கிழக்கிலே இன உறவுகளும் அபிவிருத்தியும்: அமரர் தங்கத்துரையின் அரசியற் பார்வையும் பணிகளும் - மகேந்திரன் திருவரங்கன் (பகுதி - 1)



தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அருணாசலம் தங்கத்துரை அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் ஆகின்றன. அவரthangathuraiது படுகொலை நடைபெற்ற போது நான் 7ஆம் வகுப்பிலே யாழ்ப்பாணத்திலே படித்துக்கொண்டிருந்தேன். படுகொலைக்குச் சில நாட்களுக்கு முன்னர் தான் இடப்பெயர்வினை அடுத்து வவுனியாவில் ஒன்றரை வருட காலம் வாழ்ந்த பின்னர் மீளவும் திருகோணமலை ஊடாகக் கப்பலிலே யாழ்ப்பாணம் வந்தடைந்திருந்தேன். திருகோணமலையில் உள்ள சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் பாடசாலை மாணவிகள் பார்த்துக்கொண்டிருக்கும் போது இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அப்போதைய‌ அதிபர், நாமகள் வித்தியசாலை அதிபர் உள்ளடங்கலாக‌ வேறு சிலரும் கொல்லப்பட்டனர். 


இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னராகத் திருகோணமலையில் இடம்பெற்ற வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழ் மொழித் தினப் போட்டியில் வவுனியா மாவட்டத்தில் இருந்து பங்குபற்றி இருந்தேன். அப்போதுதான் நான் முதன் முதலாகக் கிழக்கு மாகாணத்துக்குச் சென்றிருந்தேன். கோணேஸ்வரர் கோயில், கன்னியாய் வெந்நீர் ஊற்றுப் போன்றவற்றினை அப்போதுதான் முதலிலே பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கும் சென்றதாக ஞாபகம் இருக்கிறது. யாழ்ப்பாணத்திற்கு வந்து ஒரு வாரத்தினுள் சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற படுகொலைகளினை உதயன் பத்திரிகையில் வாசிக்கும் போது நான் அண்மையில் சென்றிருந்த ஒரு பாடசாலையிலே இந்த கிரனைட் தாக்குதல் இடம்பெற்றிருந்தது என்ற‌ செய்தி அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. சில வருடங்களுக்குப் பின்னர் அதே சம்பவத்தில் உயிரிழந்த பொறியியலாளர் திரு ரட்ணராஜா அவர்களின் சகோதரி நான் கல்வி கற்ற யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்ற இணைந்தார். அப்போது அவர் இந்தச் சம்பவத்தினைப் பற்றி ஒரு முறை என்னிடம் கூறியமை ஞாபகமாக இருக்கிறது. சமூகத்துக்காகப் பல்வேறு வழிகளில் பணியாற்றியவர்கள் ஒரே மேடையிலே கொல்லப்பட்ட சம்பவமாக 1997 யூலை மாதம் 5ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெற்ற தாக்குதல் அமைந்தது.
அண்மையில் வடக்குக் கிழக்கில் சுயநிர்ணயம் பற்றிய ஆய்வு ஒன்றின் நிமித்தம் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் (யாழ்ப்பாணம்) வெளியிடப்பட்ட அறிக்கைகள் சிலவற்றினை இணையத்திலே வாசித்துக் கொண்டிருந்த போது தங்கத்துரையின் படுகொலை, அவரது அரசியற் பார்வை, அவர் போரினால் அகதிகளாக்கப்பட்ட மக்களுக்காக ஆற்றிய கிராமிய அபிவிருத்தி சார்ந்த‌ பணிகள், மூவின சமூகத்தவரும் வாழும் திருகோணமலை மாவட்டக் கிராமங்களிலே அவர் இனவேற்றுமை பாராது மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து ராஜன் ஹூலினால் தங்கத்துரையின் படுகொலையினை அடுத்து ஆங்கிலத்திலே எழுதப்பட்ட “Murder in Trincomalee and the Tamil Predicament” என்ற‌ கட்டுரை எனது கண்ணிலே பட்டது. கிழக்கின் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றியும் அங்குள்ள வேறுபட்ட‌ சமூகத்தவர்களுக்கு இடையிலான உறவுகள் பற்றியும் கரிசனை மிக்க ஒருவராக அந்தக் கட்டுரை தங்கத்துரையினை பார்க்கிறது.
