ரணில் – மைத்திரி – சந்திரிகா அரசு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமா? வானவில் இதழ் 52


ஏப்ரல் 16, 2015

ranil maithri chanthirika in cycle 1

னவரி 8ஆம் திகதி அதிகாரத்துக்கு வந்த புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கான காலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தக் காலகட்டத்துக்குள் நாட்டு மக்களின் நன்மைக்காக அரசாங்கம் செய்யப்போவதாக அறிவித்திருந்த வேலைத்திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.



அரசாங்கம் சாதித்ததெல்லாம் முன்னைய அரசின் முக்கிய தலைவர்கள் மீதும், அந்த அரசில் முக்கிய பதவிகள் வகித்த அதிகாரிகள் மீதும், நூற்றுக்கணக்கில் விசாரணைகள் மேற்கொண்டதும், சிலர் மீது வழக்குகள் தொடுத்ததும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆதரவாளர்களை அரச பதவிகளிலிருந்து நீக்கியதும், பல்வேறு பிரதேசங்களில் அவர்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டதும்தான்.

அத்துடன் தமது அமைச்சரவையில் 30 பேருக்கு மேல் இடம் பெறமாட்டார்கள் என்று சொன்ன புதிய ஆட்சியாளர்கள், அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக அத்தொகையை இரண்டு மூன்று மடங்காகப் பெருக்கியும் வருகின்றனர்.
அதைவிடப் பாரதூரமான விடயமென்னவெனில், முன்னைய அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் ‘மக்கள் வரப்பிரசாத’ வரவு செலவுத்திட்டம் ஒன்றை சமர்ப்பித்திருந்த நிலையில், புதிய அரசாங்கம் வரப்போகின்ற பொதுத்தேர்தலை மனதில் வைத்து பிறிதொரு ‘மக்கள் வரப்பிரசாத’ வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் நிதி நிலைமை வங்குரோத்தாகி, அதைச் சமாளிப்பதற்காக அரசாங்கம் பணத்தாள்களை அச்சடித்து விடுவதற்கான குறுக்கு வழி முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறது.

இவையெல்லாவற்றையும் பார்க்கையில் ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குத்தான்’ என்ற முதுமொழிதான் ஞாபகத்துக்கு வருகின்றது.
நாட்டின் இந்த அடிப்படையான பிரச்சினைகளுக்காக தென்னிலங்கையில் ஜனநாயக மற்றும் இடதுசாரி சக்திகள் குரல் எழுப்புவதைக் காண முடிகிறது. இது தென்னிலங்கையில் எந்தச் சூழ்நிலைகளிலும் மாற்றுக்குரல் தொடர்ச்சியாக இருந்து வருவதன் வெளிப்பாடு. உத்தியோகபூர்வமான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை, சிறீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமைப் பதவியைப் பயன்படுத்தி புதிய ஜனாதிபதியும், முன்னைய ஜனாதிபதி சந்திரிகாவும் நெருக்கடியில் தள்ளிவிட்டுள்ள போதும், இந்த மாற்றுக்குரல் ஓங்கி ஒலிக்கின்றது.

அதேவேளை, ‘திண்ணை எப்போ காலியாகும்?’ எனக் காத்திருந்தது போலக் காத்திருந்து, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தமக்குத் தரும்படி கேட்டு நிற்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, உண்மையான எதிர்க்கட்சியாகச் செயல்படுகின்ற நிலையில் இருக்கின்றதா?

1994இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் பதவி ஏற்றதிலிருந்து எதிர்ப்பு அரசியலையே செய்து வந்த கூட்டமைப்பு, ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பிரச்சினை சம்பந்தமாக எந்தவொரு வாக்குறுதியையும் பெற்றுக் கொள்ளாமல் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து அவரைப் பதவிக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தது. அதற்கு முன்னர் 2010இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போதும் கூட முன்னாள் இராணுவத் தளபதியும், புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் (கூட்டமைப்பினரின் மொழியில் தமிழின அழிப்பு யுத்தம்) முக்கிய பங்கு வகித்தவரும், தமிழ் மக்களுக்கு எதிராகப் பகிரங்கமாக கருத்து தெரிவித்து வந்தவருமான, சரத் பொன்சேகாவையே கூட்டமைப்பு ஆதரித்தது.

தமிழ் தலைமைகள் காலத்துக்குக் காலம் தமிழ் மக்களுக்கு எதிரான தென்னிலங்கை அரசியல் (ஐ.தே.க) கட்சியையே ஆதரிப்பதை ஒரு மரபாகக் கொண்டு வந்திருக்கின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கின்ற தற்போதைய அரசாங்கம் கூட, தமிழ் மக்களின் பிரச்சினை சம்பந்தமாக எந்தவொரு தீர்வையும் காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதற்கான அறிகுறி எதனையும் காணவில்லை. மறுபுறத்தில் இந்த அரசாங்கத்தை ஆதரிக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கூட அது சமபந்தமாக எந்தவொரு கோரிக்கையையும் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாகவும் தெரியவில்லை.

