மே தின வரலாறு-அலெக்சாண்டர் ட்ராச்டென்பர்க் (ALEXANDER TRACHTENBERG)

குறைந்த வேலை நேரத்துக்காக நடத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கை மிகப்பெரிய அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. அமெரிக்காவில் தொழிற்துறை ஒரு அமைப்பாக வளர்ந்த பொழுது இப்போராட்டம் வெளிப்பட்டது.

இந்நாட்டில் (அமெரிக்காவில்) ஆரம்ப நாட்களில் பல வேலை நிறுத்தங்கள் நிகழ்ந்தன. ‘அதிக ஊதியம் வேண்டும்’ என்பதுதான் இந்த வேலைநிறுத்தங்களில் முக்கிய கோரிக்கையாக எழுப்பப்பட்டது. இருந்த போதிலும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வகுத்த போதெல்லாம் குறைந்த வேலை நேரம், சங்கம் சேரும் உரிமை போன்ற பிரச்சினைகளை முன்வைத்தனர். தொழிலாளர்கள் வெகுவாக சுரண்டப்பட்ட காலகட்டம் அது. நீண்ட வேலை நேரங்கள் அவர்களை மேலும் துன்பப்படுத்தின. எனவே வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும் என்பது கோரிக்கையாக எழுப்பப்பட்டது.

‘அதிகாலை முதல் அந்திசாயும் வரை’ என்பதுதான் அப்போதெல்லாம் வேலைநாள். இதனால் ஏற்பட்ட மனக்குமுறல்களை அமெரிக்கத் தொழிலாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே வெளிக்காட்டினர். பதினாறு, பதினேழு ஏன் பதினெட்டு மணிநேர வேலை என்பதெல்லாம் அப்போது சாதாரண விஷயங்கள், 1806-ம் ஆண்டு பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களின் தலைவர்கள் மீது சதி வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது தொழிலாளர்கள் பத்தொன்பது, இருபது மணி நேரங்கள் வேலை வாங்கப்பட்டார்கள் என்ற விஷயம் வெளியே வந்தது.

1820 மற்றும் 30-களில் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று பற்பல வேலைநிறுத்தங்கள் நிகழ்ந்தன. பத்து மணி நேர வேலைநாள் என்ற கோரிக்கை பல தொழில் மையங்களில் முன் வைக்கப்பட்டது. பிலடெல்பியா நகர இயந்திரத் தொழிலாளர்களின் சங்கம்தான் உலகின் முதற் தொழிற்சங்கமாக கருதப்படுகிறது. இந்த தொழிற்சங்கம் உருவான இரு ஆண்டுகளுக்குப் பின்புதான் இங்கிலாந்தில் தொழிற்சங்கங்கள் உருவாகத் துவங்கின. பத்து மணி நேர வேலை நாள் என்ற கோரிக்கையை முதன் முதலாக வைத்த பெருமை இச்சங்கத்துக்கே உண்டு. 1827-ல் பிலடெல்பியாவில் கட்டிடங்கட்டும் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தில்தான் இந்தக் கோரிக்கை பிரதானமாக வைக்கப்பட்டது. 1834-ல் நியுயார்க்கில் ரொட்டி தொழிலாளர்கள் எகிப்திய அடிமைகளைக் காட்டிலும் அதிகம் துன்புற்றனர். நாளொன்றுக்கு அவர்கள் பதினெட்டிலிருந்து இருபது மணி நேரம் வேலை செய்ய வேண்டி வந்தது என்ற செய்தியை அப்போது வெளியான ‘தொழிலாளருக்காக வாதிடுபவன்’ (Workingmen’s Advocate) என்ற பத்திரிகை வெளியிட்டது. பத்துமணி நேர வேலை நாளுக்கான இப்போராட்டங்கள் விரைவிலேயே ஒரு இயக்கமாக உருவெடுத்தன். 1837-ல் ஏற்பட்ட நெருக்கடி ஒரு தடையாக இருந்தபோதிலும் வேன் பியுரன் தலைமையிலான அரசாங்கம், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பத்து மணி நேர வேலைநாள் அறிவித்தது. எல்லோருக்கும் பத்து மணி நேர வேலை நாள் என்பதற்காக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. பல தொழிற்சாலைகளில் இக்கோரிக்கை வெற்றியடைய, உடனேயே தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை நாள் என்ற கோஷத்தை எழுப்பினர்.

தொழிற்சங்க இயக்கத்தின் அதிவேக வளர்ச்சியால் 1850-களில் இக்கோரிக்கை புதிய உத்வேகத்தை அடைந்தது. 1857-ல் ஏற்பட்ட நெருக்கடி இந்த உத்வேகத்திற்கு ஒரு தடையானது. இருந்தபோதிலும் நன்கு வளர்ச்சி பெற்ற தொழிற்சங்கங்கள் அதற்கு முன்பே இக்கோரிக்கையை அடைந்தன. இவ்வாறு குறைந்த வேலை நேரத்துக்கான போராட்டம் அமெரிக்காவில் மட்டும் நிகழவில்லை. முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்கள் சுரண்டப்பட்ட எல்லா வளரும் நாடுகளிலும் இப்போராட்டங்கள் நிகழ்ந்தன. உதாரணமாக வெகு தூரத்தில் இருந்த ஆஸ்திரேலியாவில் கட்டிடத் தொழிலாளர்கள் ‘8 மணி நேர வேலை, 8 மணி நேர பொழுதுபோக்கு, 8 மணி நேர ஓய்வு’ என்ற கோரிக்கையை முன் வைத்து 1858-ல் அதை அடைவதில் வெற்றியும் பெற்றனர்.

எட்டு மணி நேர இயக்கம் அமெரிக்காவில் துவங்கியது.

1884-ல் அமெரிக்காவில் 8 மணி நேர இயக்கத்தின் போது வெடித்த போராட்டங்கள்தான் மே தினம் உருவாவதற்கு நேரடியான காரணமாய் அமைந்தன. ஆனாலும் இதற்கு ஒரு தலைமுறை முன்பே ‘தேசிய தொழிற்சங்கம்’ குறைந்த வேலை நேரத்துக்கான கோரிக்கையை முன்வைத்து பரந்த இயக்கத்தையே நடத்தியது. ‘தேசிய தொழிற் சங்கம்’ அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணமிக்க ஸ்தாபனமாக அப்போது விளங்கியது.

1861-62-ல் உள்நாட்டுப் போர் துவங்கியது. இதற்கு சற்று முன்பே துவங்கப்பட்ட வார்ப்பட அச்சு தொழிலாளர் சங்கம், இயந்திர தொழிலாளர்கள் சங்கம், கொல்லர்கள் சங்கம் போன்ற தேசிய தொழிற்சங்கங்கள் அப்போது மறையத் துவங்கின. ஆனபோதிலும் அதற்கடுத்த சில ஆண்டுகளில் பல உள்ளூர் தேசிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியமும் எழுச்சியும் உருவானது. இவ்வாறு பல தொழிற்சங்க பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து 1866, ஆகஸ்டு 20-ஆம் நாள் பால்டிமோர் என்னுமிடத்தில் தேசிய தொழிற்சங்கத்தை உருவாக்கினார்கள். இதன் தலைவராக வில்லியம் எச. சில்விஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மாற்றியமைக்கப்பட்ட வார்ப்பட அச்சு தொழிலாளர் சங்கத்தின் தலைவராவார். தொழிற்சங்க இயக்கத்தில் முக்கியமானவராய் கருதப்பட்ட இவர் ஒரு இளைஞர். இவர் லண்டனில் இருந்த முதலாவது இனடர் நேஷனல் தலைவர்களோடு தொடர்பு கொண்டிருந்தார். இதன் காரணமாக தேசிய தொழிற்சங்கத்துக்கும் இன்டர்நேஷனலின் பொதுக்குழுவுக்கும் இடையே உறவை ஏற்படுத்த அவரால் முடிந்தது.

தேசிய தொழிற்சங்கத்தின் முதல் மாநாடு 1866-ல் நடைபெற்றது. அதில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“அமெரிக்கா முழுமைக்கும் 8 மணி நேர வேலைநாள் என்பதை சட்டமாக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே முதலாளித்துவ அடிமைத்தனத்திலிருந்து இந்நாட்டின் உழைப்பை விடுவிக்க முடியும். இந்த மாபெரும் பலனையடைய நாம் நம்முடைய சக்தி அனைத்தையும் ஒன்று திரட்ட தீர்மானிக்கிறோம்”.

