உறவும் பகையும் உயிர்க் கொலையும் : புலிகளும் முஸ்லிம்களும் -
எஸ்.எம்.எம்.பஷீர்
வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவு: ஒரு முன்நிகழ்வு (Flashback)
வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழர்களுடன் மிக நெருக்கமாகவும் நல்லுறவுடனும் வாழ்ந்தனர் என்பதை இரு பகுதியினரும் ஏற்றுக் கொள்கின்றனர். குறிப்பாக குடா நாட்டில் வாழ்ந்த தமிழர்களும் முஸ்லிம்களும் மிக நெருக்கமாகவும் அந்நியோன்யமாகவும் எவ்வித வேறுபாடுமின்றி வாழ்ந்ததாக இன்றுவரை கூறுகின்றனர். ஆனால் மாறாக கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் - தமிழர்களுக்கிடையே மனக்கசப்புக்கள், சிறு சிறு பிணக்குகள் காலங்காலமாக இடம் பெற்றிருந்தாலும், அவையாவும் பொருளாதார சமூக நடவடிக்கைகளில் காணப்பட்ட பரஸ்பர தங்கியிருத்தல் காரணமாக இலகுவில் மறக்கப்பட்டு அல்லது சமரசம் செய்யப்பட்டு பொதுவான சகஜீவிதம் பேணப்பட்டு வந்தது. அவ்வாறான பிணக்குகள் இரண்டு சமூகத்தினரதும் மொத்த சமூகப் பிரச்சினையாக இரண்டு இனங்களுக்கிடையிலான பிரச்சினையாகப் பார்க்கப்படவில்லை. மேலும் அவ்வாறான பிணக்குகளின் விளைவாக ஏற்பட்ட சிறு சிறு கைகலப்புக்கள் கூட, அவ்வப் பிரதேச தனி நபர்களின் அல்லது அப்பிரதேச மக்களின் தனிப்பட்ட பிணக்காக அல்லது கைகலப்பாகவே கருதப்பட்டது.
முஸ்லிம்களின் அடையாள பரிமாணமும் புலிகளின் இடையீடும்
முஸ்லிம்களை தமிழர் என்ற இனமாகவே தமிழர்களும், தமிழ் இயக்கங்களும் புலிகளும் வகைப்படுத்தினர். இந்த வகைப்படுத்தல் மூலம் புலிகள் மட்டுமல்ல சகல இயக்கங்களும் முஸ்லிம்களின் தனித்துவ அடையாளத்தை இருட்டடிப்புச் செய்து வந்துள்ளனர். அந்த வகையில் புலிகள், முஸ்லிம்களை கிறிஸ்தவ தமிழர்கள் போன்று தமிழ் இனத்தின் ஒரு மதக் குழுமமாக கருதிச் செயற்பட்ட பொழுதும், புலிகளின் அந்த அணுகுமுறை நடைமுறையில் பரந்த முஸ்லிம் சமூகத் தளத்தில் அங்கீகரிக்கப்படவில்லை. ஆகவே புலிகள் முஸ்லிம்களின் அதிருப்தியைப் பொருட்படுத்தாது தமது ஆயுத ஆதிக்க வலிமையை முஸ்லிம்கள் மீது செலுத்தினர். ஆனால் கிழக்கில் முஸ்லிம்களின் எண்ணிக்கைப் பலம் புலிகளுக்கு சவாலாக அமைந்தது. அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டம் (திகாமடுல்ல) மிகுந்த சவாலாக அமைந்தது. பொதுவாக தமிழ் இயக்கங்களின் ஆயுத மேலாதிக்கம் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகள் என்பன முஸ்லிம்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது.
மிகப் பிரதானமாக முஸ்லிம்கள், தமது மதத்தை அடையாளக் கூறாக முன்னிறுத்தும் ஒரு தனித்துவமான சமூகம் என்பதை அறிந்தும் புலிகள் முதலில் அலட்சியப்படுத்தினர். தங்களின் போராட்டங்களுக்கு உறுதுணையாகவிருந்த ஒரு சில கிறிஸ்தவ மதகுருக்களைப் போலவும், பரந்தளவில் ஆதரவளித்த கிறிஸ்தவ மக்களைப் போலவும் முஸ்லிம் சமூகத்தை அவர்கள் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர். அந்த வகையில் அவர்கள் தங்களின் இயக்கங்களில் முஸ்லிம் இளைஞர்களையும் உள்வாங்கினர். குறிப்பாக இந்திய அமைதிப் படை இலங்கையின் வடக்கு கிழக்கில் காலூன்றியிருந்த காலப்பகுதியில் ஏனைய தமிழ் இயக்கங்களின் அடாவடித்தனங்கள் முஸ்லிம்கள் மீது அத்துமீறிச் சென்ற பொழுது, புலிகள் இந்திய அமைதிப்படையினருடன் முரண்பட்டு சண்டை செய்ய நேர்ந்த பொழுது, முஸ்லிம்கள் புலிகளுக்கு ஆதரவு வழங்கினர் . அந்தக் காலகட்டத்தில் புலிகள் முஸ்லிம்களைப் பற்றி எவ்வாறான அபிப்பிராயம் கொண்டிருந்தார்கள் என்பதை ஒரு உதாரணத்துக்கு, கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் கிராமமான காங்கேயன் ஓடையைச் சேர்ந்த(காத்தான்குடி) கபூர் முகம்மது அலியார்-முகம்மது சலீம் புலிகளின் இயக்கத்தில் சேர்ந்து மடிந்த சம்பவம் பற்றி புலிகளின் குறிப்புரையின் சில பகுதிகள் நோக்கற்பாலவை.
