எஸ்.எம்.எம்.பஷீர்
"தேச பக்தி என்பது எல்லா வேளையிலும் உனது நாட்டிற்கும் , தகுதியான பொழுது உனது அரசாங்கத்துக்கும் ஆதரவளிப்பதாகும்" மார்க் ட்வைன்
இலங்கை சுதந்திரம் (சுய ஆட்சி ) அடைந்த பின்னர் , அதன் இறையாண்மையை சுதேசிய மக்கள் அரசியல் அமைப்பு மூலம் உறுதி செய்தனர். ஆனாலும் , அந்த இறையாண்மையை பிரித்தானிய மகாராணியின் பொதுநலவாய நாடுகளின் கூட்டாட்சியின் அங்கமாகவே இருந்தது.
இலங்கை மக்களின் இறையான்மை பிரித்தானிய மகாராணியுடன் இணைக்கப்பட் டிருந்ததை 22ஆம் திகதி மே மாதம் 1972 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயகா முடிவுக்கு கொண்டு வந்தார். இலங்கையை சோசலிசக் குடியரசாக்கினார்.சிலோன் ஸ்ரீ லங்காவாக மாற்றப்பட்டது.
1971 ஆம் ஆண்டு ஜே வீ .பீ யின் ஆயுதப் புரட்சி , இலங்கையின்- சிலோனில் - இடம்பெற்ற பொழுது , ஆட்சி அதிகாரத்துக்கு சவாலாக அமைந்த பொழுது , பிரித்தானிய அரசு ஜே வீ பீ . கிளர்ச்சிக்காரர்களை அடக்க உதவி புரிந்தது.
இந்தியாவின் உடனடி வான்படை உதவி கூட இலங்கைக்கு தேவைப்பட்டது . ஆனால் அண்டை நாடென்ற வகையில் அந்த உதவி நாடப்பட்டது. இந்தியாவும் பிரித்தானியாவும் கூட ராஜீய ரீதியில் இலங்கைக்கு அழுத்தங்களை வழங்கின. அயல் நாடு என்ற வகையில் இலங்கை நட்புறவு பூண்ட நாடுகள் புலிகளுடனான இறுதி யுத்தத்திலும் தமது நிபுணத்துவ உதவிகளை வழங்கின என்று சொல்லப்படுகிறது.
ஆனால் அத்தகைய உதவிகள் யாவும் இறையாண்மையின் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கை அல்ல. மாறாக அனுமதியுடனான ஆபத்பாந்த நடவடிக்கைகளாகும் .
1987 இந்தியாவின் ஆட்புல நலன்களை முன்னிட்டு வடக்கு கிழக்கு தமிழ் இளைஞர்களை ஆயுதமயப்படுத்தி இலங்கையின் இறைமையில் தலையிடும் தந்திரோபாயங்களை இந்தியா பின்னர் வகுத்துக் கொண்டது. அதன் அந்தரங்க அயல் உறவுக்கொள்கை 1977 , 1983 இனக் கலவரங்களின் பின்னர் படிப்படியாக இலங்கையின் மீதான ராஜீய அழுத்தங்களுடன் இந்தியா தனது வல்லாதிக்க வன்முறையைக் காட்ட ஆரம்பித்தது,
1987 ஜூன் மாதம் ஆரம்பத்தில் "ஆபரேஷன் பூமாலை" என்று பெயரிட்டு உணவுப் பொதிகளை ஆகாய ஆட்புல எல்லைக்குள் அதுதுமீறி பிரவசித்து தனது அதிகாரத்தை இந்தியா காட்டியது. அதுதான் இலங்கையின் இறையாண்மை மீதான முதலாவது அத்துமீறலாகும். சின்னம் சிறிய நாடான இலங்கையை அடுத்து தெற்கில் குண்டுகள் வீசத் தயங்க மாட்டோம் என்று வல்லாதிக்க வன்மையை இந்தியா காட்டிய தருணம் அது.
இலங்கை அடி பணிந்தது. இலங்கை இந்திய ஒப்பந்தம் 1987 கைச்சாத்தானது. இந்தியப் படைகள் வடக்கு கிழக்கில் குவிக்கப்பட்டன. இலங்கை மக்களின் சுயாதிக்க இறையான்மையின் சாசனமான அரசியல் அமைப்புச் சட்டம் , மக்களின் பிரத்தியோக அனுமதி இன்றி திருத்தப்பட்டது.
இலங்கையின் இறையாண்மை கொண்ட வடக்கு கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம் சிங்கள மக்களை ஆலோசிக்காது- அம்மக்களின் அரசியல் பிரதிநிதிகளை புறந்தள்ளி - இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டது.
13வது திருத்தச் சட்டம் இந்திய வல்லாதிக்கத்தினால் திணிக்கப்பட்டது.
13 வது திருத்தச் சட்டத்தின் சாதக பாதகங்கள் , நடைமுறைப்படுத்தல்கள் என்பவற்றிற்கப்பால் இலங்கை மக்களின் இறையான்மை மீது - அரசியல் அமைப்பின் மீது- அந்நிய நாடு "ஆக்கிரமிப்பு" செய்த முதல் நிகழ்வு 1987 இல் அரங்கேற்றப்பட்டது.
வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தொடர்பில் அன்றைய கால் கட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதனை எதிர்த்தது. மறுபுறம் இந்திய ஏகாதிபத்திய கைக்கூலியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாறியது பிறிதொரு கதை.