மேலும் இம்மாநாட்டில் 8 மணி நேர வேலை நாளை சட்டபூர்வமாக்க சுயேச்சையான அரசியல் நடவடிக்கை வேண்டும் மற்றும் தொழிலாளர் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டன. தேசிய தொழிற்சங்க போராட்டங்களினால் எட்டு மணி நேர குழுக்கள் ஏற்பட்டன. மேலும் இச்சங்கத்தின் அரசியல் நடவடிக்கைகளினால் பல மாநில அரசுகள் அரசு வேலைகளில் எட்டு மணி நேர வேலை நாளை அமுல்படுத்தின. 1868-ல் அமெரிக்க காங்கிரசும் இதே போன்ற ஒரு சட்டத்தை இயற்றியது. போஸ்டனைச் சேர்ந்த இயந்திர தொழிலாளியான ‘ஐராஸ் டூவர்டு’ என்பவர்தான் இந்த எட்டு மணி நேர இயக்கத்தின் எழுச்சியூட்டும் தலைவராக விளங்கினார். ஆரம்பத்தில் தொழிலாளர் இயக்கத்தின் கொள்கைகள், திட்டங்கள் பழமையானதாக இருந்தன. இவை எல்லா நேரங்களிலும் சரியாக இருந்தன என்றும் சொல்ல முடியாது. ஆனாலும் அடிப்படியில் இந்த இயக்கம் பாட்டாளி வர்க்கத்தின் வலுவான அடிப்படைகளைக் கொண்டிருந்தது. மேலும் திருத்தல்வாத தலைவர்கள், முதலாளித்துவ அரசியல்வாதிகள் இந்த இயக்கத்தில் ஊடுருவாமல் இருந்திருப்பார்களேயானால் இந்த இயக்கம் போர்க்குணமிக்க தொழிலாளர் இயக்கத்தின் ஆரம்ப கட்டமாக இருந்திருக்கும். இவ்வாறு நான்கு தலைமுறைகளுக்குப் பின் தேசிய தோழிற்சங்கமானது முதலாளித்துவ அடிமைத்தனத்திற்கெதிராகவும் சுயேச்சையான அரசியல் நடவடிக்கைக்காகவும் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொண்டது.

சில்விஸ் தொடர்ந்து லண்டனிலுள்ள இன்டர்நேஷனலோடு தொடர்பு கொண்டிருந்தார். இவரைத் தலைவராகக் கொண்ட 1967-ல் நடைபெற்ற தேசிய தொழிற்சங்க மாநாடு சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கத்தோடு ஒத்துழைக்க வேண்டும் என முடிவு செய்தது. 1869-ல் இன்டர்நேஷனலின் பொதுக்குழுவின் அழைப்பிற்கிணங்க பேஸிலில் நடைபெற்ற இண்டர்நேஷனல் காங்கிரசுக்கு ஒரு பிரதிநிதியை அனுப்ப முடிவு செயதது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மாநாட்டிற்குச் சற்று முன்பு சில்விஸ் மரணமடைந்தார். எனவே சிக்காகோவிலிருந்து வெளிவந்த ‘வொர்க்கிங்மென்ஸ் அட்வகேட்’ பத்திரிகையின் ஆசிரியரான ஏ.சி.காமெரான் பிரதிநிதியாக அனுப்பப்பட்டார்.

மாநாட்டில் பொதுக்குழு அந்த நம்பிக்கையூட்டும் இளம் அமெரிக்க தொழிலாளர் தலைவனுக்கு ஒரு விஷேச தீர்மானத்தில் அஞ்சலி செலுத்தியது. ”பாட்டாளி வர்க்க ராணுவத்தின் தளபதியாக பத்தாண்டு காலம் மாபெரும் திறமையோடு பணியாற்றிய சில்விஸ், எல்லோருடைய கவனமும் திரும்பும் வகையில் செயல்பட்டவர். ஆம் அந்த சில்விஸ்தான் இறந்து விட்டான்” என்றது அஞ்சலி தீர்மானம். சில்விஸின் மறைவு தேசிய தொழிற்சங்கத்தின் அழிவுக்கு ஒரு காரணமாகி பின்னால் அது மறையவும் காரணமாயிற்று.

எட்டு மணி நேர இயக்கம் குறித்து மார்க்ஸ்

1866-ம் ஆண்டு எட்டு மணி நேர வேலை நாள் என்ற முடிவை தேசிய தொழிற்சங்கம் எடுத்தது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெனிவாவில் கூடிய இன்டர்நேஷனலின் காங்கிரசும் இதே கோரிக்கையைப் பின்வருமாறு முழங்கியது.

”வேலை நாளுக்கு சட்டபூர்வமான அளவு முதலாவது தேவையாகும். இது இல்லாமல் தொழிலாளி வர்க்க முன்னேற்றம் மற்றும் விடுதலைக்கு எடுக்கப்படும் எந்த முயற்சியும் முழுமையாக இருக்காது…. வேலை நாளுக்கான சட்டபூர்வ அளவு எட்டு மணி நேரமாக இருக்க வேண்டும் என்று இம்மாநாடு முன் மொழிகிறது.”  தேசிய தொழிற்சங்கத்தின் இந்த எட்டுமணி நேர இயக்கத்தைக் குறித்து மார்க்ஸ் 1867-ல் வெளியான மூலதனம் புத்தகத்தில் ‘வேலை நாள் குறித்து’ எனும் தலைப்பின் கீழ் குறிப்பிடுகிறார். கறுப்பு மற்றும் வெள்ளை தொழிலாளர்கள் வர்க்க ஒற்றுமையைப் பற்றிய அந்த புகழ்பெற்ற பத்தியில் பின்வருமாறு எழுதுகிறார். ”அமெரிக்க ஐக்கிய குடியரசின் ஒரு பகுதியை அடிமைத்தனம் பிடித்திருக்கும் வரையில் எந்த விதமான சுயேச்சையான தொழிலாளர் இயக்கமும் முடக்கப்பட்டே இருந்தது. தொழிலாளர்களில் ஒரு பகுதி கறுப்பு இனத்தவர் என்று முத்திரையிடப்பட்டிருக்கும் வரையில் வெள்ளைத் தொழிலாளர்கள் தங்களுக்குத் தாங்களே விடுதலை தேடிக் கொள்ள முடியாது. ஆனால் அடிமைத்தனத்தின் அழிவிலிருந்துதான் புதிய உத்வேகமுள்ள வாழ்க்கை பிறந்தது. உள்நாட்டுப் போரின் முதல் பலனே 8 மணி நேர வேலை நாளுக்கான போராட்டமாகும். இது ஒரு இயக்கமாக அதிவேகத்துடன் அட்லாண்டிக் முதல் பசிபிக் வரையிலும், நியூ இங்கிலாந்து முதல் கலிபோர்னியா வரையிலும் பரவியது.”

இருவார வித்தியாசத்தில் நடைபெற்ற பால்டிமோர் தொழிலாளர் மாநாடும், ஜெனிவா இன்டர்நேஷ்னல் காங்கிரசும் ஒரே சமயத்தில் எட்டு மணி நேர வேலை நாளை முன் மொழிந்தன என்பதை மார்க்ஸ் சுட்டிக் காட்டுகிறார். இவ்வாறு அட்லாண்டிக்கின் இருபுறமும் உற்பத்தி முறை நிலைமையால் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் இயல்பாக ஏற்பட்ட வளர்ச்சி ஒரே விதமான இயக்கத்தை அதாவது எட்டு மணி நேர வேலை நாளுக்கான இயக்கத்தை உருவாக்கியது.

ஜெனிவா காங்கிரஸ் முடிவு எவ்வாறு அமெரிக்க முடிவோடு ஒத்துப் போகிறது என்பதை தீர்மானத்தின் பின்வரும் பகுதி காட்டுகிறது. ”வட அமெரிக்க ஐக்கிய நாட்டு தொழிலாளர்களின் பொதுவான கோரிக்கையாக இந்த அளவு இருப்பதால், இந்த காங்கிரஸ் இந்தக் கோரிக்கையை உலகத்தின் அனைத்து தொழிலாளர்களுக்குமான பொது மேடையில் முன் வைக்கிறது.”

அமெரிக்க தொழிலாளர் இயக்கத்தின் இந்த செல்வாக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு இதே போன்ற காரணங்களுக்காக இன்னும் வேகமாக சர்வதேச காங்கிரசில் செலுத்தப்பட்டது.