"மதத்தால் வேறுபட்டாலும் மொழியால் இணைந்து கொண்டவன் வீரவேங்கை கபூர் முகம்மது அலியார் – முகம்மது சலீம், (வீர உயிர்ப்பு: 1972. வீரச்சாவு: 1990.06.11.)
மதம், இனம் இவைகள்தான் எங்களைப் பிரித்திருக்கின்றது. ஆனால் மொழியால் இணைக்கப்பட்டவர்ளாகின்றோம். தமிழ் இளைஞர்கள் சிங்கள இராணுவத்தால் மட்டுமல்ல இந்திய இராணுவத்தால் மட்டுமல்ல இனத்துரோகிகளாலும் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் நிறைய உண்டு. அதேபோன்றுதான் இந்தியப்படைகள் நேசக்கரம் நீட்டி தமிழீழ மண்ணில் அராஜகம் நடாத்திக் கொண்டிருந்த வேளைகளில் இந்தியச் சிப்பாய்களினாலும் இனத்துரோகிகளினாலும் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள்.
எப்படியான வேலைகள் இருந்தாலும் மதம் என்ற ஒன்றை உயிரெனக் கொண்டிருப்பவன். இறைவணக்க வேளை வந்ததும் பள்ளிவாசலை நாடத் தவறாதிருந்தான்.
விடுதலைப் புலி வீரர்கள் அன்று மட்டக்களப்பு அம்பாறை மண்ணிலிருந்து உயிர் தப்பிப் பிழைப்பதென்பது மிக அரிதிலும் அரிது.
அதனால் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வாழ்ந்த இஸ்லாமியத் தமிழர்கள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் மீது இரக்கம் காட்டத் தொடங்கினார்கள். பகல்வேளைகளில் முஸ்லிம் வீடுகளில் தங்குவதும் இரவு வேளைகளில் ஆயுதங்களுடன் தங்கள் கடமைக்குச் செல்லப் புறப்படுவதும் புலி வீரர்களின் செயற்பாடாக இருந்தமையினால் இஸ்லாமியத் தமிழர் மனங்களில் விடுதலைப் புலிகள் போராட்டம் சம்பந்தமான கருத்துக்கள் விதைக்கப்படலானது."
மேற்கண்டவாறு முஸ்லிம்களின் உதவி ஒத்தாசை, முஸ்லிம் இளைஞர்களின் போராட்ட பங்களிப்புப் பற்றி வரலாற்றுப் பதிவுகளை மேற்கொண்ட புலிகள், சலீம் என்ற முஸ்லிம் புலி இளைஞன் இறந்த அதே ஆண்டு (1990) ஆகஸ்து மாதம் காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டோர் மீது படுகொலைகளைச் செய்தனர்.
புலிகள் முஸ்லிம்களின் தனித்துவ அடையாளத்தை பகிரங்கமாக அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தினர். மறுபுறம் நடைமுறையில் முஸ்லிம்களை தமிழரில் ஒரு பகுதியினராகவே கருதிச் செயற்பட்டனர். அதற்கு உதாரணமாக தமிழ் நாட்டில் புலிகளின் சார்பில் கிட்டுவும் முஸ்லிம்கள் சார்பில் முன்னாள் கல்வி அமைச்சர் பதியுதீன் தலைமையில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர் எம்.ஐ.எம்.முஹிதீனும் சேர்ந்து 1988ல் வெளியிட்ட இணை அறிக்கையில் (Joint Statement), " ஸ்ரீலங்காவில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தமிழைப் பேசினாலும் அவர்கள், தமிழ் தேசிய இனத்தின் ஒரு தனித்துவமான ஒரு இனக் குழுமம்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது, முஸ்லிம் தரப்பிபினர் அந்த அறிக்கையில் முஸ்லிம்களின் தனித்துவத்தைக் குறிப்படும் சொற்றொடரின் ஊடாக முஸ்லிம்கள் மொத்த தமிழ்த் தேசிய அடையாளத்துடன் சமரசம் செய்திருந்தனர். புலிகள் அந்த இணை அறிக்கையில் முஸ்லிம்களின் உரிமைகள் பற்றிய பல கோரிக்கைகளுக்கு விட்டுக் கொடுப்புக்கள் செய்திருந்தனர்.
