அழுகி முடைநாற்றம் எடுக்கும் பிற்போக்குத் தமிழ் தலைமையை மக்கள் தூக்கி எறிய வேண்டும்!



லங்கைத் தமிழர்களின் அரசியல் மீண்டும் ஒருமுறை நாறிப்போயிருக்கிறது.
இந்தமுறை அது வடக்கு மாகாணசபை வடிவத்தில் வந்திருக்கிறது. ஆனால் இப்படியான நிலைமைகள் ஏற்பட்டது இதுதான் முதல் சம்பவமும் அல்ல.

இதை நாம் திரும்பத் திரும்ப எழுதுவதால் இது உடனடியாக நின்று போகப்போவதும் இல்லை.
இருப்பினும் நாம் எமது கடமையைச் செய்ய வேண்டியவர்களாக உள்ளோம்.
முதலில் ஒன்றைக் கூறிவிட வேண்டும்.

1948இல் பிரித்தானியாவிடம் இருந்து ‘சுதந்திரம்’ பெற்ற பின்னர் இலங்கைத் தமிழர்களின் முதலாவது அரசியல் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் சரி, அதிலிருந்து பிரிந்து உருவான தமிழரசுக் கட்சியும் சரி, அதன் பின்னர் அந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியும் சரி, பின்னர் அவர்களது போக்கில் அதிருப்தியுற்று ஆனால் அவர்களின் வழித்தோன்றல்களாக பின்னர் உருவாக்கப்பட்ட தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்களும் சரி, அன்றிலிருந்து இன்றுவரை ஒரே பாதையியிலேயே பயணித்து வருகின்றன. ஒரேயொரு வித்தியாசம் என்னவெனில், ஆரம்பகாலத் தலைமைகள் அகிம்சை பேசின, பின்னர் வந்த தலைமைகள் ஆயுதப் போராட்டம் செய்தன. வழிமுறையில் வித்தியாசமேயொழிய கொள்கைகளில் எவ்வித வித்தியாசமும் இருக்கவில்லை.



அன்றிலிருந்து இன்றுவரையான தமிழ் தலைமைகளின் அரசியல் நிலைப்பாட்டை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

இன மற்றும் சமூகரீதியிலான நிலைப்பாட்டைப் பொறுத்தவரையில், வட பகுதி நிலப்பிரத்துவ அடிப்படையிலான, சாதிப்பாகுபாடு கொண்ட, யாழ்.மையவாதத்தை அடிப்படையாகக் கொண்ட மேட்டுக்குழாமின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தல்.
தேசியரீதியான நிலைப்பாட்டைப் பொறுத்தவரையில், ஏகாதிபத்திய சார்பு, தரகு முதலாளித்துவ, சிங்கள இனவாத பிற்போக்கு கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்ச்சியாக அரசியல் உறவையும், ஒருமைப்பாட்டையும் பேணி வருதல்.

சர்வதேச அரசியல் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை, மேற்கத்தைய எகாதிபத்திய சக்திகளுடனும், இந்திய பிராந்திய மேலாதிக்க விஸ்தரிப்புவாத சக்திகளுடனும் கூட்டுச் சேர்ந்து அவற்றின் ஆதரவாளர்களாகவும் கையாட்களாகவும் செயற்படுதல்.

இந்த மூன்று நிலைப்பாடுகளையும் பொறுத்தவரையில், ஆரம்பகால அகிம்சை ரீதியிலான தமிழ் தலைமைகளுக்கும், பின்னர் உருவான ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்கும் அடிப்படையில் எந்த வித்தியாசமும் இல்லை. சிறு வித்தியாசம் என்னவெனில், சில ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இந்தியாவின் கையாட்களாகச் செயற்பட்டுக் கொண்டு, அப்போதைய இந்திராகாந்தியின் இந்தியாவுக்கு எதிரான மேற்கத்தை ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக இருந்தன. விடுதலைப் புலிகள் மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளைச் சார்ந்து நின்று கொண்டு இந்தியாவை எதிர்த்தனர்.

இத்தகைய ஒரு வரலாற்றுப் பின்னணியில், மீண்டும் தமிழ் அரசியல் சக்திகள் மத்தியில் எதிரும் புதிருமான இரு அணிகள் என்ற ஒரு தோற்றப்பாடு உருவாகியுள்ளது. ஆனால் அரசியல் ரீதியாக இரண்டு அணிகள் உருவாகியுள்ளனவா என்பது கேள்விக்குரியது.