அமெரிக்காவில் மே தினம் பிறந்தது

முதல் இன்டர்நேஷனல் 1872-ல் தன் தலைமையகத்தை லண்டனிலிருந்து நியூயார்க்கிற்கு மாற்றியது. அது அப்போது சர்வதேச ஸ்தாபனமாக விளங்கவில்லை. பின் 1876-ல் இது அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டது. பின் இது மாற்றியமைக்கப்பட்டு இரண்டாவது இன்டர்நேஷனல் என்று அழைக்கப்பட்டது. இதன் முதல் மாநாடு 1889-ல் பாரிஸில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தான் மே முதல் நாள் என்பது உலகத் தொழிலாளர்கள் தங்கள் அரசியல் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் கீழ் மிக முக்கிய அரசியல் கோரிக்கையாக 8 மணி நேர வேலைநாளுக்கு போர்க்குரல் கொடுக்க வேண்டிய தினம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் 1884, அக்டோபர் 7-ம் நாள் சிக்காகோவில் அமெரிக்க தொழிலாளர் சம்மேளனம் என்ற அமைப்பின் மாநாடு முடிவுக்கு அடிகோலாக விளங்கியது. அம்மாநாட்டில் அமெரிக்கா மற்றும் கனடா தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அவர்கள் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றினர்.

”1886 மே முதல் நாள் முதல் சட்டபூர்வமான வேலைநாள் என்பது எட்டு மணி நேரம்தான் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு தீர்மானிக்கிறது. எனவே எல்லா தொழிலாளர் அமைப்புகளும் தங்கள் அதிகார வரம்பிற்குரிய இடத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இத்தீர்மானத்திற்கு ஏற்ப தங்கள் சங்க விதிகளை அமைத்துக் கொள்ளுமாறு இம்மாநாடு பரிந்துரைக்கிறது.”

எட்டு மணி நேர வேலை நேரத்தை எப்படி கொண்டு வருவது என்பது பற்றி கூட்டமைப்பு தீர்மானத்தில் ஏதும் சொல்லப்படவில்லை. இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 50,000-க்கு உட்பட்டது. தங்கள் உறுப்பினர்கள் வேலை செய்யும் கடை, ஆலை, சுரங்கங்களில் போராடி இன்னும் அதிகமான தொழிலாளர்களைத் திரட்ட வேண்டும் என்பதை அது அறிந்திருந்தது. அப்போதுதான் எட்டு மணி நேர வேலை நாளை சட்டபூர்வமாக்க வேண்டும் என்பதை அறிவிக்க முடியும் என்பதையும் உணர்ந்திருந்தது. 1886, மே முதல் நாள் 8 மணி நேர வேலைக்காக போராடும் தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டே “தீர்மானத்திற்கேற்ப சங்க விதிகள் அமைய வேண்டும்” என அறிவித்திருந்தது. வேலை நிறுத்தத்தின் போது வெகு நாட்கள் வெளியே தங்க நேரிடலாம். அப்போது சங்கத்தின் உதவி தேவைப்படும். மேலும் இவ்வேலை நிறுத்தம் தேசிய அளவில் நடைபெறுவதாலும் இணைக்கப்பட்டுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் அமைப்புகளும் கலந்து கொள்வதாலும் அவர்கள் விதிப்படி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு தங்கள் உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமாகிறது. இங்கு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்த கூட்டமைப்பானது தற்போது உள்ள அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பை போலவே சுயேச்சையாக கூட்டமைப்பு முறையில் ஏற்பட்டது. எனவே கூட்டமைப்பில் இணைந்த தொழிற்சங்கங்கள் ஒப்புதல் அளித்தால்தான் தேசிய மாநாட்டின் முடிவுகள் அவைகளைக் கட்டுப்படுத்தும்.

மே தின வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்புகள்

1877-ல் மிகப் பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் பத்தாயிரக்கணக்கில் சாலை, ரெயில்வே, மற்றும் உருக்குத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அரசாங்கத்தையும் நகராட்சியையும் எதிர்த்து தீவிர போர்க்குணத்தோடு போரிட்டனர். இவர்களுக்கெதிராக ராணுவம் ஏவப்பட்டது. தொழிலாளர்கள் தொடர்ந்து போராடினர். இப்போராட்டம் தொழிலாளர் இயக்கம் முழுமைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் முதல் மாபெரும் தேசிய அளவிலான வெகுஜன இயக்கமாக விளங்கியது. அரசு மற்றும் முதலாளிகளின் கூட்டுச் சதி காரணமாக இவ்வியக்கம் தோற்கடிக்கப்பட்டது.

இப்போராட்டங்களின் விளைவாக அமெரிக்க தொழிலாளி வர்க்கம் தன் வர்க்க நிலைப்பாடு குறித்து மேலும் தெளிவை அடைந்தது. அதன் போர்குணமும் ஒழுக்கநெறியும் மேலும் செழுமையடைந்தன. இப்போராட்டங்கள் பென்சில்வேனியா சுரங்க அதிபர்களுக்கு ஒரு வகையான பதிலடியாக அமைந்தன.

ஏனெனில் இரண்டாண்டுகளுக்கு முன்புதான் 1875-ம் ஆண்டு சுரங்க தொழிலாளர் சங்கங்களை அழிக்கும் பொருட்டு தீவிர போர்க்குணமுள்ள பத்து தொழிலாளர்களை சுரங்க அதிபர்கள் தூக்குமரத்திலேற்றினார்கள்.

அமெரிக்க தொழிற்துறை மற்றும் உள்நாட்டு சந்தை 1880-90-க்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் தீவிர வளர்ச்சியடைந்தது. ஆனபோதிலும் 1884-85-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஒரு மந்த நிலை நிலவியது. இந்நிலை 1873-ல் ஏற்பட்ட நெருக்கடியின் தொடர்ச்சியாகும். அப்போது வேலையில்லா திண்டாட்டமும் மக்கள் துன்பமும் பெருகியது. இது குறைவான வேலை நாளுக்கான இயக்கத்திற்கு உந்துதல் சக்தியை தந்தது.

கூட்டமைப்பு அப்போதுதான் உருவானது. நைட்ஸ் ஆப் லேபர் என்ற தொழிலாளர் ஸ்தாபனம் அதற்கு முன்பே இருந்தது. அது தொடர்ந்து வளர்ந்து வந்தது. எட்டு மணி நேர வேலை என்ற கோஷத்தின் கீழ் இவ்விரு அமைப்புகளுக்கும் வெளியே உள்ள தொழிலாளர்களை திரட்ட முடியும் என்று கூட்டமைப்பு உணர்ந்தது. 8 மணி நேர வேலை நாள் இயக்கத்துக்கு ஆதரவு தருமாறு ‘நைட்ஸ் ஆப் லேபர்’ ஸ்தாபனத்தை கூட்டமைப்பு கேட்டுக் கொண்டது. அனைத்து தொழிலாளர்களும் பொதுவாக ஒரு நடவடிக்கையில் இறங்கினால்தான் தனக்கு சார்பான பலனை பெற முடியும் என்று கூட்டமைப்பு உண்ரந்திருந்தது.

1885-ல் கூட்டமைப்பு மாநாடு அடுத்த ஆண்டு மே முதல் நாள் வேலை நிறுத்தம் செய்வது பற்றி மீண்டும் எடுத்துரைத்தது. பல தேசிய சங்கங்கள் போராட்டத்துக்கான தயாரிப்புகளில் இறங்கின. குறிப்பாக மரவேலை மற்றும் சிகரெட் தொழிலாளர்கள் தயாரிப்புகளில் இறங்கினார். இந்த போராட்டத்தின் காரணமாக அப்போதிருந்த தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கை வேகமாக வளர்ந்தது. கூட்டமைப்பைக் காட்டிலும் பிரபலமாக விளங்கிய ‘நைட்ஸ் ஆப் லேபரி’ன் உறுப்பினர் எண்ணிக்கை 20 லட்சத்திலிருந்து 70 லட்சத்திற்கு உயர்ந்தது. அதே நேரத்தில் 8 மணி நேர இயக்கத்தையும் அதற்கான நாளையும் நிர்ணயித்த கூட்டமைப்பின் மதிப்பும் உயர்ந்தது. அதன் உறுப்பினர் எண்ணிக்கையும் பெருமளவு உயர்ந்தது. வேலை நிறுத்தத்திற்கான நாள் நெருங்க நெருங்க ‘நைட்ஸ் ஆப் லேபர்’ அமைப்பின் தலைமை, குறிப்பாக, டெரன்ஸ் பெளடர்லி என்பவன் நாச வேலைகளில் இறங்கினான். தன்னுடன் இணைந்துள்ள தொழிற்சங்கங்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாமென ரகசியமாக அறிவுறுத்தினான். இந்த விஷயம் வெளியானதும் கூட்டமைப்பின் புகழ் மேலும் உயர்ந்தது. இரு ஸ்தாபன ஊழியர்களும் போராட்டத் தயாரிப்புகளில் உற்சாகத்தோடு இறங்கினர். எட்டு மணி நேர வேலை நாள் குழுக்களும் சங்கங்களும் பல நகரங்களில் எழுந்தன. தொழிலாளர் இயக்கம் முழுவதும் போர்க்குணத்தின் தன்மை மேலிட்டது. திரட்டப்படாத தொழிலாளர்களையும் இது பற்றிக் கொண்டது. அமெரிக்க தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு புதிய நாள் அப்போது விடிந்து கொண்டிருந்தது.