• முஸ்லிம் மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பகுதியில் ஏனைய தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய தாயகம்போல் தமக்கும் தாயகமே என்று புரிந்துள்ளார்கள்.
• முஸ்லிம் மக்கள் தமது தாயகத்தில் சிறுபான்மையினராக உள்ளதால் அவர்களது வாழ்க்கை அச்சம், பாதுகாப்பின்மையிலிருந்து சுதந்திரமாக வாழ்வதனை உறுதிசெய்வது முக்கியமானதாகும். புலிகள் இதனை உறுதிசெய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதுடன் எதிர்காலத்தில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் சட்டவாக்கத்தினை உருவாக்குவதில் ஒத்துழைப்பு நல்குவார்கள். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் சனத் தொகையில் 33 வீதமாகவும் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 18 வீதமாகவும் உள்ளனர். அவர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பினை உறுதிசெய்யவும், நீதியான அதிகாரப் பகிர்வினை அனுபவிப்பதனை இயலுமாக்கவும்,மாகாண சபையிலும் அதன் மந்திரி சபையிலும் 30 வீதத்திற்கு குறைவில்லாத பிரதிநிதித்துவத்திற்கு உரித்துடையவர்களாக இருக்க வேண்டுமென்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
• எதிர்கால நிலப்பங்கீடு எல்லாவற்றிலும் முஸ்லிம் மக்கள் 35 வீதத்திற்குற்கு குறையாத விழுக்காட்டினை கிழக்கு மாகாணத்திலும் 30 வீதத்திற்கு குறையாத விழுக்காட்டினை மன்னார் மாவட்டத்திலும் 5 வீதத்திற்கு குறையாத விழுக்காட்டினை ஏனைய பகுதிகளிலும் பெறுவதற்கு உரித்துடையவர்கள் ஆவார்கள் என்பதனை ஏற்றுக்கொள்ளல்.
• முஸ்லிம் ஒருவர் வடக்கு, கிழக்கு மாகாணசபை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படாத இடத்து முஸ்லிம் ஒருவர் பிரதி முதலமைச்சராக மேற்படி சபைக்கு நியமிக்கப்படுவதனை உறுதிசெய்யும் சட்ட எற்பாடுகள் செய்யப்படவேண்டும்.
கிழக்கில் புலிகளின் இனப்படுகொலைகள்
புலிகள் முஸ்லிம்களைக் கொடூரமாக இருட்டில், கிராமங்களில்இ பள்ளிவாசல்களில் புகுந்து கொன்ற பொழுதும் அல்லது முஸ்லிம்களைத் தனிநபர்களாக, குழுக்களாகக் கடத்திச் சென்று கொன்ற பொழுதும் பழியினை மூன்றாவது சக்தி மீது சுமத்துகின்ற கைங்கரியத்தை மிகக் கச்சிதமாகவே செய்து வந்தனர். அதற்கான சர்வதேச உள்நாட்டுத் தமிழ்த் தேசிய ஊடக பலமும் அவர்களுக்கிருந்தது. ஆனால் காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலைக்கான புலிகளின் தடயங்களைக் கண்டு கொள்ள முடிந்தது. இப்படுகொலைகளினைப் புலிகள் வழக்கம் போல் மறுத்துரைக்க முற்பட்டாலும் அவர்கள் அதில் வெற்றி காண முடியவில்லை. அதனைத் தொடர்ந்து ஏறாவூர் சதாம் ஹுசைன் நகர், மிச் நகர், ஏறாவூரின் வடக்கு எல்லாப் பகுதி ஆகியவற்றில் புலிகள் முஸ்லிம் மக்கள் மீதான இனவழிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்தனர். குறிப்பாக 1990ம் ஆண்டு முழுவதுமே புலிகளின் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலைக்கு கிழக்கு உட்பட்டிருந்தது. அதன் நீட்சியாகவே அவ்வாண்டின் இறுதிப் பகுதியில் (அக்டோபர்) புலிகள் வடக்கிலுள்ள முஸ்லிம்களை இனச் சுத்திகரிப்பு செய்தனர்.
புலிகள், இந்தியப் படைகளை இலங்கையிலிருந்து பிரேமதாசா உறவுடன் வெளியேற்றி விட்டு ஏனைய தமிழ் ஆயுத இயக்கங்கள், அவர்களின் கட்சிகள், தமிழர்களின் ஜனநாயக் கட்சிப் பிரதிநிகள், முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் பதவிநிலை பிரதிநிகள் மேலும் அக்கட்சிகளில் தீவிரமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என அறியப்பட்டோர்களை வடக்கு கிழக்கிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் இறங்கினர். அதற்காக முதலில் வடக்கு- கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.வை.எம். மன்சூரை கடத்திக் கொன்றனர். மேலும் அவருடன் சேர்த்து சாதாரண முஸ்லிம் சிவிலியன்கள் பலரையும் கொன்றனர். கிழக்கில் இனிமேல் முஸ்லிம் அரசியல் சாத்தியமா என்ற நிலை காணப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் தங்களின் உயிரைப் பாதுகாக்க அங்கிருந்து வெளியேறித் தெற்கிலே குடியேறினர்.
