டார் , பின்னர் பொரள்ளையில் உள்ள கனத்தை மயானத்துக்கு , அரைகுறை உயிருடன் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு உயிருடன் எரிக்கப்பட்டார் என்று அண்மையில் செய்திகள் மிக விரிவாக வெளி வந்துள்ளன.
அவரை கனத்தை மயானத்தில் வைத்தே கொன்றார்கள் என்று எனது இடதுசாரி நண்பர் 1990 களில் இலங்கையில் கொழுபில் எனது வீட்டில் வைத்தே என்னிடம் கூறினார் . அதுபற்றி நான் முன்னமே எழுதியும் இருந்தேன்(http://www.bazeerlanka.com/2011/03/description-whither-jvp-racist-party.html.)எனக்கு கூறிய நண்பரும் என்றோ ஒருநாள் தான் அதுபற்றி எழுதப் போவதாகவும் கூறினார். ஆனால் இதுவரை அவர் எழுதவில்லை .

படத்தில் 1980 களில் விஜேவீர தன் மனைவி குழந்தைகளுடன்
ஆனால் விஜேவீரா கொல்லப்பட்ட விதம் குறித்த செய்திகள் மாயானக் காப்பாளராக அப்பொழுது தொழில் புரிந்தவர் , இராணுவத்தில் தொழில் புரிந்த ஜே வீ பீ அனுதாபி என்பவர்களால் அப்பொழுதைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்தினா உட்பட உளவுத்துறையின் உயர் மட்ட உத்தியோகத்தவர்கள் வரை செயற்பட்ட விதம் குறித்து மட்டுப்படுத்தப்பட்ட செய்திகளே வெளி வந்துள்ளன.
ஒருவேளை இன்னமும் , பல மறைக்கப்பட்ட சங்கதிகளை வெளிக் கொணரும் நபர்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லாமல் இருக்கலாம் என்பது ஒன்று.
மற்றொன்று, உத்தியோகபூர்வமாக விஜேவீராவின் கொலை குறித்து விசாரணை செய்ய யாரும் முயற்சிக்கவில்லை , ஜே வீ பீ உட்பட.
விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்படாத நிலையில் , பல புதைக்கப்பட்ட உண்மைகள் விஜவீரா போன்ற பலரைப் பற்றி தோண்டப்படாதவரையில் , தெரிவிக்கப்பட்டவை மட்டுமே சரித்திரம் ஆகின்றன!.
எது எப்படியாயினும் , இலங்கையின் சரித்திரத்தில் சமூகப் புரட்சியில் ஆயுதத்தின் மீது நம்பிக்கை வைத்தவர் விஜேவீரா , அவரைப் போலவே பிரபாகரனும் இன விடுதலைக்கு ஆயுதத்தின் மீது நம்பிக்கை வைத்தார். இருவரும் எப்படியோ கொல்லப்பட்டு போனார்கள்.
ஆனால் இவர்கள் இருவரும் பலரைக் கொன்றனர் , அப்பாவிகள் கருத்து முரன்பட்டோரைக் கொன்றனர்.
சமூக மாற்றங்களுக்கான ஆயதப் புரட்சி சேகுவாரா காலத்து ஆட்சிக் கெதிரான போராட்டங்களிலிருந்து மாறுபட்டு வந்திருக்கிறது. மக்களுக்கான ஆயுதப் போராட்டங்கள் , சகிப்புத்தன்மையற்ற , மாற்றுக் கருத்துக் கெதிரான , சுய இன அழிப்பு செய்யும் , அப்பாவிகளை அழித்தொழிக்கும் பண்பியல்புகளை நியாயங்களாக்கிக் கொண்டன.
ஆனால் இலங்கையின் அரசியல் வரலாற்றில் விஜெவீராவும் முறையான ஒப்பீடின்றி சேகுவரா என்றே அழைக்கப்பட்டார். அவரின் மனைவி பிள்ளைகள் அவருடன் ஏதோ ஒரு விதத்தில் புதைக்கப்பட்டுப் போனார்கள் , அல்லது புதைக்கப்பட விரும்பினார்கள்
தொடரும்.
No comments:
Post a Comment