தொழிலாளர்களின் அப்போதைய மனநிலையை அறிய சிறந்த வழி அவர்களின் போராட்ட அளவையும், ஆழத்தையும் ஆராய்வதே ஆகும். அப்போது நிகழ்ந்த பல வேலை நிறுத்தங்கள் தொழிலாளர்களின் போராட்ட குணத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கின. முந்திய ஆண்டைக் காட்டிலும் 1886 மே முதல் நாளுக்கான வேலை நிறுத்தங்களின் எண்ணிக்கையும் ஏற்கனவே பெருகியது. 1881-84-ல் நிகழ்ந்த வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பின் எண்ணிக்கை 500. வேலை நிறுத்ததில் பங்கு கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 1,50,000. ஆனால் 1885-ல் வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பின் எண்ணிக்கை 700 ஆகவும், பங்கு கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 2,50,000 ஆகவும் உயர்ந்தது. 1886-ல் நடைபெற்றது. கிட்டத்தட்ட 1,572 வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 6 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். 1885-ல் 2,467-ஆக இருந்த பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 1886-ல் 11,562-ஆக உயர்ந்ததிலிருந்து வேலை நிறுத்தங்கள் பரவிய வேகத்தை தெரிந்து கொள்ளலாம். ‘நைட்ஸ் ஆப் லேபர்’ ஸ்தாபனத்தின் நாசவேலை இருந்த போதிலும் 8 மணி நேர வேலை நாளுக்கான போராட்டத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள் என கணக்கிடப்படுகிறது.

இவ்வேலை நிறுத்தத்தின் மையமாக விளங்கியது சிக்காகோ நகரமாகும். இங்கு தான் வேலை நிறுத்த இயக்கம் மிகப் பரவலாக பரவி இருந்தது. மேலும் பல நகரங்களில் மே முதல் நாள் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. நியூயார்க், பால்டிமோர், வாஷிங்டன், மில்வாக்கி, சின்சிநாட்டி, செயின்ட் லூயிஸ், பிட்ஸ்பர்க், டிட்ராய்ட் ஆகிய நகரங்களில் வேலை நிறுத்தங்கள் சிறப்பாக நடைபெற்றன. உதிரி மற்றும் பயிற்சி பெறாத தொழிலாளர்களின் எண்ணிக்கை அப்போது அதிக அளவிலிருந்தது. இவர்களும் இப்போராட்டத்தால் கவரப்பட்டது இவ்வியக்கத்தின் சிறப்பம்சமாகும். ஒரு புரட்சிகரமான உணர்வு நாடு முழுவதும் நிலவியிருந்தது. முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர்கள் இதை சமூகப் போர் என்றார்கள். மூலதனத்தின் மீதான வெறுப்பு என்றார்கள். அப்போது கீழ்மட்ட ஊழியர்களிடையே நிலவியிருந்த அற்புதமான உற்சாகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். மே முதல் தின வேலை நிறுத்தத்தில் பங்கு கொண்ட தொழிலாளர்களில் பாதிப்பேர் வெற்றிகண்டதாக சொல்லப்படுகிறது. மற்ற இடங்களிலும் 8 மணி நேர வேலை நாளை அடைய முடியாவிட்டாலும் ஏற்கனவே இருந்த வேலை நேரத்தில் கணிசமான அளவு குறைக்கப்பட்டது.

சிக்காகோ வேலை நிறுத்தமும் ‘ஹே’ சந்தையும்

சிக்காகோவில் மே முதல் நாள் வேலை நிறுத்தம் மிகத் தீவிரமாக இருந்தது. அப்போது இடதுசாரி தொழிலாளர்கள் இயக்கத்தின் ஒரு மையமாக சிக்காகோ திகழ்ந்தது. தொழிலாளர் இயக்கத்தின் அரசியல் ரீதியான பல்வேறு பிரச்சினைகள் குறித்து போதுமான தெளிவு இல்லாவிட்டாலும் அது ஒரு போராட்ட இயக்கமாக விளங்கியது. தொழிலாளர் வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகளை விருத்தி செய்யும் பொருட்டு எந்த நேரத்திலும் தொழிலாளர்களை போராட்டத்தில் இறங்க வைப்பதாயும், அவர்கள் போராட்ட உணர்வைக் கூர்மைப்படுத்துவதாகவும் அவ்வியக்கம் விளங்கியது.

போர்குணமுள்ள தொழிலாளர் குழுக்களால் சிக்காகோவின் வேலை நிறுத்தம் பெருமளவுக்கு பிரகாசித்தது. வேலை நிறுத்ததிற்கு வெகுமுன்பே அதற்கான தயாரிப்புகளைச் செய்ய 8 மணி நேர சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த 8 மணி நேர சங்கம் என்பது கூட்டமைப்பு, ‘நைட்ஸ் ஆப் லேபர்’ சோஷலிஸ்ட் தொழிலாளர் கட்சி (அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்தின் முதல் அரசியல் சோஷலிஸ்ட் கட்சி) போன்ற ஸ்தாபனங்களில் இணைந்துள்ள தொழிற்சங்கங்களைக் கொண்ட ஒரு ஐக்கிய முன்னணி ஸ்தாபனமாக விளங்கியது. இந்த 8 மணி நேர சங்கத்துக்கு இடதுசாரி தொழிற்சங்கங்களைக் கொண்ட மத்திய தொழிற்சங்கமும் முழு ஆதரவு அளித்தது. மே முதல் தினத்துக்கு முந்திய நாளான ஞாயிற்றுக் கிழமையன்று மத்திய தொழிற் சங்கம் ஏற்பாடு செய்த தொழிலாளர்களைத் திரட்டும் ஆர்ப்பாட்டத்தில் கிட்டத்தட்ட 25,000 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

மே முதல் நாள் சிக்காகோ, நகரத் தொழிலாளர் இயக்க ஸ்தாபனம் அழைப்பு கொடுத்ததின் பேரில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் கருவிகளை கீழே வைத்துவிட்டு தெருவுக்கு இறங்கிய மாபெரும் காட்சியைக் கண்டது. இந்த ஆர்ப்பாட்டம் முன் எப்போதுமில்லாத வகையில் மாபெரும் வர்க்க ஒற்றுமையாக விளங்கியது. எட்டு மணி நேர வேலை நாள் கோரிக்கையின் முக்கியத்துவமும், வேலை நிறுத்தத்தின் பரந்த மற்றும் தீவிரத்தன்மையும் இந்த இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க அரசியல் முக்கியத்துவத்தைத் தந்தது. அடுத்த சில நாட்களில் ஏற்பட்ட சில மாற்றங்களால் இந்த முக்கியத்துவம் மேலும் தீவிரமானது. 1886 மே முதல் தினம் உச்சக் கட்டத்தையடைந்த 8 மணி நேர இயக்கமானது, அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வரலாற்றில் ஒரு மகோன்னத அத்தியாயத்தை உருவாக்கியது.

அதே நேரத்தில் தொழிலாளர்களின் விரோதிகள் வெறுமனே இருக்கவில்லை. முதலாளிகள் மற்றும் அரசின் இணைந்த சக்தி, ஊர்வலம் சென்ற சிக்காகோ தொழிலாளர்களைக் கைது செய்தது. போர்குணமிக்க தலைவர்களை அழித்தொழிப்பதன் மூலம் சிக்காகோ நகரின் தொழிலாளர் இயக்கத்தையே நசுக்கி விடலாம் என கண்டார்கள். மே 3, 4 தேதிகளில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் ‘வைக்கோல் சந்தை (ஹே சந்தை) விவகாரம்’ என்றழைக்கப்படும் நிகழ்ச்சிக்கு வழி வகுத்தன. மே 3-ம் நாள் வேலை நிறுத்தம் செய்த மெக்கார்மிக் ரீப்பர் வொர்க்ஸ் தொழிலாளர்களின் கூட்டத்தில் நிகழ்ந்த போலிஸின் காட்டு மிராண்டித்தனமான அடக்கு முறையை எதிர்த்து மே 4-ஆம் நாள் வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த கூட்டம் அமைதியாக நடந்தது. போலீசு மீண்டும் கூடியிருந்த தொழிலாளர் மீது தாக்குதலைத் தொடுக்க ஆரம்பிக்கும் போது கூட்டம் தள்ளிவைக்கப்பட இருந்தது. கூட்டத்தில் எறியப்பட்ட ஒரு குண்டு ராணுவ அதிகாரி ஒருவனைக் கொன்றது. இதன் விளைவாக எழுந்த ஒரு மோதலில் ஏழு போலீஸ்காரர்களும் நான்கு தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர். வைக்கோல் சந்தை சதுக்கத்தில் ஏற்பட்ட ரத்த ஆறும், போர்க்குணமிக்க சிக்காகோ தொழிலாளர் தலைவர்களை சிறைக்கும், தூக்கு மேடைக்கும் அனுப்பியதும்தான் சிக்காகோ நகர முதலாளிகளின் பதிலாயிருந்தன. நாடெங்கிலுமுள்ள முதலாளிகளுக்கு ஆதரவு தந்தனர்.