புலிகளுக்கும் பிரேமதாசாவிற்கும் இடையிலான உறவு முறிந்த கையோடு குறிப்பாக 1990 ஜூலையில் புலிகள் தங்களின் கிழக்கு முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்களை ஆரம்பித்து கிழக்கெங்கும் ஒரு பயப் பீதியை உண்டாக்கினர். அதன் பின்னர் மிக முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்கள் அரசியல் - இராணுவ ரீதியில் புலிகளின் தமிழ்த் தாயக கனவுக்கு உடனடி இடையூறாக இருப்பதனை உணர்ந்ததன் மூலம் புலிகள் அங்கு தங்களின் இனவழிப்பு நடவடிக்கைகளை அடுத்தடுத்து நடத்தி முடித்தனர். அதன் மூலம் முஸ்லிம்களின் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி முஸ்லிம்கள் அங்கிருந்து பயத்தின் காரணமாக வெளியேறிச் செல்வதுடன், மேலும் கிழக்கின் ஏனைய பகுதிகளிலும் கிழக்கின் எல்லைப்புறப் பகுதிகளிலும் தாக்குதல்களை ஏற்படுத்துவதன் மூலம் மொத்தமாகவே கிழக்கில் வேறெங்கும் அவர்கள் சென்று குடியேறுவதைத் தடுக்கலாம் என்றும், கிழக்கில் முஸ்லிம் மக்களுக்குள் ஏற்படுத்தப்படும் அச்சத்தைக் கொண்டு இறுதியில் மொத்தமாக முஸ்லிம்களைக் கிழக்கிலிருந்து விரட்டலாம் என்றும் புலிகள் திட.டமிட்டிருந்தனர்.
அந்தப் பின்னணியில் அக்காலகட்டத்தில் கிழக்கு முஸ்லிம்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதல்கள் சிலவற்றினை இங்கு சுட்டிக்காட்டுதல் அவசியமாகிறது.
7 ஜூலை 1990 புதூரில் 17 முஸ்லிம்கள் கொலை.
15 ஜூலை 1990ல் 19 பஸ் பிரயாணிகள் கிரான்குளத்தில் இறக்கிக் கொலை.
19 ஜூலை 1990ல் 69 ஹஜ் யாத்திரிகர்கள் அவர்கள் வீடு திரும்பும் வழியில் ஒந்தாச்சிமடத்தில் சுட்டுக்கொலை.
21 ஜூலை 1990ல் 7 முஸ்லிம் இரயில் பிரயாணிகள் மட்டக்களப்பில் தனியாகப் பிரித்தெடுத்துf$ கொலை.
23 ஜூலை 1990ல் சம்மாந்துறை ஜாரியா பள்ளியில் தங்கியிருந்த 5 முஸ்லிம்கள் சுட்டுக்கொலை
3 ஆகஸ்து 1990ல் காத்தான்குடி மீரானியா, ஹுச்சைனியா பள்ளிவாசலில்களில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் 140 பேர் கொலை
11 ஆகஸ்து 1990ல் ஏறாவூரில் 127 முஸ்லிம்கள் கொலை
12 ஆகஸ்து 1990ல் சம்மாந்துறையில் வயல் வேலை செய்த 4 முஸ்லிம்கள் கொலை
ஆகஸ்து 1990ல் அக்கரைப்பற்றில் 8 முஸ்லிம்கள் கொலை
ஏறாவூர் முஸ்லிம் விவசாயிகளின் காணிகள், கால்நடைகள் என்பன புலிகளால் சூறையாடப்பட்டன. அவர்களுக்கு ஏற்பட்ட மொத்தப் பொருளாதார இழப்பு 14கோடி ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறான பொருளாதாரத்தின் மீதான தாக்குதல்கள் மூலம் ஏறாவூர் பெரும்பான்மை விவசாய சமூகத்தின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு, அவர்களில் பலர் பொலனறுவை மாவாட்டத்தில் உள்ள விவசாய கிராமங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.