2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குடித்தொகை அறிக்கையின் படி கிழக்கு மாகாணத்தின் சனத்தொகையில் 39.2% ஆனோர் தமிழர்களாகவும், 36.9% ஆனோர் முஸ்லிம்களாகவும், 23.2% ஆனோர் சிங்களவர்களாகவும் உள்ளனர். இந்தியத் தமிழர்கள், பறங்கியர் முறையே 0.26%, 0.30% ஆக உள்ளனர். இவர்களை விட மலே மற்றும் வேடுவர் போன்ற வேறு சில இனத்தவரும் மிகச்சிறிய அளவிலே கிழக்கு மாகாணத்திலே வாழ்கின்றனர். கிழக்கிலங்கையில் வாழ்ந்த தமிழர்களின் அரசியற் பலம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றத் திட்டங்களால் கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து குன்றத் தொடங்கியிருந்தது. தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான நல்லுறவும், குறிப்பாக ஆயுதப் போராட்டக் காலத்திலிருந்து, இந்தப் பிராந்தியத்திலே மிகவும் விரிசல் கண்டு போயிருக்கிறது.

கிழக்கின் சிங்களச் சனத்தொகை அதிகரித்தமைக்கு அரசினால் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத் திட்டங்கள் மிகவும் பிரதானமான‌ காரணமாக அமைந்தன. நாட்டின் ஒரு பகுதியில் தீவிரமான நிலப் பற்றாக்குறை நிலவிய சூழலிலே, நிலவளம் கூடியளவு பயன்படுத்தப்படாத ஏனைய‌ பகுதிகளில் குடியேற்றத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமையினை ஒரு தீய செயற்பாடு என எடுத்த எடுப்பிலேயே நாம் நிராகரித்திட முடியாது. ஆனால், அக்குடியேற்றத் திட்டங்கள் இனவெறி நோக்கிலே,  நாட்டில் எண்ணிக்கையில் குறைந்த இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த பதற்றங்களையும், பயங்களையும் கருத்திற் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட போது அபாயகரமானவையாக மாறின. கிழக்கிலே இடம்பெற்ற குடியேற்றத் திட்டங்கள் தொடர்பாகவும், அவற்றின் நோக்கங்கள், விளைவுகள் பற்றியும் பலர் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இவற்றிலே செல்வதுரை மனோகரன் (1987, 1994), ஜீ.எச். பீரிஸ் (1991), பற்றிக் பீபிள்ஸ் (1990) ஆகியோரின் ஆய்வுக் கட்டுரைகள் கவனமாக வாசிக்கப்பட வேண்டியவை. இந்த ஆய்வாளர்களின் கட்டுரைகளை ஒட்டுமொத்தமாக நோக்கும் போதும், அவர்கள் முன்வைக்கும் வேறுபட்ட வாதங்களைத் தொகுத்தும், தொடர்புகளை ஏற்படுத்தியும், விமர்சனபூர்வமாகவும் வாசிக்கும் போது குடியேற்றத் திட்டங்களைப் பற்றிய‌ ஆழமானதும் பரந்துபட்டதுமான‌ புரிதலை நாம் பெற்றுக்கொள்ள முடியும். இவற்றினை விட மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைகளும், ராஜன் ஹூலினால் எழுதப்பட்ட The Arrogance of Power என்ற நூலும் இந்த விடயம் தொடர்பான விளக்கங்களை வழங்கும் முக்கியத்துவம் மிக்க பதிவுகளாக இருக்கின்றன‌. ராஜன் ஹூலும் அவர் சார்ந்த மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் அரசின் குடியேற்றத் திட்டங்களுக்கு பின்னணியாக இருந்த சிங்களத் தேசியவாத நிகழ்ச்சி நிரலினை வெளிச்சம் போட்டுக் காட்டும் அதேவேளை, குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் எதிர்கொண்ட பல்வேறு சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளையும், போர்க்காலத்தில் தமிழ் ஆயுதக் குழுக்களாலும் இராணுவத்தினராலும் அவர்கள் எதிர்கொண்ட இன்னல்களையும், இழப்புக்களையும் அக்கறையுடனும், அனுதாபத்துடனும் விபரிப்பனவாக அமைகின்றன. குடியேற்றத் திட்டங்களின் அரசியல் பற்றியும் அவற்றின் விளைவுகள் பற்றியும் விவாதிப்பது இந்தப் பதிவின் நோக்கமல்ல. மாறாகக் கிழக்கிலங்கையில் சுயநிர்ணயம் பற்றிச் சிந்திக்கையிலே அங்கு தற்போது அவதானிக்கப்படும் இனப் பன்மைத்துவத்தினை நாம் எவ்வாறு நோக்கலாம் என்பதனைச் சிந்திப்பதற்கான ஒரு அழைப்பாக நான் இந்தப் பதிவினை மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்துரையின் 20ஆம் ஆண்டு நினைவுதினத்தினை ஒட்டி எழுதுகிறேன்.
சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியவாதம், கிழக்கு மாகாணம்
வடக்குக் கிழக்கிலே சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை அந்தப் பிரதேசம் தமிழர்களின் மரபு வழித் தாயகம் என்ற அடிப்படையிலே எழுச்சி பெற்றது. இந்த சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு ஒரு வரலாற்று ரீதியான முக்கியத்துவம் இருப்பினும், இது தான் உரிமை கோரும் நிலப்பரப்பில் வாழும் எல்லா சமூகங்களையும் உள்ளடக்கியதாக இருக்கவில்லை என்பது வெளிப்படை. தமிழ் சமூகத்திலே இருக்கும் பால், சாதிய, வர்க்க, சமய ரீதியிலான முரண்களைப் பேசுவதற்கு ஆதரவாக‌ இருப்பவர்கள் கூட தமிழ் சமூகத்துக்கும் வடக்குக் கிழக்கில் வாழும் ஏனைய சமூகத்தினருக்கும் இடையிலான முரண்களைப் பற்றிப் பேசுவதற்கு சற்றுத் தயங்குவதனை நாம் காண்கிறோம். ஏனைய சமூகத்தினர் ஏனைய தேசங்களுக்குரியவர்கள், எனவே அவர்கள் அக முரண்பாடுகள் பற்றிய தேசியவாத உரையாடலினுள் வர மாட்டார்கள் என்பது இவ்வாறான நிலைப்பாடுகளுக்கு அடித்தளமாக இருக்கிறது. ஆனால், சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஒரு அரசோ அல்லது அரசக் கட்டமைப்போ உருவாகுமானால் அது தனது எல்லைக்குட்பட்டு வாழும் சமூகங்கள் யாவற்றினது நலன்களையும், எல்லோருக்குமான நீதியினையும், சமத்துவத்தினையும் முன்னிறுத்த வேண்டும். இங்கு அகம் புறம் என்ற வேறுபாடுகளை வளர்ப்பது பிரச்சினைக்குரியதும், குரோதங்களைக் கூர்மைப்படுத்தவுமே வழி செய்யும். வடக்குக் கிழக்கிலே தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சுயநிர்ணய உரிமை இருக்கிறது. ஆனால், சிங்களவர்களுக்கு இந்தப் பிராந்தியத்திலே தனிநபர் உரிமைகளே இருக்கின்றன போன்ற எழுக தமிழிலே முன்வைக்கப்படும் வாதங்கள் இன நல்லிணக்கத்துக்கும், பல்லினங்களின் நலன்களையும் உள்ளடக்கிய‌ சுயநிர்ணயக் கோரிக்கைக்கும் வலு சேர்க்கமாட்டா என்பதனை இந்தக் கட்டுரையாளர் சுட்டிக்காட்ட விரும்புகிறார்.
தனது சனத்தொகையிலே 98.8%ஆன தமிழர்களைக் கொண்ட யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து கொண்டு சிக்கல் மிகுந்த வரலாற்றினையும், சனத்தொகைப் பரம்பலினையும் கொண்ட கிழக்கு மாகாணத்தின் அரசியல் எதிர்காலம் பற்றி எடுத்த எடுப்பிலே கருத்துக்களை முன்வைப்பது அபாயமானது. தமிழ்த் தேசியவாதத்தின் யாழ். மையவாதத் தன்மையினைத் தங்கத்துரை அடிக்கடி கேள்விக்குட்படுத்தியிருக்கிறார் என்பதனை ராஜன் ஹூலின் கட்டுரையின் வாயிலாக அறியக் கூடியதாக இருக்கிறது. கிழக்கிலங்கையின் வரலாறு கூட, யாழ்ப்பாணத்தின் வரலாற்றுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிக்கலானது. இது பற்றி எழுதும் வரலாற்றாசிரியரான‌ ட்கமர் ஹெல்மன்-ராஜநாயகம் (1994) மட்டக்களப்பு, அம்பாறைப் பகுதிகள் ஒருபோதும் யாழ்ப்பாண இராசதானியின் கீழ் இருக்கவில்லை என்பதனையும், மட்டக்களப்பு ஒரு காலத்தில் ருகுணு இராசதானியுடனும், மற்றொரு காலத்தில் கண்டிய இரசாதானியுடன் அரசியல் ரீதியில் தொடர்புபட்டிருந்தது என்றும் கூறுகிறார்.
