'நாகேந்திரராஜா கெட்டிக்காரன். அவன் எதைக்கேட்டாலும் தந்திடுவான்.
எதைச்
சொன்னாலும் அதைச் செய்து தருவான். அப்பிடியொரு தங்கமான குணம் அவனுக்கு'
என்று சொல்லிச் சொல்லியே கணவரின் சொத்தையெல்லாம் அவருடைய நண்பர்களும்
சகோதரர்களும் தந்திரமாக அபகரித்துக்கொண்டார்கள்' என எப்போதும் சொல்லிச்
சொல்லிக் கவலைப்படுகிற தையல்நாயகி அம்மாவைப்போலத்தான், தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பை நல்லசக்தி என்று சொல்லிச் சொல்லியே இந்தியாவும் மேற்குலகமும்
தங்களுடைய காரியங்களை இலங்கையில் சாதித்துக் கொண்டிருக்கின்றன.

தமிழ்ச்சனங்கள் தையல்நாயகி அம்மாவைப்போல எல்லாத்தையும் இழந்து புலம்புகின்ற நிலையில் உள்ளனர்.
தான் பொறுப்புச்சொல்லவேண்டிய அல்லது தன்னுடைய பொறுப்புக்குரிவர்களை அந்தரிக்க விட்டுவிடடு பிறருக்குச் சேவகம் செய்கிற காரியம் ஒருபோதும் நல்லதல்ல.
தாய்யைப் பிச்சையெடுக்க விட்டுவிட்டு மகன் அன்னதான சத்திரம் வழங்குவதற்கு ஒப்பானது.
ஆனால் இப்படித்தான் பொறுப்பானவர்களின் பல காரியங்கள் நடக்கின்றன.
அடுத்து வரப்போகிற ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களையும் விட அமெரிக்காவும், இந்தியாவும், சீனாவும் தான் அதிகமாக இலங்கையில் வேலைசெய்யப் போகின்றன.
தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முதலே, அமெரிக்க ஏஜென்சிகள் இங்கே (இலங்கையில்) மும்மரமாக வேலைசெய்யத் தொடங்கிவிட்டனர்.
ஆட்சி மாற்றம் தேவை என்ற கோதாவில் ஊடகங்கள், அரசியற்கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் என பல வடிவங்களில் இந்த வேலைகள் ஆரம்பமாகிவிட்டன.
இதற்காக தாராளமாக நிதி வாரி இறைக்கப்படுகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவரவர் நன்றாகப் பிழைக்கப்போகிறார்கள்.
பெரிய நாடுகளுக்கு இந்த மாதிரி சில்லறைகளை எறிவதொன்றும் பெரிய விசயமில்லை.
றாலைப் போட்டு சுறாவைப் பிடிக்கும் கைங்காரியம் இது.
இங்கே உள்ள பிழைப்புவாதிகள் சனங்களை வைத்து பிழைப்பதற்கு இதுவுமொரு சந்தர்ப்பம்.
தமது மக்களுக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனம் பிழைக்க வேணும் என்று நினைத்து இந்த மாதிரி பிறருக்கு விலை போகிறார்கள்.
இலங்கைத் தீவின் அரசியல் அவலம் இப்படித்தான் இருக்கு.
இந்தச் சில்லறைகளை வைத்தே இலங்கையை தங்கள் கால்களுக்கும் இடையில் கொண்டு வருவதற்கு இந்தப் பெரிய நாடுகள் போட்டி போடுகின்றன.
யாருடைய கால்களுக்கு இடையில் தங்கள் தலையை வைப்பது என்பதுதான் இவர்களுடைய பிரச்சினை.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் இந்தியாவினுடைய மடியில் சுகமாக உறங்குவதற்கு விரும்புகிறது.
ஆனால் அதையும் விட அமெரிக்காவின் மடியில் உறங்குவதே நல்லது என்று புலம்பெயர் தமிழ்ப் பிரமுகர்களும் தமிழரசுக் கட்சியினுடைய பிரபலங்களும் விரும்புகின்றன.
இந்தியாவோடு உறவு வைத்தால் எலும்புத்துண்டே கிடைக்கும், அமெரி;க்காவோடு உறவு கொண்டாடினால் புரியாணி சாப்பிடலாம் என்று சொல்கிறார்கள் இந்தப் பிரபலங்கள்.
இதைப்போலத்தான் தென் இலங்கையிலும் அமெரிக்கக் காவடியை ஆடுவதற்கு விரும்புகிறது ஐ.தே.க. இதற்கு தோதாகத் தாளம் போட முயற்சிக்கின்றன அங்குள்ள சில்லறைகள்.
இதற்குள் மகிந்த அணியோ சீனாவுக்காக காவடியை ஆடுகிறது என்று குற்றச்சாட்டு வேறு.
இந்தத் தடவையும் மகிந்தவுக்கு எதிராக, அவரைக் கவிழ்க்கும் நோக்கோடு யுத்தக் குற்றச்சாட்சிகளை ஐ.நாவோ, அமெரிக்காவோ அரங்கேற்றக்கூடும்.
இப்படியே எங்கள் தேசம் மாறிப்போய்க் கிடக்கிறது. தையல்நாயகி அம்மாவைப்போல எல்லோரும் புலம்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
மூலம் http://www.thenee.com/html/211114-2.html
No comments:
Post a Comment