இந்தப் பின்னணியில் முஸ்லிம்களின் தனித்துவ அடையாளம் பற்றிய சில குறிப்புக்கள் புலிகளின் அணுகுமுறையில் காணப்பட்ட அல்லது புலிகள் முஸ்லிம் மக்கள் மீது கொண்ட அடையாளச் சமரசமின்மையைக் கோடிட்டுக் காட்டுகிறது,
’’சோனகர்கள் (முஸ்லிம்கள்) மொத்தத்தில் தங்களைத் தமிழ் பேசும் மக்கள் என்ற வகைப்படுத்தலுக்குள் தமிழர்களுடன் ஒன்று சேர்ப்பதையிட்டுச் சீற்றம் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சேபனை ஒரு நூற்றாண்டாக இருந்து வருகிறது. ஆனால் தமிழர்கள் இன்னமும் தங்களின் சுய நலத்துக்காகவும் சௌகரியத்திற்காகவும் அரசியலில் அதிகம் பிரக்ஞை கொண்ட சோனகர்களை (முஸ்லிம்களை) ஆத்திரத்தையூட்டுகின்ற வகையில் ‘தமிழ் பேசும் மக்கள்’ என்ற வகுப்பாகக் குறிப்பிடுகிறார்கள்" என்று மறைந்த குமார் பொன்னம்பலம் குறிப்பிட்டிருந்தார்.இலங்கையில் முஸ்லிம்கள் தங்களைத் தாங்களே சோனகர்கள் என்று அழைப்பதில்லை
ஆனால் இலங்கையின் பிறப்புப் பதிவுகள் இன்றும் இலங்கைச் சோனகர், இந்தியச் சோனகர் என்ற வகைப்படுத்தல்களைக் கொண்டிருக்கின்றது. இங்கு சேர். பொன்னம்பலம் ராமநாதன் கிளப்பிய முஸ்லிம்களும் தமிழர்களே என்ற சர்ச்சையையும் அதன் பின்னர் முஸ்லிம் தரப்பினர் முன்வைத்த ‘சோனகர்’ அடையாளத்தையும் கொண்டு முஸ்லிம்களை தனித்துவமாகப் பார்க்க வேண்டும் என்ற ஒரு இன அடையாள பரிமாணத்தை குமார் பொன்னம்பலத்தின் கருத்தின் மூலம் தமிழர் தரப்பில் ஒரு சரியான புரிதலாக அவதானிக்க முடிகிறது.
புலிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மிகத் தெளிவாக முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தின என்றும், முஸ்லிம்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்த அவர்களின் அறிக்கைகள் வெறுமையாக இருந்தன என்றும், புலிகளின் தரப்பு உள்நாட்டு தலைவர்களின் எழுத்துக்கள், கருத்துக்கள் ஆகியவற்றில் முஸ்லிம் விரோதப் போக்கு வெளிப்பட்டதென்றும் தமிழ் - ஆங்கில அரசியல் பத்தி எழுத்தாளர் சிவராம் (தராக்கி ) மிக விரிவாகக் குறிப்பிட்டுள்ளதுடன், புலிகளின் முஸ்லிம்களின் மீதான இனச் சுத்திகரிப்பு,இனப்படுகொலை மூலம் ஓரின தமிழ்த் தேசிய ஈழம் நிறுவும் திட்டத்தைக் கொண்டிருந்ததையும் நிறுவுகிறார்.
புலிகளின் முஸ்லிம்கள் மீதான அடையாளத் திணிப்புக் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அஸ்ரப் ஒரு வார இதழுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பட்டது தமிழர்களிடமிருந்து வேறுபடும் முஸ்லிம்களின் தனித்துவ அடையாளம் பற்றிய சர்ச்சைக்கு விளக்கமாக அமைகிறது.
"புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கும் கிழக்கில் படுகொலை செய்யப்பட்டதற்கும் காரணம், வரலாற்று ரீதியிலானதா அல்லது தற்செயலாக நிகழ்ந்த சம்பவமா?
இதற்குப் புலிகளின் இனச்சுத்திகரிப்புதான் காரணம். இலங்கை முஸ்லிம்களுக்கு 110 வருட அரசியல் பாரம்பரியம் இருக்கிறது. ஆனால் எங்களைப் பார்த்து இஸ்லாமியத் தமிழர்கள் என்று கூறி இந்திய - இலங்கை ஒப்பந்தத்திலும் இப்படியாகவே முஸ்லிம்களைப் புறக்கணித்தனர்.
உரிமையை பொதுமைப்படுத்தினார்கள். நாங்கள் இதனாலேயே அதிகம் பாதிக்கப்பட்டோம். இன அடிப்படையிலோ மொழி அடிப்படையிலோ நாங்கள் இணையக் கூடியவர்களாக இல்லை.எங்களது இறை நம்பிக்கை ஊடாக தனித்துவம் உடையவர்களாக இருந்ததுதான் அவர்களுக்கு உள்ள பிரச்சினை. இதனால்தான் கிழக்கில் முஸ்லிம்களைத் தொழுகையில் ஸஜ்தாவிலும் ருகூவிலும் சுட்டுப் படுகொலை செய்தனர். வடக்கில் 24 மணி நேரத்திற்குள் வெளியேற்றினார்கள்.‘‘ என.றார் அஸ்ரப்.