கிழக்கில் வாழும் தமிழர்கள் மத்தியில் வடக்குக் கிழக்கு இணைப்பினை வலியுறுத்தும் ஒரு போக்குக் காணப்படும் அதேவேளை, தாம் வடக்குடன் இணைகையில் மேலும் சிறுபான்மையாக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்ச உணர்வு கிழக்கில் வாழும் சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது (2012ஆம் ஆண்டுச் சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இணைந்த வடக்குக் கிழக்கின் சனத்தொகை பின்வருமாறு அமையும்: இலங்கைத் தமிழர் – 61.07%, முஸ்லிம்கள் – 23.20%, சிங்களவர்கள் – 15%, இந்தியத் தமிழர் – 0.45%, பறங்கியர் – 0.19%). இந்த நிலைமை கடந்த வருடத்திலே அரசியலமைப்புத் தீர்வு தொடர்பாக மக்கள் கருத்தறியும் பணிகள் இடம்பெற்ற போது வெகுவாக அவதானிக்கப்பட்டது.
கடந்த வருடம் இடம்பெற்ற மக்கள் சந்திப்புக்களிலே, வடக்குக் கிழக்கு இணைந்த ஒரு மாகாணமாக இருப்பதற்கு மாற்றாக‌, நிலத் தொடர்ச்சியற்ற முஸ்லிம் மாகாணம் ஒன்றினை அமைப்பது பற்றிய கருத்துக்களும் வெளியிடப்பட்டன. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா) வடக்குக் கிழக்கின் நிலப்பரப்புத் தொடர்பில் இன முரண்பாடுகளைக் கருத்திலே கொண்டு மிகவும் விரிவான முன்வைப்புக்களை மேற்கொண்டிருந்தது. அவற்றிலே அம்பாறை மாவட்டத்தினை அடிப்படையாகக் கொண்ட முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தென்கிழக்கு மாகாணத்தின் உருவாக்கம் (இந்த மாகாணத்தின் நிருவாகத்தின் கீழ் விரும்பின் வடக்குக் கிழக்கில் உள்ள ஏனைய முஸ்லிம் பெரும்பான்மைப் பிராந்தியங்களைக் கொண்டு வருதல்), அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் உட்புறமாக அமைந்திருக்கும் சிங்களப் பிராந்தியங்களை ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களுடன் இணைத்தல் போன்றன அடங்கும். கண்டி ஃபோரத்தினரால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புத் தொடர்பான கருத்துக்கள் கிழக்கு மாகாணம் தற்போதுள்ளவாறு ஒரு தனி மாகாணமாக இருக்க வேண்டும் எனவும், அதுவே இனங்களுக்கு இடையில் நீண்ட காலத்தில் பன்மைத்துவத்தின் முக்கியத்துவத்தினையும், ஒற்றுமையினையும் வளர்த்தெடுக்க உதவியாக இருக்கும் எனவும் குறிப்பிடுகின்றன. இந்தக் கோரிக்கைகளிலே சிலவற்றின் பின்னால் அண்மைக் காலத்தில் இந்தப் பிராந்தியத்தில் நிலவும் இன முரண்பாடுகளும், ஏனையவற்றுக்குப் பின்னால் எதிர்காலத்தில் இந்தப் பிராந்தியத்தில் இனவொற்றுமையும் பன்மைத்துவமும் நீடிக்க வேண்டும் என்ற வேட்கையும் காணப்படுவதனை நாம் காணலாம்.
