இலங்கை நெருக்கடி வெளிப்படுத்தும் பாடம்-பேராசிரியர் பிரபாத் பட்நாயக் (Prabhat Patnaik)


லங்கை பொருளாதார நெருக்கடி பற்றிய தகவல்களும் உண்மைகளும் இப்போது நிறைய எழுதப்பட்டு வருகின்றன. அந்நாட்டில் அதிகரித்து வந்துள்ள வெளிநாட்டுக் கடன், மதிப்பு கூட்டு வரி சலுகைகளால் உருவான நிதி பற்றாக்குறை, உள்நாட்டுச் செலவுகளுக்காக வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட கடன்கள், பண மதிப்பில் ஏற்பட்ட சரிவு ஆகியவற்றோடு பெருந்தொற்றுக் காலத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாதிப்பால் வெளிநாட்டு வருவாய் குறைந்தது. இலங்கை பண மதிப்பு வீழ்ச்சியைத் தொடர்ந்து வெளிநாட்டு வாழ் இலங்கை மக்கள் அதிகாரப்பூர்வமான முறையில் இலங்கைக்கு பணத்தை அனுப்பாமல் மறைமுகமாக அனுப்பியதால் அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக் குறை நிலையை எட்டியது. இதை சரி செய்வதற்காக இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை விவசாயத்தில், உணவு உற்பத்தியை கடுமையாக பாதித்தது. இவை உட்பட தொடர் பிரச்சனைகளால் தற்போது இலங்கை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

 

தென்கிழக்கு ஆசியாவில் ஒரு ‘மக்கள் நல அரசு’ கோட்பாட்டின்கீழ் செயல்பட்ட இலங்கை ஒரு நோயாளி நாடாக சரிவை சந்தித்ததற்கு யார் பொறுப்பு? இக் கேள்விக்கு ராஜபக்சே அரசு தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒப்புக் கொள்கிற அதேவேளையில் குறிப்பாக அரசின் குற்றங்கள் எங்கே நிகழ்ந்தன என்பதில் பல கருத்து முரண்பாடுகள் உள்ளன.

அமெரிக்க நிறுவனங்களும் புதிய பனிப்போர் நாடுகளும் சீனாவுடன் மேற்கொண்ட பொருளாதார உறவுகளுமே நெருக்கடிக்கு காரணம் என்று இலங்கை அரசு மீது பலரும் குற்றம் சாட்டுகிறார்கள் (இது போன்றவற்றை இனி வரும் நாட்களில் அதிகமாக கேட்கலாம்). மற்றவர்கள் இலங்கையின் வெளிநாட்டு கடன் அதிகரித்து கொண்டு வரும்போது அரசாங்கம் தூங்கி விட்டது என்கிறார்கள். சில இந்திய விமர்சகர்கள் இலங்கையைப் போலவே இந்தியாவின் சில மாநில அரசுகளும் சரிவை நோக்கிச் செல்கின்றன; அது போன்ற நெருக்கடி வருவதற்கு முன்பு சரி செய்ய வேண்டும் என்கிறார்கள். இந்த விபங்களைத் தருகிற அனைவருமே இலங்கையின் நெருக்கடிக்கு நவீன தாராளமயக் கொள்கைகள் எந்த அளவுக்கு காரணம் என்பதைச் சொல்லாமல் தவிர்க்கிறார்கள்.

நவீன தாராளமயத்தின் பங்கு

இதைச் சொல்வதன் மூலம் நவீன தாராளமயத் தின் மந்திரத்தை திரும்பச் சொல்வதல்ல; நவ தாராள மயத்தில் ‘நல்ல காலங்களில்’ கூட தொழிலாளர்களின் துன்ப துயரங்கள் தீவிரமடைந்தன. நவீன தாராளமய உற்பத்தி முறை சிறு பொருளாதார நாடுகளை பாதித் தன. அவர்களுடைய நல்ல நிலைமை அனைத்தும் ஒரு நொடிப் பொழுதில் தலைகீழாக மாறிவிடும். நவீன தாராளமயத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட தற்செயலான நெருக்கடி என்றே நான் அதை சொல்வேன். இது நவீன தாராளமயத்தின் இயல்பான ஒன்று. இது உலக பொருளாதாரத்தையோ அல்லது அதன் பெரும்பகுதியையோ பாதிக்காது. சிற்சில நேரங்களில் அதில் சிக்கிக் கொள்ளும் குறிப்பிட்ட நாடுகளை மட்டுமே பாதிக்கிறது. இந்த அர்த்தத்தில் கிரீஸ் நெருக்க டியும் ஒரு தற்செயலான நெருக்கடியே. கிரீஸ் நாடு பெரும் வெளிநாட்டுக் கடனில் மூழ்கிக் கொண்டி ருந்தபோது கடன் பிரச்சனை உடனடியாக முன்னுக்கு வரவில்லை. கடன் பிரச்சனை முன்னுக்கு வந்தபோது ஏற்கனவே அந்த நாடு திவாலான நிலைக்கு தள்ளப்பட்டு, கடன்களை தள்ளுபடி செய்யமுடியாத பொருளாதார நிலைமைக்கு தள்ளப்பட்டு இருந்தது. இவை அனைத்தும் விபத்து போல நடந்ததல்ல; இவை நவ தாராளமய கொள்கைகளோடு பிணைக்கப்பட்ட ஒன்றா கும். ஏனெனில் கடன் வாங்குவதற்கு முன்பாக எவ்வளவு அதிகப்படியான கடன் தொகை வாங்கப்பட்டுள்ளது என்பதை திடீர் நெருக்கடிக்கு முன்பாக தெரிந்து கொள்ள வழியில்லாத நிலையில் இது எழுகிறது.