புலிகள் முஸ்லிம்களை எப்படிக் கருதுகிறார்கள் என்ற கேள்வி முஸ்லிம் தரப்பு அரசியல் சக்திகளை இறுதியான சமாதான காலத்தின் பொழுதும் உலுக்கிக் கொண்டிருந்தது. ஏனெனில் புலிகள் சமாதான / யுத்த நிறுத்த காலங்களில் தாங்களே தமிழ் மக்களின் ஏகபோக பிரதிநிதி என்பதை உறுதிப்படுத்தியே வந்துள்ளனர். பேச்சுவார்த்தைகளில் மூன்றாம் தரப்பாகத் தங்களைச் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்ற முஸ்லிம்களின் கோரிக்கையைப் புலிகள் பொருட்படுத்தவில்லை. எனவே வட கிழக்கைத் தளமாகக் கொண்ட முஸ்லிம்களின் பிரதான அரசியல் கட்சியான முஸ்லிம் காங்கிரசும் புலிகளின் அங்கீகாரத்தைப் பெற்று முஸ்லிம்களுக்குள் தமது ஏகபோக உரிமையை நிலைநாட்டவே தலைப்பட்டனர். ஏனெனில் முஸ்லிம் தலைமைகள் புலிகளை நம்பியே செயற்பட வேண்டிய நிலையிலே இருந்தனர். புலிகளின் முஸ்லிம்கள் பற்றிய மதிப்பீடு பற்றிய கருத்தும் பரஸ்பரமானதாக இருக்கவில்லை. ஒரு புறமிருந்து வெளிப்பட்டதுடன், நடைமுறையில் ஹக்கீம்-பிரபா ஒப்பந்தமும் இரு புற அரசியல் தந்திரோபாயமாகவே இருந்து.
ஹக்கீம்-பிரபா ஒப்பந்தம் தமிழர்கள் முஸ்லிம்களுக்கிடையே இயல்பு நிலையை தோற்றுவிப்பதற்கான ஒப்பந்தம் என்ற நிலையில் செய்யப்பட்ட பொழுதும் ஹக்கீம் அவ்வொப்பந்தம் குறித்து, "வடக்கு கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அதிகாரம் பெற்ற ஒரு தனித்துவ இனம் என்ற விடயத்தில் விடுதலை புலிகளின் தலைமை என்னுடன் எழுத்துவடிவில் உடன்பாட்டை செய்திருக்கின்றது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கெளரவமான அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டு சமூகங்களும் பேச வேண்டிய காலம் இன்று உருவாகியுள்ளது.எனவே முஸ்லிம் தேசியத் தலைமைகளுடன் பேசுவதற்கான முயற்சிகளில் தமிழ் தேசியத் தலைமைகள் முனைப்புக் காட்டவேண்டும்’’ என்று டிசம்பர் மாதம் 2006 ஆண்டு குறிப்பிட்டார்.சமாதான காலத்தில் புலிகளைச் சந்தித்து பேசும் தேவை சில முஸ்லிம் அரசியல்வாதிகளிற்கும் சிரேஷ்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் பேச்சுவார்த்தையில் அரச தரப்பு சார்பாகக் கலந்து கொண்ட ஆலோசகர்களிற்கும் (அன்றைய அரசில் அங்கத்துவம் வகித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கலந்து கொண்டவர்கள்) ஏற்பட்டது.
உடனடி புனருத்தாரண மனிதாபிமான தேவைகளுக்கான துணைக்குழு (Sub Committee On Immediate Humanitarian and Rehabilitation ) சார்பில் வன்னி சென்று இவர்கள் தமிழ்ச்செல்வனுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தினர். அப்போது தமிழ்ச்செல்வன் தன்னை சந்தித்த அப்பிரதிநிதிகளில் ஒருவர் காத்தான்குடியை சேர்ந்தவர் என்பது தெரியவந்ததும், 1990 ஆகஸ்டில் நடைபெற்ற,குறிப்பாக காத்தான்குடிப் படுகொலைகள் தங்களுக்கும் கிழக்கு மாகாணத்து உறுப்பினர்களுக்கும் இடையிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த நிலயில் இடம்பெற்றதாகவும் அதனால் அச்சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமாக நடைபெற்றுவிட்டதாகவும் அதற்காக வருத்தப்படுவதாகவும் முஸ்லிம் பிரதிநிதிகளிடம் குறிப்பிட்டார்.
வட மாகாண முஸ்லிம் - தமிழ் உறவும் குலைவும்
உடுத்த உடையுடன் தங்களின் சகல சொத்துகளையும் பறித்துக் கொண்டு திடுதிப்பென்று என்று புலிகள் ஏன் தங்களை விரட்டினார்கள் என்ற கேள்விக்கு விடையை வட மாகாண முஸ்லிம்கள் இன்றுவரை அறிந்தவர்களாக இல்லை. கிழக்கில் நடந்ததுபோல் தமிழ் -முஸ்லிம் வன்முறை அல்லது கலவரம் நடந்துவிடக் கூடாது என்பதற்காக முஸ்லிம்களை வடக்கிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினார்கள் என்றும், மீண்டும் நிலைமை சீரடைந்ததும் அவர்கள் திரும்பி வரலாம் என்றும் தங்களின் தரப்பு நியாயத்தைப் புலிகள் முன்வைத்தனர்.அந்தக் காரணம் நியாயமற்றது. அதில் புலிகளின் மறைமுக இனச்சுத்திகரிப்பு அரசியல் நிகழ்ச்சி நிரலே வெளிப்பட்டது.
