ஜெய் பீம் – சினிமா விமர்சனம்

விளிம்புநிலையில் தத்தளிக்கும் உயிர்களை இச்சமூகத்தோடு இறுக்கமாய் இணைக்கும் சட்டத்தின் தொப்புள்கொடியை நம்பிக்கையாய் பற்றிக்கொள்ளும் கரமே இந்த ‘ஜெய் பீம்’.

வெயில் காயும் விழுப்புரத்தின் கோணமலையில் வாழ்ந்து வரும் இருளர்களுக்கு வயல்களில் எலி பிடிப்பதும் வீடுகளில் பாம்பு பிடிப்பதும் எஞ்சிய நேரங்களில் செங்கல் சூளை போன்ற இடங்களுக்கு கூலி வேலைக்குப் போவதுமாய் வாழ்க்கை நகர்கிறது. வறுமைக்குக் கொடுத்த நேரம் போக மீதியைக் காதலுக்கு மொத்தமாய்க் கொடுத்துக் கொண்டாடும் ராசாக்கண்ணு – செங்கேணி குடும்பமும் அவர்களுள் ஒன்று. இந்தத் தம்பதியின் அதிகபட்ச ஆசை, மழைக்கு ஒழுகாத ஒரு கல்லு வீடு. அதற்கான முதல் செங்கல்லை சம்பாதிக்கும் ராசாக்கண்ணு மீதியை சேமிக்க தூரத்துச் செங்கல் சூளைக்கு வேலைக்குப் போகிறார். அதேசமயம் ஊர்த்தலைவர் வீட்டில் நகை, பணம் காணாமல் போக, சந்தேகத்தின் நிழல் ஊரைவிட்டுப் போன ராசாக்கண்ணு மேல் விழுகிறது. ஒருபக்கம் ஆளுங்கட்சியின் அழுத்தம், மறுபக்கம் தங்கள் மேல் படியும் கையாலாகாதவர்கள் முத்திரை – இரண்டும் சேர்ந்து காவல்துறையை வெறி கொள்ளச் செய்ய, அதன்பின் நடக்கிறது கொடூரமான மனித வேட்டை. இரக்கமற்று பரபரத்து அலையும் நெடுஞ்சாலை வாகனங்களின் சந்தடியில் அடிபட்டுத் தெறிக்கும் பரிதாப நத்தைகளைப் போலாகிறது இருளர் குடியிருப்பு. சிதைந்தது போக, எஞ்சிய சக்தியைத் திரட்டி அவர்கள் கடைசிப் புகலிடமான நீதிமன்றத்தின் கதவைத் தட்டுகிறார்கள். அந்த சட்ட உலகம், இந்தத் தொல்குடிகளுக்கு ஆதரவளித்து நியாயம் தருகிறதா என்பதே ‘ஜெய் பீம்’ பேசும் பயணம்.

அரசியலமைப்புச் சட்டத்தின் மேல் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்ட நாயகனாக சூர்யா. நீதிமன்றத்தில் எதிராளிகளைத் துளைத்தெடுக்கும் இரும்புக்கணை, வெளியே பாதிக்கப்பட்டவர்களுக்காக இளகிக் கரையும் பனித்துளி என இருவேறு பரிமாணங்கள். நீதித் தராசைப் போலவே இருபக்கத்தையும் சமமாய் சுமந்து மிளிர்கிறார். பாதிக்கப்பட்ட வர்களின் வலி பேசும் கதையில் தன் பங்கு எதுவரையில் என உணர்ந்து பிறருக்கு வெளிகொடுத்து நடித்திருக்கும் முதிர்ச்சி பாராட்டுக்குரியது.