நாட்டின் ஏனைய மாகாணங்களில் இருந்து கலாசார ரீதியிலும், வரலாற்று ரீதியிலும், சனத்தொகை ரீதியிலும் முற்றிலும் வேறுபட்ட கிழக்கு மாகாணத்தின் அரசியல் எதிர்காலம் தொடர்பாக அந்தப் பிராந்தியத்தின் மக்கள் தமக்குள்ளே உரையாடல்களை மேற்கொள்வதே ஜனநாயகபூர்வமானதும், அவர்களின் சுயநிர்ணய உரிமையினை வலுப்படுத்துவதாகவும் அமையும். இதுவே இந்தப் பிராந்தியத்தில் நிலவும் இன ரீதியிலான பதற்றங்களும், நிலம் நீர் வளங்கள் மீதான இனத்துவ ரீதியிலான‌ போட்டிகளும் தணிவதற்கு வழியினை ஏற்படுத்தும். வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதுவும், அவர்கள் இழந்துபோன நில நீர் வளங்கள் மீளவும் அவர்களிற்கு அதே வடிவிலோ அல்லது அதற்கு இணையான வேறு வடிவிலோ கிடைக்க வேண்டியதும் இங்கு முக்கியமானது.
தனது அரசியலின் ஆரம்பக் காலங்களிலே கிழக்கிலே மேற்கொள்ளப்பட்ட‌ சிங்களக் குடியேற்றங்களை எதிர்ப்பதில் தீவிரமாக இருந்த படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்துரை, பிற்பட்ட காலத்திலே இன ஒற்றுமையினை வளர்த்தெடுக்கும் வகையில், திருகோணமலையின் கிராமங்களிலே தனது சேவைகளை இன, மத, கலாசார ரீதியிலான வேறுபாடுகளுக்கு அப்பால் மேற்கொண்டிருக்கிறார் என்பதனை இவரின் மறைவுக்குப் பின்னர் ராஜன் ஹூல் எழுதிய கட்டுரையில் எடுத்துக்காட்டுகிறார். குடியேற்றப்பட்ட சிங்கள மக்களின் நலன்களுக்கும் தங்கத்துரை முக்கியத்துவம் கொடுத்திருந்தார் என்பதனை ராஜன் ஹூலின் பதிவில் இருந்து நாம் காணக் கூடியதாக இருக்கிறது. தமிழரசுக் கட்சியில் இருந்தவாறே, தூய்மைப்படுத்திய தேசியவாத அரசியலினைக் கேள்விக்குட்படுத்தி, பன்மைத்துவத்தினை மதிக்கும் அரசியலிலே ஈடுபட்ட தங்கத்துரையிடம் இருந்து இன்றைய அரசியற் தலைவர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும், நாமும் கற்றுக்கொள்ளுவதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றன.
வடக்கிலும், கிழக்கிலும் தனித் தனியாகவோ, இணைந்தோ சுயநிர்ணயத்துக்கான அரசியல், சமூக முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகையில், அரசியற் தீர்வின் வடிவம் அதன் உள்ளடக்கம் பற்றிப் பேசப்படும் இன்றைய சூழலிலே, தங்கத்துரையின் அரசியல், சமூகப் பணிகள் பற்றியும், திருகோணமலையின் கிராமங்களிலே உட்கட்டுமாண அபிவிருத்திக்கு அவர் ஆற்றிய பங்கு பற்றியும், தமிழ்த் தேசிய ரீதியிலான‌ அரசியல் உரிமைப் போராட்டத்துக்கும் கிழக்கின் அபிவிருத்திக்கும் இடையிலான இடைவெளிகள் பற்றி அவர் முன்வைக்கும் அவதானங்கள் பற்றியும் ராஜன் ஹூலினால் 1997இல் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையினை மீளவாசிப்பது பொருத்தமாக இருக்கும் என்ற வகையில் கட்டுரையின் முக்கியமான பகுதிகளை இந்தப் பதிவின் எஞ்சிய பகுதியில் தமிழிற்கு மொழி பெயர்த்திருக்கிறேன். தற்காலத் தமிழ்ச் சமூகத்திலே அதிகம் பேசப்படாத இந்த அரசியற் தலைவரினையும், அவரது சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் அவரது இருபதாவது சிரார்த்த தினத்திலே நினைவுகூரும் ஒரு முயற்சியாகவும் நான் இந்தப் பதிவினையும் மொழிபெயர்ப்பினையும் நோக்குகிறேன்.
(தொடரும்)

Source . Thenee.com
http://www.thenee.com/070717/thangadurai/070717-1/070717-1.html

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...