யாழ் முஸ்லிம்களின் முக்கிய பிரமுகர்கள் ஒரு அறிக்கையொன்றினை பகிரங்கமாகப் புலிகள் அறியும் வகையில் வெளியிட்டார்கள். "எவ்விதத் தவறும் இழைக்காத யாழ் முஸ்லிம்கள் சார்பில் புலிகளை மிகவும் தாழ்மையாக வேண்டிக் கொள்வது என்னவென்றால் தங்கள் வசம் இருக்கும் 35 யாழ் முஸ்லிம் இளைஞர்களையும் விடுதலை செய்யுங்கள். தமிழர் முஸ்லிம்களுக்கிடையே கிழக்கில் ஏற்பட்டுள்ள இன விரிசலைப் போன்று வடக்கிலும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தமிழர்-முஸ்லிம் இன ஐக்கியம் சீர் குலைய இடமளிக்க வேண்டாம், வடக்கு முஸ்லிம்கள் கிழக்கு முஸ்லிம்களைப் போன்று தமிழ்-முஸ்லிம் முரண்பாட்டுச் சூழலுக்குள் ஆயுதப் போராட்ட காலத்துக்குள் தள்ளப்பட வில்லை. மேலும் ஆயுதப் போராட்ட காலத்துக்கு முன்பிருந்தே, குறிப்பாக குடா நாட்டில் வாழ்ந்த முஸ்லிம்கள் மிக அந்நியோன்னியமாகத் தமிழர்களுடன் ஐக்கியமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்’’ என அவர்கள் தங்களது அறிக்கையில் கிழக்கு முஸ்லிம் - தமிழ் உறவும் விரிசலும் பற்றிய தமது கருத்தையும் இன உறவுக்கான தமது கரிசனையையும் வெளிப்படுத்தினார்கள்.
புலிகளின் அராஜகத்தினால் சீர்குலைந்த தமிழ்-முஸ்லிம் உறவு
தமிழ்-முஸ்லிம் சகஜீவிதம், இயக்கங்கள் ஆயுதம் ஏந்திப் போராட முற்பட்டபோதே கிழக்கில் மெதுமெதுவாகச் சிதைவடையத் தொடங்கியது. குறிப்பாக 1985ல் அக்கரைப்பற்று, அதனைத் தொடர்ந்து அட்டாளைச்சேனை, உன்னிச்சை, மூதூர் எனத் தொடர்ச்சியாக முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொலைகள், கொள்ளைகள், சொத்தழிப்புகள் போன்ற நிகழ்வுகள் முஸ்லிம்களின் இருப்புக்குப் பெரும் அச்சுறுத்தல்களாக அமைந்தன. ஆகவே முஸ்லிம்கள் அரச ஆதரவை நாட வேண்டி ஏற்பட்டது. முஸ்லிம் கிராமங்களைப் பாதுகாக்க இராணுவத் துணைப்படையாக முஸ்லிம் ஊர்காவற்படை உருவாக்கப்பட்டது.
இந்த ஊர்காவற்படைனர் முஸ்லிம் - தமிழ் இன கலவரங்களின்போது அல்லது முஸ்லிகளின் மீது தமிழ் இயக்கங்கள் கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள், ஆட்கடத்தல்கள், கொலைகள் போன்ற நிகவுழ்களின்போது எல்லைப்புறத் தமிழர்கள் மீதும் தமது பிரதேசங்களினூடாக பயணிக்கும் தமிழர்கள் மீதும் அடாவடித்தனங்களைச் செய்துள்ளனர்.
மூதூர் இனச்சுத்திகரிப்பு
இறுதியான சமாதான காலத்தில், ஹக்கீம் - பிரபா ஒப்பந்தத்தின் பின்னர், புலிகள் மூதூரிலும் வாழைச்சேனையிலும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்களை நடத்தினர். வாழைச்சேனையில் முஸ்லிம் - தமிழ் மக்களுக்கிடையே கலவரம் ஏற்பட்ட போது புலிகள் கலவரத்தைத் தடுக்காமல் வளர்த்துவிட்டது முஸ்லிம்கள் மீதான அணுகுமுறையில் புலிகள் அரசியல் ரீதியாக ஒன்றைப் பேசினார்கள் நடைமுறையில் வேறொன்றைச் செய்தார்கள் என்பதைப் புலப்படுத்தியது.