குறைந்தபட்சம் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பாவது ஏதாவது தீர்வுத் திட்டம் எதனையும் முன் வைத்திருக்கிறதோ என்றால், அதுவும் இல்லை. “தீர்வுத் திட்டம் தயாரிக்கிறோம்…தயாரிக்கிறோம்” என இதுவரை அவர்கள் பல தடவை சொல்லியும், அவர்களது தயாரிப்பு என்ன என்பது இதுவரை மூடுமந்திரமாகவே இருக்கின்றது.

புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அறிவித்தது. இது வழமையான வாய்ச்சவடால் என எல்லோருக்கும் தெரியும் என்றாலும், சிலருக்கு இந்த அரசாங்கத்தை தமிழ் கூட்டமைப்பும் சேர்ந்துதான் பதவிக்குக் கொண்டு வந்தது என்றபடியால், அது ஏதாவது செய்யக்கூடும் என்ற சிறு நப்பாசை ஏற்பட்டு இருந்தது. ஆனால் அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தில் அந்தப் பிரச்சினை இடம் பெறாததுடன், அரசாங்கம் பல கட்சிகளையும் கொண்டு அமைத்துள்ள ‘தேசிய நிறைவேற்றுச் சபை’யிலும் அதுபற்றி ஒருமுறை தன்னும் கலந்துரையாடப்படவும் இல்லை.

அரசாங்கத்தின் இந்தப் போக்கில் ஆச்சரியப்படுவதற்கு ஏதும் இல்லை. ஏனெனில் இந்த அரசாங்கத்தின் மூன்று முக்கிய புள்ளிகளான ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் நிலைகளை எடுத்துப் பார்த்தால் இந்த நிலை பற்றிப் புரிந்து கொள்ளலாம்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே மைத்திரிபால சிறிசேன, தமிழ் மக்களின் பிரச்சினை சம்பந்தமாக இப்பொழுது எதுவும் கதைக்கக்கூடாது என திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். அதற்கு சிங்கள மக்களின் வாக்குகள் கிடைக்காது போய்விடும் என்ற அச்சம் மட்டும் காரணமல்ல. இனப்பிரச்சினை சம்பந்தமான அவரது நிலைப்பாடும் ஒரு காரணம். இருந்தும் சூடு சுரணையற்ற தமிழ் பேசும் மக்களான தமிழ் – முஸ்லீம் மக்களின் வாக்குகளால்தான் அவர் வெற்றி பெற்றார்.

ரணிலைப் பொறுத்தவரை, அவரது வரலாற்றைப் பற்றி புதிதாக ஏதும் சொல்லத் தேவையில்லை. அண்மையில் அவர் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது, “வடக்குப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்” என மொட்டையாகச் சொன்னார். இதில் ஆழமான அர்த்தம் பொதிந்து கிடக்கிறது. அதாவது வடக்கு மட்டுமின்றி, கிழக்கும் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடம் என்பதை ஏற்றுக்கொள்ளாத தொனி இதில் இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், இந்தப் பிரச்சினையை தேசிய இனப்பிரச்சினை என்றோ அல்லது குறைந்தபட்சம் தமிழ் மக்களின் பிரச்சினை என்றோ கூட அவர் சொல்ல விரும்பவோ, தயாராகவோ கூட இல்லை. இன்று மட்டுமல்ல, அவர் என்றுமே தமிழ் மக்களின் பிரச்சினையை ‘வடக்கு பிரச்சினை’ என்றுதான் சொல்லி வந்திருக்கிறார் என்பது அவரை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.
அதுமட்டுமல்ல, சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 2000ஆம் ஆண்டில் அவரது அரசாங்கம் முன்வைத்த ‘தீர்வுப்பொதி’யை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த போது, தமது ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் அதன் பிரதிகளை பாராளுமன்றத்துக்கு உள்ளேயே தீ வைத்துக் கொளுத்திய போது ரணில் வேடிக்கை பார்த்து ரசித்ததை நாட்டு மக்கள் தொலைக்காட்சிகளில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதுமட்டுமின்று. அவர் தலைமைதாங்கும் ஐ.தே.க கட்சிதான் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாக காலத்துக்காலம் உருவாக்கப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தம், இந்திய – இலங்கை உடன்படிக்கை, சந்திரிகாவின் தீர்வுத் திட்டம் என்பனவற்றை நடைமுறைப்படுத்த விடாமல் தடுத்தவர்கள். அவரது மாமன் ஜே.ஆர்.ஜெயவர்தன தான் பண்டா – செல்வா உடன்படிக்கையைக் கிழித்தெறிய வைப்பதற்காக அபகீர்த்திமிக்க ‘கண்டி யாத்திரை’யை முன்னின்று நடாத்தியவர். அவரது ஆட்சியில்தான் 1977, 1981, 1983 ஆண்டுகளில் தமிழ் மக்கள் மீது அரச ஆதரவுடன் வன்செயல் கட்டவிழ்த்துவிடப்பட்டு, ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், அவர்களது சொத்துகள் சூறையாடப்பட்டு, வாழ்விடங்களை விட்டு துரத்தியடிக்கப்பட்டார்கள். அந்த மாமனாரின் அரசில் ரணில் முக்கியமான ஒரு அமைச்சராகப் பதவி வகித்தவர் என்பதும் மறந்துவிடக்கூடியதல்ல.