‘ஜெய் பீம்’ என ஓங்கி உயர்ந்திருக்கும் கரத்தின் நாடி, நரம்பு, அதனூடே ஓடும் ரத்தம் அத்தனையுமே லிஜோமோள் ஜோஸ்தான். இருளர் பழங்குடிப் பெண் செங்கேணியாக ஆற்றாமையில் பொங்கும் முகபாவனைகள், வேதனையில் துடிக்கும் உடல்மொழி என ஒவ்வொரு காட்சியிலும் பார்ப்பவர்களின் இதயத்தில் வலி விதைத்துச் செல்கிறார். துறுதுறு காட்டுராசா ராசாக்கண்ணுவாக மணிகண்டன். வசன உச்சரிப்புகள் தொடங்கி தாங்கிக் குதித்து நடக்கும் நடை வரை ஒவ்வொரு அங்குலத்திலும் தெரிகிறது அவரின் மெனக்கெடல். பிரகாஷ் ராஜின் அனுபவத்திற்கு மூத்த காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தை வெகு இயல்பாக, அழகாக சுமந்திருக்கிறார். அதிகாரத்தையே தடித்த சீருடையாய் அணிந்திருக்கும் காவல்துறை துணை ஆய்வாளர் பாத்திரத்தை தமிழ் பிரதிபலித்திருக்கிறார். மொசக்குட்டி, இருட்டப்பன் தொடங்கி மண்வாசத்துடன் அசல் மனிதர்கள் ஏராளம்பேர் திரையில்.

ஒருபுறம் நெகிழ்வான மண்ணின் மைந்தர்களும் அவர்தம் கலாசாரமும், மறுபுறம் ஓங்கி உயர்ந்த இறுகிய செவ்வண்ணக் கட்டிடமும் அதுதரும் மரியாதை கலந்த அச்சமும். மூன்றாவது முனையில் இருள் சூழ்ந்த சிறையும் அதனுள் நடக்கும் அரச பயங்கரவாதமும். இந்த மூன்று பக்கங்களையும் இணைக்கும் உச்சிப்புள்ளியாய் உயர்ந்து நிற்கிறது எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு.

நிச்சயமாகவே சொல்லலாம், தமிழ் சினிமாவில் நீதிமன்றத்தை இவ்வளவு உயிர்ப்பாக கண்முன் கொண்டுவந்த மாயாஜாலம் இதற்குமுன் நிகழ்ந்ததில்லை என. கலை இயக்குநர் கே.கதிரின் காய்த்துப்போன கைகளோடு ஒரு கைகுலுக்கல். பிலோமின் ராஜின் இரண்டாம்பாதி படத்தொகுப்பில் பிசிறே இல்லை. ஆனால் முதல் பாதியில் உணர்ச்சிப் பிரவாகமாய் மாறியிருக்க வேண்டிய காட்சிகள் சட்சட்டென துண்டாடப்பட்டு அடுத்த நொடி வேறொரு பக்கம் பாய்வதுதான் சின்னக் குறை. ஷான் ரோல்டனின் பின்னணி இசை ஏமாற்றம். இறுதிக்காட்சியில் ஓலமும் நன்றியுமாய் ஒலிக்கும் ‘மண்ணிலே ஈரமுண்டு’ பெருமழைக்குப் பின்னான மென்காற்று.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படத்தில் துளியும் சமரசம் கலந்திடாத இயக்குநர் த.செ.ஞானவேலின் கலைநேர்மைக்கு சாட்சி, சாதிய அதிகாரத்தைத் தோலுரிக்கும், படத்தின் முதல் காட்சி. ‘‘ஒருநாள் கூலியா ஆயிரம் ரூபாய் கூட வாங்காத பொண்ணுதான் லட்சக்கணக்குல பேரத்தொகையை மறுத்திருக்காங்க’’, ‘‘அந்த போலீஸ்காரங்க பாம்பு கடிச்சு வந்தாலும் காசு வாங்காம வைத்தியம் பார்ப்பேன் சார்’’, ‘‘எல்லா போலீஸும் மோசம்னு நினைக்கிற வக்கீலும் எல்லா வக்கீலும் மோசம்னு நினைக்கிற போலீஸும் சேர்ந்து செய்யப்போற விசாரணை’’ என்று ஞானவேலின் வசனங்கள் வலிமையானவை.

காவல்துறை அராஜகத்தின் கோரப் பக்கங்கள் இதற்குமுன்னும் திரையில் வந்திருக்கின்றன. ஆனால் கல்வியோ பிற வசதிகளோ இன்னமும் பெரிதாய்ப் போய் சேர்ந்திடாத ஒரு சமூகத்தை காக்கிகள் தங்கள் ரத்தம் தோய்ந்த பூட்ஸ்கால்களால் நசுக்கும் கள நிலவரத்தை திரையில் சொல்லியிருப்பது இதுவே முதல்முறை. ‘என்னை பொய் கேஸ் போட்டு திருட்டுப்பட்டம் கட்டிட்டாங்க. அதுக்குப் பின்னால பள்ளிக்கூடத்தில யார் ரப்பர் காணாமப் போனாலும் என் பையைத்தான் பார்ப்பாங்க’ என்கிற சிறுவனின் இயலாமைக் குரல் நம்மை உடைத்துப்போடுகிறது.