இந்தக் காலப்பகுதியில் கூட, தமிழ், முஸ்லிம் மக்கள் அகதிகளாக சுமார் 150 குடும்பங்கள் மட்டக்களப்பிற்கும் கந்தளாய்க்கும் முறையே இடம்பெயர்ந்தனர். இந்தக் காலப்பகுதியிலேயே மூதூர் கிழக்கு மக்கள் தாக்கியபோது கொல்லப்பட்ட இரண்டு புலி உறுப்பினர்களான சங்கர் என அழைக்கப்படும் மகேஸ்வரனினதும், குட்டி என அழைக்கப்படும் தர்மலிங்கம் கமலநாதனினதும் எட்டாம் நாள் ஞாபகார்த்த நிகழ்வின்போது வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் முஸ்லிம்களை விளித்து, சங்கரினதும் குட்டியினதும் மரணம் விதைக்கப்பட்டிருப்பதாகவும்,அவர்களது விளைச்சலால் மூதூர் மக்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அன்று தொடக்கம் மூதூர் முற்றுகை வரை பல துண்டுப் பிரசுரங்கள் புலிகளின் முகவர் நிறுவனங்களால் வெளியிடப்பட்டன.
இறுதியில் புலிகள் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்துக்கிணங்க, புலிகள் மீண்டும் ஓர் இனச் சுத்திகரிப்பினை மூதூரில் அரங்கேற்றினர். இராணுவ எதிர் நடவடிக்கை மூலமே முஸ்லிம்கள் மீண்டும் அங்கு குடியேறி வாழும் நிலை ஏற்பட்டது.
மொத்தத்தில் முஸ்லிம்களின் தனித்துவமான இன, மத அடையாளங்கள் புலிகளால் மறுக்கப்பட்டே வந்திருக்கின்றன. முஸ்லிம்கள் தங்களின் அடையாளத்தை சமூக, அரசியல் நடவடிக்கைகளில் முன்னிறுத்திய பொழுதெல்லாம் புலிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் முரண்பாடு தீவிரமடைந்திருக்கிறது. புலிகள் தமது அதீத ஆயுத பலத்தால் முஸ்லிம் மக்களை அடக்கி ஆளலாம் என நினைத்தது அவர்களிற்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. தமிழ் - முஸ்லிம் உறவில் ஏற்பட்ட விரிசல்களைப் புலிகள் தமது நலன்களுக்காக வளர்த்தது போலவே இலங்கை அரசும் தனது நலனுக்காக, தமிழர்கள் மீது முஸ்லிம்கள் கொண்டிருந்த அதிருப்தியை வளர்த்து வந்தது. தமிழ் - முஸ்லிம் உறவில் ஏற்பட்ட விரிசல்களை அதுவும் பயன்படுத்தியது.
புலிகளின் முஸ்லிம்கள் மீதான அடையாளத் திணிப்பு, ஆதிக்க மனப்பான்மை, மாற்றுக் கருத்துகளை சகியாமை, சமூக முரண்பாடுகளைக் கொலைகள் மூலம் தீர்த்து வைக்கும் பாஸிச அணுகுமுறை போன்றவற்றின் நீட்சியாகவே அவர்களது தனி ஈழத்திற்கான அரசியல் அடிப்படையும் இருந்தது என்பதே உண்மை,
-END-
நன்றி: 2013ல் இலங்கையில் நடைபெற்ற 41வது இலக்கிய சந்திப்பை முன்னிட்டு 'வெளியிடப்பட்ட
இலங்கையில் இஸ்லாமிய மக்கள் வஞ்சிக்கப்பட்டார்கள் என்பது முற்றிலும் உண்மையான விடயமே. ஆனால் அவர்கள் ஒட்டுமொத்தமாக தமிழ்மக்களனைவராலும் வஞ்சிக்கப்படவில்லை. அதற்கு ஒரு நல்ல உதாரணம் மன்னாரில் 1960, 70களில் திருவாளர் றஹிம் அவர்கள் இரு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார். அக்காலத்தில் மூன்று மதங்களை சார்ந்த மக்களும் தமிழர்கள் என்ற ஒரே குடையின் கீழ்தான் வாக்களித்தார்கள். அப்பொழுது புலிகள் இருக்கவில்லை.ஆனால் முதல் முறையாக 1988ம் ஆண்டு தை மாதம் 11ம் திகதி இரவு பத்து மணியளவில் அச்சமயம் மன்னாரில் அரசாங்க அதிபராக பணியாற்றிக்கொண்டிருந்த இஸ்லாமியரான திரு. மக்பூல் என்பவர் தாறாபுரம் கிராமத்தில் வைத்து புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது வடமாகணம் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்தது. இதற்கு மன்னார் மக்கள் எவருமே பொறுப்பல்ல. புலிகள் மட்டுமே இத்துர்ப்பாக்கிய சம்பவத்திற்கு பொறுப்பாளிகளாவர். ஆனால் 1990 ஐப்பசியில் முஸ்லிம் மக்களை புலிகள் பலவந்தமாக வெளியேற்றிய விடயத்தில் அன்றைய யு.என்.பி.அரசுக்கும், ஐ.நா.வின் அகதிகளுக்கான அமைப்பிற்கும் ஆழமான தொடர்பு இருந்தது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
ReplyDelete