1886 ஆண்டின் பிற்பாதி முழுவதும் முதலாளிகளின் திட்டமிட்ட கொடூரத் தாக்குதல் தொடர்ந்தது. இதன் மூலம் வேலை நிறுத்த இயக்கத்தின் போது இழந்த தங்கள் பழைய நிலையை மீண்டும் அடைய அந்த முதலாளிகள் தீர்மானித்தனர்.

சிக்காகோ தொழிலாளர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்ட ஒரு ஆண்டுக்கு பிறகு 1888-ல் செயின்டி லூயிஸில் கூட்டமைப்பு கூடியது. (தற்போது அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது). அப்போது 8 மணி நேர இயக்கத்திற்கு மீண்டும் புத்துயிர் அளிக்க தீர்மானித்தது. இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு வர்க்க அரசியல் பிரச்சினையை அடிப்படையாக வைத்து, ஒரு மாபெரும் இயக்கத்தை நடத்திய மே முதல் நாளையே மீண்டும் 8 மணி நேர இயக்கத்தை துவக்குவதற்கான நாளாக அறிவித்தார்கள். 1889-ம் ஆண்டு சாமுவேல் கோம்பர்ஸ் தலைமையில் நடந்த அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் மாநாடு வேலை நிறுத்த இயக்கத்தை முறைப்படுத்துவதில் வெற்றிகண்டது. வலுவான முறையில் தயாரிப்புகளோடு விளங்கிய மரவேலைத் தொழிலாளர் சங்கம் முதலில் வேலை நிறுத்தத்தில் இறங்குவது என்றும் அது வெற்றி பெற்ற பின் மற்ற சங்கங்கள் இறங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மே தினம் உலக தினமாக மாறியது

சாமுவேல் கோம்பர்ஸ் அவர்கள் தனது சுயசரிதையில் அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு எங்ஙனம் மே தினம் ஒரு உலகத் தொழிலாளர் விடுமுறை தினமாக மாறுவதற்கு வழி செய்தது என்பது குறித்து கூறுகிறார். எட்டு மணி நேர இயக்கத்துக்கான தயாரிப்புகள் தீவிரமாகிக் கொண்டிருந்தன. நாங்கள் தொடர்ந்து எங்கள் நோக்கத்தை பரவலாக்குவது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தோம். பாரிஸில் சர்வதேச தொழிலாளர் காங்கிரசுக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்து. இந்த காங்கிரசின் மூலம் உலகளாவிய ஆதரவைப் பெறுவதின் மூலம் எங்கள் இயக்கம் பயனடைய முடியும் என்று நான் நினைத்தேன்.”கோம்பர்ஸ் தனது சந்தர்ப்பவாதத்தையும், சீர்திருத்த வாதத்தையும் ஏற்கனவே வெளிக்காட்டியுள்ளார். பின்னர் அது அவரின் வர்க்க சமரசக் கொள்கையில் முழுமையாக வெளிப்பட்டது. முன்பு தீவிரமாக எதிர்த்து போராடிய சோஷலிஸ்டு தொழிலாளர்களின் ஆதரவை பெறுவதற்கும் அவர் தயாராய் இருந்தார்.

1889-ம் ஆண்டு 14-ம் நாள் பாஸ்டில் வீழ்ச்சியின் நூற்றாண்டு விழா பாரிஸில் நடந்தது. இதற்கான உலகெங்கிலுமிருந்து சோஷலிச இயக்க தலைவர்கள் ஒன்று கூடியிருந்தனர். 25 ஆண்டுகளுக்கு முன் அவர்களின் மாபெரும் ஆசான்களான மார்க்ஸும், எங்கெல்சும் உருவாக்கிய அகிலத்தை போன்ற ஒன்றை உருவாக்கவே அவர்கள் அங்கு கூடினர். பின்னர் அதுவே இரண்டாவது அகிலம் என்று அழைக்கப்பட்டது. அங்கு கூடியிருந்தவர்கள் அமெரிக்க பிரதிநிதிகளிடமிருந்து 8 மணி நேர இயக்கப் போராட்டத்தைப் பற்றியும், சமீபத்தில் அதற்கு புத்துயிர்ப்பு அளிக்கப்பட்டது பற்றியும் தெரிந்து கொண்டார்கள். அதன் விளைவாக பாரிஸ் மாநாடு கீழ்க் கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது.

‘’எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலுமுள்ள உழைக்கும் மக்கள் 8 மணி நேரத்தை சட்டபூர்வமாக்கக் கோரி அரசாங்கத்திடமும், நிர்வாகத்திடமும் போராட வேண்டும். இதை உலகம் தழுவிய ஆர்ப்பாட்டமாக நடத்தவும், பாரிஸ் மாநாட்டு முடிவுகளை நிறைவேற்றக் கோரியும் இம்மாநாடு தீர்மானிக்கிறது. 1888 டிசம்பரில் செயிண்ட் லூயிஸில் கூடிய அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு இத்தகைய ஆர்ப்பாட்டத்திற்கு 1890 மே முதல் நாளை ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டதால் அதே நாள் சர்வதேச அளவிலான ஆர்ப்பாட்டம் செய்யவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே அந்த குறிப்பிட நாளில் எல்லா நாட்டு தொழிலாளர்களும் அவர்களின் நாட்டு சூழ்நிலைக்கேற்ப இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று மாநாடு அறிவிக்கிறது.’’

1890-ம் ஆண்டு பல ஐரோப்பிய நாடுகளில் மே தினம் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் மரவேலைத் தொழிலாளர்களும் கட்டிட வேலை தொழிலாளர்களும் சோஷலிஸ்ட்டான பீட்டர் மெக்கியூரி தலைமையில் 8 மணி நேர வேலை நாளுக்காக பொது வேலை நிறுத்தத்தில் இறங்கினர். ஜெர்மனியில் சோஷலிஸ்டுகளுக்கு எதிராக பல விசேஷ சட்டங்கள் இருந்த போதிலும் பல தொழில் நகரங்களில் தொழிலாளர்கள் மே தினத்தை கொண்டாடினார்கள். அதேபோல் மற்ற ஐரோப்பிய தலைநகரங்களிலும் அதிகாரவர்க்கத்தின் எச்சரிக்கையையும் ஒழுங்கு முறையையும் மீறி தொழிலாளர்கள் மே தினத்தை கொண்டாடினர். அமெரிக்காவில் சிக்காகோவிலும், நியூயாக்கிலும் நடந்த ஆர்ப்பாட்டங்கள் குறிப்பிடத்தக்கவையாய் இருந்தது. ஆயிரக்கணக்கானவர் தெருக்களில் 8 மணி நேர கோரிக்கையை வலியுறுத்தி அணிவகுத்தனர். முடிவில் முக்கிய மையங்களில் திறந்த வெளிக் கூட்டங்கள் நடைபெற்றன.

1891-ல் அகிலத்தின் அடுத்த மாநாடு பிரான்ஸில் நடந்தது. மே முதல் நாளின் உண்மையான நோக்கம் 8 மணி நேர வேலை நாள் என்பதை மீண்டும் எடுத்துரைத்தது. பொதுவான வேலை நிலைமைகளை சீர் செய்ய வேண்டும் நாடுகளிடையே அமைதி நிலவ வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்காகவும் அத்தோடு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றது. மாற்றியமைக்கப்பட்ட தீர்மானம் குறிப்பாக 8 மணி நேர வேலை நாள் மே தின ஆர்ப்பாட்டத்தின் வர்க்கத் தன்மையை வலியுறுத்துவதாக இருந்தது. எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் வேலை நிறுத்தம் நடைபெற வேண்டும் என்று தீர்மானம் சொன்னது. அதே நேரத்தில் மே தின ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தவும் ஸ்தூலப்படுத்தவும் அகிலம் முயற்சி எடுத்தது. பிரிட்டிஷ் தொழிலாளர் தலைமையொ ஜெர்மன் சமூக ஜனநாயகவாதிகளோடு சேர்ந்து கொண்டு, மே முதல் நாள் வேலை நிறுத்தத்தை ஏற்க மறுத்து அதை அடுத்து வரும் ஞாயிற்றுக் கிழமைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று வாக்களித்தது. இதன் மூலம் அது தன் சந்தர்ப்பவாதத்தை வெளிக்காட்டியது.