எங்கோ ஒரு மூலையிலிருந்து எழும் கூக்குரல், அதை இருட்டிலிருந்து மீட்க ஓடும் சட்டத்தின் மேல் நம்பிக்கை கொண்ட மனிதர்கள் – இவர்களைப் பிணைத்தவகையில் மிகத் தெளிவாக ஒரு வழக்கு விசாரணையை அப்படியே படமாக்கியிருக்கிறார் இயக்குநர். கொஞ்சம் தவறினாலும் ஆவணப்படமாகிவிடும் கதைக்களத்தை விறுவிறுப்பான புனைவாக மாற்றியிருப்பதில் தெரிகிறது ஞானவேலின் சாமர்த்தியம். பிற்பாதியில் ஒட்டாமல் வரும் பாடல் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.

அதிகாரத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் மீதான அத்துமீறலைப் பதிவுசெய்வதோடு, போராடி நீதியைப் பெறமுடியும் என்னும் நம்பிக்கையை விதைத்திருக்கும் ‘ஜெய்பீம்’ கொண்டாடப்படவேண்டிய திரைப்படம்.

-விகடன்
2021.11.03

தமிழின் சிறந்த திரைப்படங்களின் வரிசையில் சேர்கிறது, ஜெய் பீம்

முரளிதரன் காசி விஸ்வநாதன்

நடிகர்கள்: சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், இளவரசு; ஒளிப்பதிவு: எஸ்.ஆர். கதிர்; இசை: ஷான் ரோல்டன்; இயக்கம்: த.செ. ஞானவேல். வெளியீடு: அமெஸான் பிரைம் ஓடிடி.

விருத்தாச்சலத்தில் உள்ள கம்மாபுரத்தில் 1993ஆம் ஆண்டு பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவர் திருட்டுக் குற்றச்சாட்டின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த விவகாரத்தை பின்னணியாகக் கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் ‘ஜெய் பீம்’.

ஒரு நாள் ராஜாக்கண்ணு கிடைத்துவிட, குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி அடித்துத் துன்புறுத்துகிறார்கள். பிறகு, ராஜாக்கண்ணுவும் அவருடன் லாக்கப்பில் இருந்த அவரது உறவினர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டதாகச் சொல்கிறது காவல்துறை. இந்த விவகாரத்தைக் கையில் எடுக்கிறார் வழக்கறிஞர் சந்துரு (சூர்யா). இதற்குப் பிறகு, என்ன நடக்கிறதென்பது மீதிக் கதை.

தமிழ்நாட்டில் மிகச் சிறுபான்மையான இருளர் பழங்குடியினர் மீதான காவல்துறையின் அத்துமீறலை மையமாகக் கொண்டு, வணிகரீதியான ஒரு திரைப்படத்தை முயற்சிப்பதற்கே மிகப் பெரிய துணிச்சல் வேண்டும்.

பிறகு, அந்த அத்துமீறலையும் நியாயத்தைப் பெறுவதற்கான போராட்டத்தையும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று சிறப்பான சினிமா திரைக்கதையாக உருவாக்க வேண்டும். த.செ. ஞானவேலிடம் அந்தத் துணிச்சலும் இருக்கிறது, சிறந்த சினிமாவாக உருவாக்கும் நேர்த்தியும் இருக்கிறது.

படம் துவங்கி சில நிமிடங்களிலேயே தடதடக்க ஆரம்பித்துவிடுகிறது திரைக்கதை. காவல்துறையினர் இருளர் பழங்குடியினரின் பகுதிக்குள் வந்து, அந்த மக்களை இழுத்துச் செல்லும்போது, நம்மையே இழுத்துச் செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது காட்சியமைப்பு.

இருளர்கள் மீது தொடர்ந்து சுமத்தப்படும் பொய் வழக்குகள், காவல்நிலையத்தில் அவர்கள் மீது நடத்தப்படும் அத்துமீறல்கள், சித்ரவதைகள், மரணங்கள் என ஒவ்வொரு தருணமும் அதிரவைக்கிறது.