நெருக்கடி வருவதை முன்னரே அறிந்து கொண் டோம் என்று பல தளங்களில் இருந்து சிலர் வாதிட லாம். ஆனால் தேர்தல் ஜனநாயகத்தில் ஒரு அர சாங்கம் – ஏன், ஒரு பிற்போக்கு அரசாங்கம் கூட சிற்சில வரையறைகளுக்கு உட்பட்டுத்தான் செயல்பட முடியும். அதனால் அதனுடைய செலவுத் திட்டங்களை திரும்பப் பெறவோ அல்லது சேம நலத் திட்ட செலவு களை குறைக்கவோ (அது வரையறுக்கப்பட்ட தொகை யாக இருந்த போதும்) ஓய்வூதியர்களின் பென்சன்களை வெட்டவோ அல்லது பள்ளி கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்களின் சம்பளத்தை, மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் சம்பளத்தை வெட்டவோ முடியாது. மாறாக, அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்படும் தற்காலிக பிரச்சனைகள் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பொருளாதார அனுபவத்திலிருந்து ஒரு அரசு உணர்ந்து கொள்ள முடியும். அதாவது, அந்நியக் கடன்கள் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை வெகு சுலபமாக கையாள முடியும்; ஏனெனில் அதனால் உருவாகும் நெருக்கடியை சந்திக்க முடியும். அதற்கு மாறாக பொதுச் செலவுகளை வெட்டுவதன் மூலம் மக்களுக்கு துயரங்களை உருவாக்கும்; மேலும் நெருக்கடியை நோக்கித் தள்ளும்.

இப்படிச் சொல்வதன் மூலமாக ராஜபக்சே அரசை அவதூறுகளிலிருந்து விடுவிப்பது என்பதல்ல. மறைமுக வரியை வெட்டுவதால் நிதிப் பற்றாக்குறை அதிகரித்தது. ஆனால் அதை நேர்முக வரியை உயர்த்துவதன் மூலமாக சரிசெய்வது (பின்னர் செல்வ வரி உயர்த்தப்பட்டாலும் அதுவும் மிகக் குறைவானதே) இல்லையென்பதால் நெருக்கடி முற்றுவது தெளிவாகிறது. இலங்கை அரசின் தவறுகளை புறந்தள்ளிவிட முடியாது என்ற போதிலும், இலங்கை மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி அவர்கள் வீதிக்கு தள்ளப்பட்டுள்ள நிலைமைக்கு நவ தாராளமயத்தின் அடிப்படையான விதிகளே காரணம் என்பதைப் புறக்கணித்துவிட்டு மிக சுலபமாக கடந்து செல்லக்கூடாது.