உலக மே தினம் குறித்து எங்கெல்ஸ்

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஜெர்மன் நான்காவது பதிப்புக்கு 1890, மே 1 -ம் தேதி எங்கெல்ஸ் முகவுரை எழுதுகிறார். அதில் உலக பாட்டாளி வர்க்க ஸ்தலங்களை விமர்சிக்கும் போது முதலாவது உலக மே தினம் குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். ‘’நான் இந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கும் இதே நேரத்தில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பாட்டாளி வர்க்கம் தனது பலத்தை ஆய்வு செய்து கொண்டிருக்கிறது. அது முதன் முறையாக ஒரே கொடியின் கீழ் ஒரு படையாக 8 மணி நேர வேலை நாள் சட்டமாக வேண்டும் என்ற ஒரே உடனடியான நோக்கத்திற்காகத் திரண்டிருக்கிறது. நாம் பார்க்கக் கூடிய இந்த அற்புதமான காட்சி உலகெங்கிலுமுள்ள முதலாளிகளையும் நிலப்பிரபுக்களையும் எல்லா நாடுகளிலுமுள்ள பாட்டாளிகளும் இணைந்து விட்டனர் என்ற உண்மையை உணரச் செய்யும். மார்க்ஸ் மட்டும் இந்த காட்சியைப் பார்ப்பதற்கு என்னுடன் இன்று உயிரோடிருந்தால்…’’

உலகம் முழுவதும் இப்போராட்டம் ஒரே சமயத்தில் நிகழ்ந்தது. இது உலகத் தொழிலாளர்களின் புரட்சிகர உணர்வையும் சிந்தனையையும் ஆழமாகத் தொட்டது. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மேலும் மேலும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

1893 அகிலத்தின் மாநாடு ஜுரிச்சில் நடைபெற்றது. அதில் எங்கெல்ஸ் கலந்துக் கொண்டார். அப்போது நிறைவேற்றப்பட்ட மே முதல் நாள் தீர்மானத்தில் சேர்க்கப்பட்ட சேர்க்கை தொழிலாளர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

‘’உழைக்கும் வர்க்கத்தின் பிரதான விருப்பம் சமூக மாற்றத்தின் மூலம் வர்க்கப் பாகுபாடுகளை அழித்தொழிப்பது, மற்றும் உலகம் முழுவதும் எல்லா மக்களுக்கும் அமைதியை ஏற்படுத்துவது ஆகும். மே தின ஆர்ப்பாட்டங்கள் எட்டு மணி நேர வேலைநாளுக்காக மட்டுமல்லாமல் மேற்கூறிய விஷயங்களுக்கும் பயன்பட வேண்டும்’’.

மே தினத்தை போராட்ட தினமாக அனுஷ்டிப்பதற்கு பதிலாக கேளிக்கை மற்றும் ஓய்வு தினமாக மாற்றுவதன் மூலம் பல கட்சிகளின் சீர்திருத்த தலைவர்கள் மே தினத்தின் முக்கியத்துவத்தை சீர்குலைக்க முயற்சித்தார்கள். இதற்காக மே தினத்தை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை தள்ளி வைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஞாயிற்றுக் கிழமை ஏற்கனவே விடுமுறை நாள். எனவே அவர்கள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டாம். சீர்திருத்த தலைவர்களுக்கு மே தினம் பார்க்கில் விளையாடுவதற்கும், கலை நிகழ்ச்சிக்குமான உலக விடுமுறை நாளாகும். ஜூரிச் மாநாடு மே தினம் முதலாளித்துவச் சுரண்டல், அடிமைத்தனம் வர்க்க வேறுபாடுகள் ஆகியவற்றை அழித்தொழிப்பதற்காக போராடும் நாள் என்று தீர்மானித்தது. இந்த தீர்மானம் இந்த தலைவர்களை ஒரு சிறிதும் பாதிக்கவில்லை. ஏனெனில் அகிலத்தின் முடிவுகள் தாங்களை கட்டுப்படுத்தும் என்பதையே அவர்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. சர்வதேச சோஷலிச மாநாடு என்பது அவர்களை பொறுத்தவரை போருக்கு முன்பு ஐரோப்பிய தலைநகரங்களில் நடந்த பல்வேறு மாநாடுகளைப் போல சர்வதேச நட்பு மற்றும் நல்லெண்ணத்திற்கான ஒரு கூட்டமாகவே இருந்தது. பாட்டாளி வர்க்க நடவடிக்கைகளை அவர்கள் முறியடிக்கவும் அலட்சியப்படுத்தவும் எல்லா வேலைகளையும் செய்தார்கள். தங்களுக்கு ஒத்துவராத மாநாட்டுத் தீர்மானங்களைக் கிடப்பிலே போட்டார்கள். இருபதாண்டுகளுக்குப் பின் இந்த சீர்திருத்தவாத தலைவர்களின் சோஷலிஸமும் சர்வதேசியமும் நிர்வாணமாக்கப்பட்டு அம்பலப்படுத்தப் பட்டது. 1914-ல் இந்த சர்வதேச மேடை சீர்குலைந்தது. காரணம் இது தோன்றிய நாளிலிருந்தே இதன் அழிவு சக்தியாக தவறான பாதையில் அழைத்துச் செல்லக்கூடிய சீர்திருத்தவாத தலைவர்கள் இதனுள்ளே இருந்து வந்தார்கள்.

1900-ம் ஆண்டு நடைபெற்ற அகிலத்தின் பாரிஸ் மாநாட்டில், முந்திய மாநாட்டில் நிறைவேறிய தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. மேலும் தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையில், மே முதல் நாள் வேலை நிறுத்தம் மே தின ஆர்ப்பாட்டத்தை மேலும் பயனுள்ளதாக்கும் என்ற வாக்கியமும் சேர்க்கப்பட்டது. அடுத்து வந்த மே தின ஆர்ப்பாட்டங்கள் மேலும் பலத்தோடு திகழ்ந்தன. ஆர்ப்பாட்டத்திலும் வேலை நிறுத்தத்திலும் கலந்து கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வந்தது. உலகெங்கிலுமுள்ள ஆளும் பிற்போக்கு சக்திகளுக்கு ஒரு எச்சரிக்கையாக வரக்கூடிய மே தினங்கள் ஒரு சிவப்பு தினமாக மாறியது.

மே தினம் குறித்து லெனின்

மே தினத்தை ஒரு ஆர்ப்பாட்ட, போராட்ட தினமாக ரஷ்ய தொழிலாளர்களுக்கு லெனின் தன்னுடைய ஆரம்பகால ரஷ்ய புரட்சி இயக்க நடவடிக்கையின் போதே அறியச் செய்தார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழிலாளர் விடுதலைப் போராட்ட சங்கம் ரஷ்யாவில் இருந்த ஒரு மார்க்சிய அரசியல் குழு. இந்த சங்கத்துக்காக 1896-ம் ஆண்டு லெனின் சிறையில் இருந்த போது மே தின துண்டு பிரசுரம் ஒன்றை எழுதினார். அந்த பிரசுரம் சிறையிலிருந்து கடத்தப்பட்டு 200 பிரதிகள் எடுக்கப்பட்டு 40 தொழிற்சாலைகளில் தொழிலாளர்களிடையே விநியோகிக்கப்பட்டது. அந்தப் பிரசுரம் மிகவும் சுருக்கமாக, லெனினுக்கே உரிய நேரிடையான மற்றும் எளிமையான முறையில் சாதாரண தொழிலாளியும் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதப்பட்டது. “பிரசுரம் வெளிவந்த ஒரு மாதத்திற்குப்பின் வெடித்தெழுந்த பஞ்சாலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் போது, எங்களுக்கு இந்த வேலை நிறுத்தத்துக்கான ஆரம்ப உத்வேகத்தை தந்ததே அந்த சிறிய மே தின பிரசுரம் தான்’’ என்று தொழிலாளர்கள் சொன்னதாக அந்த பிரசுரத்தை விநியோகித்த லெனினின் சமகாலத்தவர் ஒருவர் கூறியுள்ளார். தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் முதலாளிகளின் நலனுக்காக எங்ஙனம் சுரண்டப்படுகிறார்கள் என்பதையும், தங்களின் நிலையில் முன்னேற்றத்தை கோருபவர்கள் எவ்வாறு அரசாங்கத்தால் தண்டிக்கப் படுகிறார்கள் என்பதையும் சொல்லிய பிறகு மே தினத்தின் முக்கியத்துவம் குறித்து லெனின் எழுதுகிறார்.