இன்று சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுமந்திரன் ஆகியோரால் தலைமை தாங்கப்படும் தமிழரசுக் கட்சிக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனால் தலைமைதாங்கப்படும் தீவிர தமிழ் தேசியவாதிகள் போல் தோற்றமளிக்கும் அணியினருக்கும் இடையிலான முரண்பாட்டை வைத்துக்கொண்டு, தமிழ் அரசியல் அரங்கில் எதிரும் புதிருமான இரண்டு அணிகள் உருவாகியுள்ளதாகச் சிலர் தப்புக்கணக்குப் போடுகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல.

தமிழரின் அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னரும் எதிரும் புதிருமான அரசியல் அணிகள் இருந்திருக்கின்றன. தமிழர்களின் மூத்த அரசியல் கட்சியான தமிழ் காங்கிரசிற்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் சுமார் 27 வருட காலம் போட்டி அரசியல் நிலவியது. தமிழ் மக்களின் நலன்களுக்காக இரண்டு கட்சிகளையும் ஒன்றுபட்டுச் செயற்படுமாறு மக்கள் தரப்பிலிருந்து விடுக்கபட்ட கோரிக்கைளை இரு தரப்பினருமே ஏற்றுக்கொள்ளாமல் கீரியும் பாம்புமாகச் செயற்பட்டு வந்தனர். ஆனால் 1970 பொதுத்தேர்தலில் இரண்டு கட்சிகளினதும் முக்கிய தலைவர்கள் மக்களால் தோற்கடிக்கப்பட்டபோது, தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், மக்களை ஏமாற்றவும், இரண்டு கட்சியினரும் இணைந்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (தமிழர் விடுதலைக் கூட்டணி) என்ற புதிய அமைப்பை உருவாக்கியதுடன், தாங்கள் அதுவரை காலமும் பின்பற்றிய வங்குரோத்துத்தனமான அரசியல் கொள்கைகளை மறைக்க “தமிழீழம்” என்ற இன்னொரு வங்குரோத்துத்தனமான கொள்கையையும் முன்வைத்தனர்.

அதுபோன்றதொரு நிலைமைதான் இப்பொழுது சம்பந்தன் குழுவினருக்கும், விக்னேஸ்வரன் குழுவினருக்கும் இடையில் உருவாகியுள்ளது. விக்னேஸ்வரன் இப்பொழுது பேசுகின்ற அதிதீவிரத் தமிழ் தேசியவாதம், முன்னைய மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சம்பந்தன் குழுவினரால் தீவிரமாகப் பேசப்பட்ட ஒன்றுதான். மகிந்த ராஜபக்சவின் ஆட்சி அவர்களுக்குப் பிடிக்காததால், அவர்கள் அப்பொழுது அப்படிப் பேசினார்கள். பின்னர் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஐ.தே.க. தலைமையிலான வலதுசாரி அரசாங்கம் அமைந்த பின்னர், தாம் அதுவரை பேசிய தமிழ்த் தேசியவாதக் கொள்கைகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு அந்த அரசுடன் கொஞ்சிக்குலாவ ஆரம்பித்திருக்கிறார்கள். இது வழமையாக எல்லாத் தமிழ் தலைமைகளும் காலத்துக்குக் காலம் செய்துவரும் ஒன்றுதான்.

இதில் விக்னேஸ்வரன் குழுவினர் ஏன் எதிர் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்ற ஒரு நியாயமான கேள்வி எழலாம். அதற்கு மூன்று காரணங்களைக் கூறலாம்.
ஓன்று, இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் இருக்கின்ற புலி ஆதரவாளர்கள் உட்பட தீவிர தமிழ் தேசியவாதிகளின் பிரதிநிதியாகத் தன்னை நிலைநிறுத்தி, தமிழ் மக்களின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றும் விக்னேஸ்வரனின் அபிலாசை.