பொதுவாக இம்மாதிரியான சித்ரவதைகளையும் பாதிக்கப்பட்டவர்களின் குரலையும் தொடர்ந்து காட்டும்போது சீக்கிரமே ஓர் ஆவணப்படம் பார்ப்பதுபோன்ற உணர்வை ஏற்பட்டுவிடும். ஆனால், இந்தப் படத்தில் கதாநாயகியின் பாத்திரம் உடனடியாக நியாயத்தை நோக்கிப் போராட ஆரம்பிப்பதால், படம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து, ஒரு விறுவிறுப்பான த்ரில்லராக மாறுகிறது. எந்த இடத்திலும் கூடுதலாக ஒரு காட்சியோ, வசனமோ இல்லை.

அடிப்படையில் பார்த்தால், இந்தப் படம் ஒரு Court – Drama வகையைச் சேர்ந்ததுதான். ஆனால், பாதிக்கப்படும் மக்களின் துன்பமும் நியாயத்தை நோக்கிய அவர்களது போராட்டமும் அவை படமாக்கப்பட்ட விதமும் இந்தப் படத்தை வேறு உயரத்திற்கு நகர்த்தியிருக்கின்றன.

இந்தப் படத்தில் இரண்டு விஷயங்கள் முக்கியமாகப்படுகின்றன. ஒன்று, அதிகாரக் கட்டமைப்பு தன்னைச் சார்ந்தவர்களைப் பாதுகாக்க என்னவெல்லாம் செய்யும் என்பதை துலக்கமாகக் காட்டுவது. இரண்டாவதாக, அரசால் அநியாயம் இழைக்கப்பட்டவர்கள் போராடினால், அது ஒரு நெடிய போராட்டமாக இருந்தாலும் உரிய நியாயம் கிடைக்காமல் போகாது என்பதைச் சொல்லி, ஒரு நேர்மறையான உணர்வை ஏற்படுத்துவது. அந்த வகையில் இந்தப் படம் முக்கியமான ஒரு திரைப்படம்.

இயக்குநர் ஞானவேலுக்கு அடுத்தபடியாக படத்தில் பாராட்டத்தக்கவர், நாயகியாக நடித்திருக்கும் லிஜோமோல் ஜோஸ். செங்கேணியாகவரும் லிஜோமோல், படம் முழுவதையும் ஆக்கிரமித்திருக்கிறார். எந்த இடத்திலும் ஆர்ப்பாட்டமில்லாத அவரது நடிப்பைப் பார்க்கும்போது, இருளர் பழங்குடியைச் சேர்ந்த ஒருவரே அந்தப் பாத்திரத்தில் நடித்திருப்பதாகத்தான் கருதத் தோன்றுகிறது.

இதற்கடுத்தபடியாக, சிறப்பாக நடித்திருப்பது நாயகனாக வரும் மணிகண்டன். வேறொருவரை இந்தப் பாத்திரத்தில் நினைத்துப்பார்க்க முடியவில்லை. படத்தில் விசாரணை அதிகாரி பெருமாள்சாமியாக வருகிறார் பிரகாஷ் ராஜ். அவரது நடிப்பைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஒரு காட்சியில், கதாநாயகனை சித்ரவதைசெய்து கொலைசெய்த மூன்று காவலர்களையும், கடந்து செல்லும்போதே அவர் பார்க்கும் பார்வை, அட்டகாசம்.

வழக்கறிஞர் சந்துருவாக நடித்திருக்கிறார் சூர்யா. அவருக்கும் ஒரு குறிப்பிடத்தக்கபடம் இது. அரசு வழக்கறிஞராக வருகிறார் குரு சோமசுந்தரம். கேட்கவா வேண்டும்!

இந்தப் படத்தில் திரைக்கதையைப் போலவே, மிக வலுவான இரண்டு அம்சங்கள் இசையும் ஒளிப்பதிவும். அதை இருவருமே சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். பாடல்களும்கூட படத்தோடு பொருந்திப்போகின்றன.

தமிழின் சிறந்த திரைப்படங்களின் வரிசையில் சேர்கிறது, இந்த “ஜெய் பீம்”.

பிபிசி தமிழ்
2021.11.01

Source: chakkaram.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...