‘’பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மன் நாட்டுத் தொழிலாளர்கள் ஏற்கனவே வலுவான சங்கங்களின் கீழ் அணிதிரண்டு தங்களின் பல உரிமைகளை அடைந்திருக்கிறார்கள். அவர்கள் ஏப்ரல் 19 (மே 1 ரஷ்ய நாட்காட்டி மேற்கு ஐரோப்பிய நாட்காட்டியை விட 13 நாட்கள் பிந்தியது) அன்று பொது வேலை நிறுத்த நாளாக அனுஷ்டித்தார்கள். காற்று வசதியற்ற தங்கள் தொழிற்சாலைகளை விட்டு, விரிந்த பதாகைகளுடன் தொழிலாளர்கள் தெருவிலே இறங்கினர். முதலாளிகளுக்கும் அவர்களின் வளர்ந்து வரும் சக்திக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இசைக்கு ஏற்ப நகரங்களின் முக்கிய வீதிகள் வழியே அணிவகுத்து சென்றனர். மாபெரும் வெகுஜன ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஒன்று கூடினார்கள். அங்கே அவர்கள் முதலாளிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு தாங்கள் பெற்ற வெற்றிகளையும், வருங்கால போராட்டத்திற்கான திட்டங்களை குறித்தும் பேசினார்கள். இந்த வேலை நிறுத்தத்தின் அச்சுறுத்தல் காரணமாக, தொழிலாளர்களுக்கு அவர்கள் தொழிற்சாலைகளுக்கு அன்று வராததற்காக அபராதம் விதிக்கக்கூடிய துணிவு அவர்களின் முதலாளிகளுக்கு இல்லை. அந்த நாளில் தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளிடம் தங்களின் முக்கிய கோரிக்கையான 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர பொழுது போக்கு என்பதை நினைவுப்படுத்தவும் தவறவில்லை. இதைத்தான் மற்ற நாட்டு தொழிலாளர்களும் தற்போது கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்’’

ரஷ்ய புரட்சி இயக்கம் மே தினத்தை பெருமளவில் பயன்படுத்திக் கொண்டது. 1900-ம் ஆண்டு நவம்பரில் புதிப்பிக்கப்பட்ட ‘கார்கோவில் மே தினம்’ என்ற பிரசுரத்தில் முன்னுரையில் லெனின் பின்வருமாறு எழுதுகிறார். ‘’இன்னும் ஆறு மாதத்தில் ரஷ்ய தொழிலாளர்கள் தங்களின் புதிய நூற்றாண்டின் முதலாண்டு மே நாளை கொண்டாடுவார்கள். எத்தனை இடங்களில் முடியுமோ அத்தனை இடங்களில் மே தினத்தை சிறப்பாக, விரிவாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய இதுதான் நேரம். மே தின நிகழ்ச்சியில் பங்கு கொள்வது எத்தனை பேர் என்பது முக்கியமல்ல. பங்கு கொள்பவர்கள் வெளிக்காட்டும் ஸ்தாபன கட்டுப்பாட்டு உணர்வும், வர்க்க உணர்வும், ரஷ்ய மக்களின் அரசியல் விடுதலைக்கான ஒடுக்க முடியாத போராட்டத்திற்கு அவர்கள் காட்டும் உறுதியும்தான் முக்கியமானது. இதன் விளைவாக பாட்டாளி வர்க்க வளர்ச்சிக்கான வசதியாக சந்தர்ப்பமும், சோஷலிஸத்திற்கான வெளிப்படையான போராட்டமும் வளரும்.”

மே தின ஆர்ப்பாட்டங்கள் குறித்து ஆறுமாதங்கள் முன்னமேயே கவனத்தை இழுத்திருக்கிறாரென்றால், அதை லெனின் எவ்வளவு முக்கியமாய் கருதியிருக்கிறார் என்பது தெளிவாய் தெரிகிறது. லெனினுக்கு மே தினம் என்பது “ரஷ்ய மக்களின் அரசியல் விடுதலைக்கான அடக்கமுடியாத போராட்டத்திற்கும், பாட்டாளி வர்க்க மேம்பாட்டிற்கும், சோஷலிஸத்திற்கான வெளிப்படையான போராட்டத்திற்கும் மக்களை அணி திரளச் செய்வதற்கான ஒரு சந்தர்ப்பம் ஆகும்”.

மே தின விழாக்கள் எங்ஙனம் ஒரு மாபெரும் அரசியல் ஆர்ப்பாட்டமாக மாறும் என்று பேசுகையில், 1900-ம் ஆண்டு கார்கோவ் மே தின விழா எப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக மாறியது என்ற கேள்விக்கு லெனின் பின்வருமாறு பதிலளிக்கிறார். “வேலை நிறுத்தத்தில் பங்கு கொண்ட பெருந்திரளான தொழிலாளர்கள், தெருக்களிலே நடந்த மாபெரும் வெகு ஜனக்கூட்டங்கள், செங்கொடிகளின் பதாகை, கோரிக்கைகள் அடங்கிய பிரசுரங்கள், அவற்றின் புரட்சித்தன்மை, எட்டு மணி நேர வேலைநாள், அரசியல் விடுதலை இவைகள்தான்”.

கார்கோவ் கட்சித் தலைவர்கள் 8 மணி நேர வேலை நாள் கோரிக்கையோடு சாதாரண, வெறும் பொருளாதார கோரிக்கைகளையும் சேர்த்துக் கொண்டதை லெனின் சினந்து கொண்டார். காரணம் மே தினத்தின் அரசியல் தன்மை எந்த விதத்திலும் மங்கக் கூடாது என்று விரும்பினார். அவர் இந்த முன்னுரையில் பின்வருமாறு எழுதுகிறார்.

“8 மணி நேர வேலைதான் இந்த முதல் கோரிக்கையானது உலகெங்கிலுமுள்ள பாட்டாளி மக்கள் வைத்துள்ள பொதுவான கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை முன் வைத்ததிலுருந்து கார்கோவின் வளர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் சர்வதேச சோசலிஸ தொழிலாளர் இயக்கத்தோடு தங்கள் ஐக்கியத்தை உணருகிறார்கள் என்பது தெரிகிறது.

குறிப்பாக இந்த ஒரு காரணத்திற்காகவே, இது போன்ற ஒரு கோரிக்கையை, மேஸ்திரி ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும், பத்து ஸென்ட் ஊதிய உயர்வு வேண்டும் போன்ற சாதாரண கோரிக்கைகளுடன் சேர்த்துது வைக்கக் கூடாது. எட்டு மணி நேர வேலை நாள், பாட்டாளி வர்க்க முழுமைக்குமான ஒரு கோரிக்கையாகும். அது சமர்ப்பிக்கப்படுவது தனிப்பட்ட முதலாளிகளிடத்தில் அல்ல. உற்பத்திக் கருவிகளின் சொந்தக்காரர்களான முதலாளித்துவ வர்க்கத்திடம் தற்போதைய அரசியல், பொருளாதார அமைப்பின் பிரதிநிதியாக இருந்து சமர்ப்பிக்கப்படுவதாகும்.

மே தின அரசியல் முழக்கங்கள்

உலகெங்கிலுமுள்ள பாட்டாளி மக்களுக்கு மே தினம் ஒரு ஈர்க்கும் முனையாக மாறியது. மே தின ஆர்ப்பாட்டங்களின் போது 8 மணி நேர வேலை நாள் என்ற பிரதான கோரிக்கையோடு மற்ற முக்கியமான கோரிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்துமாறும் தொழிலாளர்கள் அழைக்கப்பட்டார்கள். உலகத்தொழிலாளர் ஒற்றுமை; எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஓட்டுரிமை; ஏகாதிபத்திய போர் மற்றும் காலனி ஆதிக்க எதிர்ப்பு; தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை; அரசியல் மற்றும் பொருளாதார ஸ்தாபனம் கட்டும் உரிமை; போன்றவை அந்தக் கோரிக்கைகளில் சிலவாகும்.