இரண்டாவது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சி தவிர்ந்த மூன்று பங்காளிக் கட்சிகளும் தமிழரசுக் கட்சித் தலைமையின் எதேச்சாதிகாரப் போக்கை ஏற்காது இருப்பதுடன், அக்கட்சிக்கு எதிராக வெளியில் இருக்கின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, வீ.ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பனவும் தமிழரசுக் கட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளதால், அவற்றின் துணையுடன் தமிழரசுக் கட்சியின் தலைமையை எதிர்த்து வெற்றிபெற முடியும் என விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கை.
மூன்றாவதாக, தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமை மீதும், அது ஆதரிக்கின்ற இன்றைய ‘நல்லாட்சி’ அரசு மீதும் நம்பிக்கை இழந்துள்ளதால், மக்களின் ஆதரவை தமது பக்கம் வென்றெடுக்கலாம் என விக்னேஸ்வரன் அணிக்கு ஏற்பட்டிருக்கும் அதீத நம்பிக்கை.

இவைதான் உண்மையில் சம்பந்தன் அணிக்கும், விக்னேஸ்வரன் அணிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகலின் அடிப்படைகள். உள்ளுக்குள் பாரிய நோய் இருப்பவனுக்கு அதன் வெளிப்பாடாக காய்ச்சல் அடிப்பது போல, இந்த அடிப்படை நோய்களின் வெளிப்பாடாக வட மாகாணசபையின் சில அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிக் காய்ச்சலாக வெளிப்பாடடைந்துள்ளன. அந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு தற்காலிக நிவாரணம் தேடி, இரு தரப்பும் சில சமரசங்களுக்கு வந்தாலும், அடிப்படையான வியாதி தீரப்போவதில்லை. அமுக்கி வைக்கப்பட்டிருக்கும் அந்த வியாதி மேலும் பூதாகரமாக வெடித்துக் கிளம்புவது திண்ணம்.

இங்கே பிரச்சினை என்னவெனில், அதிகாரத்துக்காக மல்லுக்கட்டி நிற்கும் இரண்டு அணிகளுக்கடையிலும் அடிப்படையான அரசியல் வித்தியாசம் எதுவும் கிடையாது என்பதுதான். அடிப்படையான வித்தியாசம் இருக்குமானால் மக்கள் சரியான பாதையில் நிற்கும் அணியை ஆதரிக்கலாம். ஆனால் நிலைமை அப்படி இல்லை. ஒரு அணி மிதமான தமிழ் தேசியவாதத்தைப் பின்பற்ற, மற்றைய அணி தீவிரமான தமிழ் தேசியவாதத்தைப் பின்பற்றுகிறது என்பதுதான் வித்தியாசம். சாராம்சத்தில் இரண்டுமே பிற்போக்குத் தமிழ் தேசியவாதத்தைத்தான் தமது அடிப்படையாகக் கொண்டுள்ளன. அதில் மாற்றம் வந்து தமிழ் தேசியவாதம் என்பது முற்போக்கான திசைவழியில் ஒரு ‘தேசிய ஜனநாயகப் போராட்டமாக’ மாறும் பொழுதுதான் அடிப்படையான மாற்றம் நிகழும்.

இப்பொழுது இரண்டு அணிகளாகக் கச்சை கட்டி நிற்கும் ஏதாவது ஒரு அணியின் பின்னால் மக்கள் அணி திரள்வது, அவர்கள் மீண்டுமொருமுறை தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்வதில்தான் போய் முடியும். மக்களுக்கு முன்னால் உள்ள தெரிவு தற்பொழுது இருக்கும் கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் இருந்து வெளியேறி எரியும் நெருப்புத் தணலுக்குள் விழுவதல்ல.

இன்றைய தேவை, தற்போது இருக்கின்ற பிற்போக்கான, காலாவதியாகிப்போன தமிழ் தலைமைக்குப் பதிலாக, புதிய முற்போக்கான திசைவழியில் சிந்திக்கின்ற, மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்ற ஒரு தலைமையை தமிழ் மக்களுக்காக உருவாக்குவதுதான். இதைச் சாத்தியமாக்குவதற்கு முற்போக்குச் சிந்தனையும், ஜனநாயக உணர்வும், மக்கள் நலனில் அக்கறையும் கொண்ட தமிழ் அறிவுஜீவிகள் முன்வர வேண்டும்.

Source: Vaanavil 78 -June 2017 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...