இந்திய அமைதி காப்பு படை உண்மையில் இந்திய ஆக்கிரமிப்பு படையாகவே நாட்டினுள் நுழைந்தது. சர்வதேச சட்டங்களை கவனத்தில் கொண்டு உள்நுழைய ஒப்பந்தங்களை வகுத்துக் கொண்டது.
இலங்கையில் தனக்கு ஆதரவாக , தாங்களே உருவாக்கி வளர்த்த தமிழ் குழுக்கள் பலவற்றை (புலிகளை தவிர்த்து) தங்களின் துணைப்படையாக உருவாக்கியது.
ஆரம்பத்தில் துணைப்படைகள் சிங்கள முஸ்லிம் மக்களுக்கு சொல்லொன்னா துன்பங்களை இழைத்தன. பின்னர் இந்தியப் புலிகளின் மோதல்கள் உக்கிரமடைய பெரும்பான்மை தமிழர்கள் புலிகளை ஆதரிக்க தமிழர்களையும் தாக்கத் தொடங்கினர்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இந்திய ஆட்சியின் கீழ் வந்தன.இந்தியப் படைகளுடன் சேர்ந்து தமிழர்கள் மீதும் ஏனைய சமூகங்கள் மீதும் "த்ரீ ஸ்டார்" என்ற பெயரில் உருவான தமிழ் துணைப்படைகள் செய்த அட்டூழியங்கள் , அழிச்சாட்டியங்கள் மன்னிக்க முடியாதவை.
இந்தியப் படைகளின் வாகன சோதனைச் சாவடிகளில் தமிழ் முஸ்லிம் மக்களின் வாகனங்களை மறித்து கப்பம் கோரியது ..
வீடுகளுக்குள் புகுந்து பெண்களைக் கற்பழிப்பு செய்தது ,
கொள்ளைகளும் கொலைகளும் செய்தது.
இன்றுபோல் சர்வதேச மனித உரிமை நீதிகோர "தகுதியான " குற்றங்களாகும்!.
இந்தியப் படைகள் வெளியேறிய பின்னர் புலிகள் பிரேமதாசாவுடன் சேர்ந்து பழிக்குப் பழிவாங்க செய்த குற்றங்களும் , மனித உரிமை மீறல்கள் என்ற வகையில் , கொடூரங்கள் என்ற வகையில் வேறுபட்டவையல்ல.
இன்றுபோல் சர்வதேச மனித உரிமை நீதிகோர "தகுதியான " குற்றங்களேயாகும் .!
பின்னர் மீண்டும் தமிழ் தரப்பின் நீண்ட தொடர்பாடல் மூலம் நோர்வே இலங்கையின் இறையாண்மையில் மேற்குல ராஜீய தந்திரங்களுடன் மிக நாசூக்காக உள்ளே வர வைக்கப்படுகிறது. இலங்கை அரசு மேற்குலக ராஜீய அணுகுமுறைகளுக்கு வலி சமைக்கிறது.
முஸ்லிம்கள் மீண்டும் புறக்கணிக்கப்படுகிறார்கள் மூன்றாம் தரப்பு நிராகரிக்கப்படுகிறது.
பொதுக்கட்டமைப்பு என்னும் அப்பட்டமான இறையாண்மை மீறல் தேசியவாத சக்திகளால் தோற்கடிக்கப்படுகிறது!
புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகாரம் என்னும் அப்பட்டமான இறையாண்மை மீறல் தேசியவாத சக்திகளால் தோற்கடிக்கப்படுகிறது!
புலிகள் தங்களின் அத்து மீறல்களை கட்டவிழ்த்து விடுகின்றனர். மாற்று இயக்கங்கள் தடை செய்யப்படுகிறன. எதிர் கருத்துக் கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் , ஆதரவாளர்கள் கொல்லப்படுகிறார்கள் , முஸ்லிம்கள் மீதான புலிகளின் அத்துமீறல்கள் மீண்டும் 1990 களை ஞாபகமூட்டுகின்றன.
இன்றுபோல் சர்வதேச மனித உரிமை நீதிகோர "தகுதியான " பலவித குற்றங்களை புலிகள் இழைக்கிறார்கள் !
புலிகளின் மிலேச்சத்தன பயங்கரவாத ஆட்சியும் ஆதிகாரமும் அழித்தொழிக்கப்படுகிறது !
இன்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அமெரிக்க வல்லாதிக்க நிகழ்ச்சி நிரலை தீர்மானமாக்கியிருக்கிறார்.
பரனகமாவின் அறிக்கைகளை குப்பைக் கூடைக்குள் தூக்கி எறிய பணித்திருக்கிறார்.
முதலில் இலங்கையின் நீதித் துறையில் சர்வதேசம் எனப்படும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் சகபாடிகளும் கை வைத்துள்ளனர் .
"கலப்பு" பொறிமுறை இலங்கையில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இன்னும் 18 மாதங்களில் ஐ.நா மனித உரிமை ஆணையகம் மீண்டும் இலங்கை எப்படி நடந்து கொண்டது குறித்து ஆயப்படும் என்று சொல்லப்படுகிறது.
வல்லாதிக்க சக்திகளின் வக்கிரங்களை வாய் திறந்து கேட்க முடியாத மனித உரிமை அமைப்புக்கள் இலங்கைக்குள் மீண்டும் மூக்கு நுழைக்கத் தொடக்கிவிட்டன.
மேற்குலக நாடுகளின் அரைக் காலனித்துவ நாடாக இலங்கை மாறி வருகிறது.
01/11/2015
No comments:
Post a Comment