மக்கள் நல அரசு (எதிர்) தாராளமயம்

இலங்கையின் தற்போதைய நெருக்கடியிலிருந்து இரண்டு தெளிவான பாடங்களை கற்றுகொள்ள வேண்டும். முதலாவது ஒரு பொது நல அரசானது நவ தாராளமயத்துடன் போட்டியிட முடியாது என்பதாகும். இலங்கையானது மற்ற மூன்றாம் உலக நாடுகளைப் போலவே ஒரு பொதுநல அரசாக கடந்த காலத்தில் கட்டமைக்கப்பட்டது. நவதாராளமயமற்ற ஆட்சியின் போது சில பொதுநல அரசுகள் திடீரென அந்தியச் செலாவணி வருவாயில் சரிவை சந்திக்கும்; அப்போதெல்லாம் அந்நியக் கடன்களை சார்ந்து நிற்காமல் சில அத்தியாவசியமற்ற இறக்குமதிகளை வெட்டிக் குறைத்து சரி செய்து கொண்டன. ஆனால் நவ தாராளமயத்தின் கீழ் அரசுகள் செலவுகளை வெட்ட வேண்டும்; அதன் விளைவாக அரசின் நல நடவடிக்கைகள் குறையும். இது பணப் புழக்கத்தை குறைத்து, பொருட்களுக்கான கிராக்கியில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். எனவே இறக்குமதி அல்லது அந்நிய கடன்கள் அதிகரிப்பதன் மூலமாக நலத்திட்ட நடவடிக்கைகள் உட்பட அரசின் செலவுகள் கூடுவதை சமாளிக்க வேண்டும். எவ் வாறாயினும் அந்நிய செலாவணி வருவாயில் சற்று கால தாமதம் ஏற்படுமானால் அதன் பிறகு மிக குறுகிய நேரத்திற்குள் கடன் நிபந்தனை கடுமையாகும். நாடு மேலும் கடன் பொறிக்குள் தள்ளப்படுவதோடு நலத்திட்ட நடவடிக்கைகள் தொடருவது நிச்சயமாக சாத்தியமற்றதாகி விடும்.

பல பொருளாதாரவாதிகளின் வாதத்திற்கு எதிரானதாக இது இருக்கும். அவர்களைப் பொறுத்தளவில், நவ தாராளமயத்தின் கீழ் முதலீட்டாளர்களுக்கான நட்பான சூழலை உருவாக்குவதன் மூலம் அந்நிய மூல தனத்தை கவரமுடியும்; மேலும் உள்நாட்டு முதலீடும் ஊக்கமடையும்; இதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும்; அது அரசுகளின் பொதுநல நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மிக எளிதாக இருக்கும் என்று நம்புகிறார்கள். இந்த விவாதத்தில் இரு வெளிப்படையான தவறுகள் உள்ளன. முதலாவது பணக்காரர்களுக்கு ஏற்றவாறு வரியினை விதிக்காமல் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் உயர்வதன் முலமாக மட்டும் பொதுநல அரசை உருவாக்க முடியாது. மேலும் முதலீட்டாளர்களுக்கான சூழலை பாதுகாப்பதன் பெயரால் பணக்காரர்கள் மீது வரியை ஒருபோதும் உயர்த்த முடியாது. இது நலத்திட்டங்களுக்கான விரிவான செலவுகளை முறியடித்துவிடும்.

இரண்டாவதாக சற்று முன் விவாதித்தது போலவே, நவ தாராளமய நாட்களுக்கு முன்பாக துவக்கப்பட்ட நலத்திட்டங்கள் நவ தாராளமய காலத்திலும் தொடருமானால் நவ தாராளமயத்திற்கும் பொதுநல அரசின் வாழ்வாதாரத்திற்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் ஒரு சிறு பொருளாதார அதிர்ச்சி ஏற்படுமானால் இதில் ஏதேனும் ஒன்றை உடனடியாக செயலிழக்கச் செய்து விடும்.

‘மாற்று’ இல்லை என்றால் தப்பிக்க முடியாது

நவ தாராளமயத்தின் கீழ் ஏதாவது ஒருவகையில் தற்செயலான நெருக்கடிக்கு ஒவ்வொரு நாடும் பாதிக் கப்படுகிறது என்பது தான் இலங்கையின் அனுபவத்திலிருந்து கற்க வேண்டிய பாடம். நவ தாராளமயத்தின் பிடியில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் தற்போது இலங் கையில் நடந்து வரும் நிகழ்ச்சிப்போக்குகள் நிச்சயம் நடக்கும். நவதாராளமய ஆட்சிக்குள் பொது செலவீனங்களை வெட்டுவது மற்றும் பொதுநல அரசு நடவடிக்கைகளை குறைப்பதன் மூலமாக நெருக்கடியிலிருந்து வெளியேறுவது என்ற வழியில் மட்டுமல்ல; நவ தாராளமயத்திலிருந்து மாநில அரசுகளும் கூட ஒட்டுமொத்தமாக வெளியேற வேண்டும் என பெரும்பாலான இந்திய விமர்சகர்கள் கோருகிறார்கள். உண்மையில் நவ தாராளமயத்திற்கு மாற்று இல்லாத நிலையில் அது அவ்வளவு எளிதாக இருக்காது. நவ தாராளமயத்தின் பிடியில் அந்த நாட்டை கொண்டு சென்றதாக இலங்கை அரசாங்கத்தை குற்றம் சாட்டலாம். ஆனால் அதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை. சர்வதேச நிதி மூலதனம் நாடுகளை நவ தாராளமயத்தினை கட்டாயமாக ஏற்க செய்கிறது.

மூலம்: Reflections on the Sri Lankan Economic Crisis
தமிழில் : எஸ்.ஏ.மாணிக்கம்

Source: chakkaram.com

 


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...