ரணிலின் ஐ.தே.க தான் 1977இல் பதவிக்கு வந்ததும் அரசியல் ரீதியாகத் தீர்வுகாண வேண்டிய இனப்பிரச்சினையை யுத்தமாக மாற்றியது என்பதையும் மறந்துவிட முடியாது. எனவே ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் என யாராவது (கூட்டமைப்பு அப்படிச் சொல்லித்தான் தமிழ் மக்களை ஏமாற்ற முயல்கிறது) சொன்னால், அவர்கள் மோசடிக்காரர்கள் அல்லது அவர்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

இதில் தனது தந்தை எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க போல, சந்திரிகாவும் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் உண்மை விசுவாசத்துடன் செயல்பட்டவர் என்ற ஒரு கருத்து இருந்தது. ஆனால் ‘பன்றியோடு சேர்ந்த பசுமாடும்…ஏதோ செய்யும் என்பது போல’, மகிந்த ராஜபக்ச மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி, குரோதம் என்பன காரணமாக அவர் ஐ.தே.கவுடன் சேர்ந்ததின் மூலம் அதைக் கெடுத்துக் கொண்டுள்ளார். அதுவும் தான் முன்வைத்த எந்தத் தீர்வுத் திட்டத்தை ரணில் கோஸ்டி பாராளுமன்றத்தில் தீ வைத்து எரித்ததோ, அந்த ரணில் கோஸ்டியுடன் அவர் இன்று கைகோர்த்து நிற்கும் அலங்கோலத்துக்கு அவர் எந்த நியாயத்தையும் சொல்லித் தப்பிவிட முடியாது.

இந்த நிலைமையில் என்ன முகாந்திரத்தை வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றைய ஐ.தே.க அரசாங்கத்தை ஆதரிக்கின்றது என ஒருவர் யோசிக்கக்கூடும். அப்படி ஒருவர் யோசித்தால் அதில் நியாயம் உண்டு. ஆனால் அதற்கான காரணங்கள் கூட்டமைப்புக்கு உண்டு என்பதில் விடயம் அடங்கியிருக்கிறது. தமிழ் மக்களின் பிரச்சினையை விட கூட்டமைப்புக்கு அந்தக் காரணங்கள் முக்கியமானவை.

அதில் பிரதானமானது, இனப்பற்றை விட ஐ.தே.கவுடனான வர்க்கரீதியான, அரசியல் ரீதியான பற்றுதல் கூட்டமைப்புக்கு முக்கியமானது. அடுத்தது, இலங்கை அரசியலில் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான, ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளை தொடர்ச்சியாக எதிர்த்து வந்ததின் பழக்க தோசம். இன்னொன்று, இனப்பிரச்சினையை யாராவது தீர்த்துவிட்டால், பிச்சைக்காரனின் புண்ணைப் போல அதைக்காட்டி அரசியல் பிழைப்பு நடாத்த முடியாமல் போய்விடுமே என்ற அச்சம்.

எனவே ஐ.தே.க ஆட்சிக்கு வந்தால் கூடிக்குலாவுவதும், ஏனைய கட்சிகள் வந்தால் எதிர்ப்பு அரசியல் நடாத்துவதும் என்ற தமிழ் தலைமைகளின் இரட்டை வேட அரசியலால், தமிழ் மக்களின் பிரச்சினை மீண்டும் கிணற்றில் போட்ட கல்லாக மாறிவிடப்போகும் அபாயம் எழுந்துள்ளது. இந்த அவல நிலையை முற்போக்கு சக்திகள்தான் சரியாகவும், தீர்க்கதரிசனத்துடனும் புரிந்து கொண்டு, சரியான தலைமைத்துவத்தைத் தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கு பிரயத்தனம் எடுக்க வேண்டும். 1970களில் இந்தப் பிரச்சினை தீவிரமடைந்த போது, உண்மையான மார்க்சிச – லெனினிசவாதிகள் அதைச் சரியாகப் புரிந்து கொண்டு, எவ்வாறு தமிழ் மக்களின் பரந்துபட்ட ஜனநாயக முன்னணி ஒன்றை உருவாக்கி, தமிழ் மக்களின் அழிவுக்கு வழி கோலிய தேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைவாதத்திற்கும் எதிராகப் போராட முன்வந்தார்களோ, அதேபோன்று ஏற்பட்டிருக்கின்ற இன்றைய சூழ்நிலையிலும,; அவர்கள்தான் நிலைமையைச் சரியாகப் புரிந்துகொண்டு முன்கையெடுத்துச் செயல்பட முன்வர வேண்டும்.

VAANAVIL 52_2015

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...