1904-ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் மாநாட்டில்தான் பழைய அகிலம் மே தினத்தைப் பற்றி கடைசியாக பேசியது. ஆர்ப்பாட்டத்தின் போது முழங்கப்படும் பல்வேறு கோரிக்கைகளை விமர்சனம் செய்த பின்பு ஒரு முக்கியமான உண்மை கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இன்னும் சில நாடுகளில் மே தினம் மே முதல் நாளுக்கு பதிலாக ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படுகிறது என்பதுதான் அந்த உண்மை. அந்த தீர்மானம் பின்வருமாறு முடிகிறது.

“ஆம்ஸ்டர்டாமில் நடைபெறும் இந்த சர்வதேச சோசலிஸ்டு மாநாடு அமைத்து சமூக ஜனநாயக ஸ்தாபனங்களையும், எல்லா நாடுகளிலுமுள்ள தொழிற்சங்கங்களையும் மே முதல் நாள் அன்று எட்டு மணி நேர வேலைநாளை சட்டமாக்கவும், பாட்டாளி வர்க்க கோரிக்கைகளுக்காகவும், உலக அமைதிக்காகவும் முழுமையான சக்தியோடு போராடுமாறு கேட்டுக் கொள்கிறது.

மே முதல் நாள் ஆர்ப்பாட்டத்திற்கு வேலை நிறுத்தமே சிறந்த வழியாகும். எனவே மாநாடு எல்லா பாட்டாளிவர்க்க ஸ்தாபனங்களுக்கும், எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தொழிலாளர்களை பாதிக்காத வண்ணம் மே முதல் நாள் வேலை நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்பதை கட்டளையாக சொல்கிறது.

1912 ஏப்ரல் சைபீரியாவில் வேலை நிறுத்தம் செய்த தங்க வயல் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்போது பாட்டாளி வர்க்க வெகுஜன புரட்சிகர நடவடிக்கை என்பது மீண்டும் ஒரு பிரச்சினையாக இருந்தது. ஆனால் அந்த ஆண்டு மே தினத்தின் போது ஆயிரக்கணக்கான ரஷ்ய தொழிலாளர்கள் தொழிற்சாலையை விட்டு வீதிக்கு இறங்கி ஜாராட்சிக்கு எதிராக சவால் விட்டனர். 1905 நிகழ்ந்த புரட்சியின் தோல்விக்குப் பின் நடந்த இந்த மே தினம் பற்றி லெனின் பின்வருமாறு எழுதுகிறார்.

“ரஷ்யாவெங்கும் நடந்த மாபெரும் மே தின வேலை நிறுத்தங்களும், அதையொட்டிய பெருந்திரளான தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டமும், புரட்சிகர பிரகடனங்களும், பேச்சுகளும் ரஷ்யா மீண்டும் வளந்து வரும் ஒரு புதிய புரட்சிகர சூழ்நிலைக்கு சென்று விட்டதை தெளிவாக காட்டுகிறது”.

முதல் உலகப்போரின் போது மே தினம்

போரின் போது சமூக ஜனநாயக கட்சித் தலைவர்கள் செய்த துரோகம் 1915-ம் ஆண்டு மே தினத்தின் போது வெளிப்படையாக தெரிந்தது. இது 1914 ஆகஸ்டில் ஏகாதிபத்திய அரசாங்கங்களோடு அவர்கள் செய்து கொண்ட சமரசத்தின் தத்துவார்த்த வளர்ச்சியாகும். ஜெர்மன் ஜனநாகயகவாதிகளோ தொழிலாளிகளை வேலை செய்யுமாறு கூறினார்கள். பிரெஞ்சு சோஷலிஸ்டுகளோ ஒரு பிரத்தியேக அறிக்கையில் அதிகார வர்க்கத்திடம் மே தினம் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்று கூறுகிறார்கள். போர் நிகழ்ந்த மற்ற நாடுகளிலும் பெரும்பாலான சோஷலிஸ்டுகளிடையே இதே நிலைதான் காணப்பட்டது. ரஷ்யாவில் போல்ஷ்விக்குகளும், மற்ற நாடுகளில் சிறுபான்மையாய் இருந்த புரட்சி சக்திகளுமே சோஷலிசத்திற்கும், சர்வதேசியத்திற்கும் உண்மையாக இருந்தனர். லெனின், ல்கஸம்பர்க், லீப்ஹனெட் ஆகியோர் குருட்டுத்தனமான சமூக வெறிக்கு எதிராக குரல் கொடுத்தனர். 1916, மே தினத்தன்று நடந்த சிறு திரளான தொழிலாளர் ஊர்வலமும், தெருவில் நிகழ்ந்த வெளிப்படையான சிறு சண்டைகளும் போர் நிகழும் நாடுகளில் தொழிலாளர்கள் துரோகத் தலைவர்களின் விஷப்பிடியிலிருந்து தானாகவே வெளியேறி வருகின்றனர் என்பதை காட்டுவதாய் இருந்தது. லெனினும் மற்ற எல்லா புரட்சிவாதிகளும் சந்தர்ப்பவாதத்ததின் அழிவு (இரண்டாம் அகிலத்தின் அழிவு: ஆர்) தொழிலாளர் இயக்கத்திற்கு நன்மை பயக்கும் என்று நம்பினர். துரோகிகளிடமிருந்து மீள்வதற்கும் புதிய அகிலத்துக்கான லெனினுடைய அழைப்பிற்கும் ஏற்ற நேரமாக அது இருந்தது.

ஜிம்மர்வால்டு (1915), கிந்தால் (1916) ஆகிய இடங்களில் நடந்த சோஷலிச மாநாடுகள், லெனினுடைய முழக்கமான ஏகாதிபத்திய போரை உள்நாட்டுப் போராக மாற்றுவோம் என்பதற்கு ஆதரவாக சர்வதேச புரட்சிகர கட்சிகள் மற்றும் சிறு சக்திகள் திரளுவதற்கு வழிவகுத்தன. 1916 மே தினத்தன்று கார்ல் லீப் ஹ்னெட்டும் மற்ற அவரது சோஷலிச இயக்க ஆதரவாளர்களும் சேர்ந்து பெர்லினில் போலிஸின் தடையுத்தரவையும் கட்சியின் அதிகாரபூர்வ தலைமையையும் மீறி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி தொழிலாளி வர்க்கம் உயிருள்ள சக்தி என்பதை நிரூபித்தனர்.

1917-ம் ஆண்டு அமெரிக்காவில் போர் பிரகடனப்படுத்தப்பட்ட போது அதனால் மே தினம் நிறுத்தப்படவில்லை. அப்போது ஏப்ரலில் நடந்த செயின்ட் லூயிஸ் அவசர மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட யுத்த எதிர்ப்பு தீர்மானத்தை முழுமூச்சுடன் எடுத்துக் கொண்டு மே தினத்தை அதற்காக பயன்படுத்தினர். பின்னர் 1919 மே முதல் நாள் கிலிவலேண்டில் சார்லஸ் ரத்தன்பர்க் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம் குறிப்பிடும் படியான போர்க்குணத்தோடு இருந்தது. இவர் உள்ளூர் சோஷலிஸ்டு கட்சி ஸ்தாபகர்களில் ஒருவருமாவார்.

அப்போது பொது சதுக்க வீதியிலே 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணிவகுத்து சென்றனர். பின்னர் இன்னும் பல்லாயிரக்கணக்கானவர் அத்தோடு சேர்ந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தை போலிஸ் காட்டுமிராண்டித் தனமாக தாக்கியது. அதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். இன்னொரு தொழிலாளி கடுமையாக காயப்படுத்தப்பட்டார்.

1917-ம் ஆண்டு மே தினமும், ஜுலை மாதத்து நாட்களும் இறுதியாக அக்டோபர் மாதத்து நாட்களும் ரஷ்யப் புரட்சிக்கு படிப்படியாக ஒரு நினைவைக் கொடுத்தது. மனிதகுல வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கிய ரஷ்ய புரட்சியானது, மே தினத்திற்கு புதிய உத்வேகத்தையும் முக்கியத்துவத்தையும் தந்தது. 1890-ம் ஆண்டு மே தினத்தின் போது நியூயார்க் யூனியன் சதுக்கத்தில் அமெரிக்க தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களிடையே பின்வருமாறு முழங்கினர். “8 மணி நேர வேலை நாளுக்காக போராடும் இதே நேரத்தில் தமது இறுதி லட்சியமான இந்த கூலி (முதலாளித்துவ) அமைப்பை தகர்த்தெறிவதிலிருந்து விலக மாட்டோம்”. இந்த முழக்கம் முதன் முறையாக உலகின் ஆறில் ஒரு பகுதியில் பாட்டாளி வர்க்க சக்தியின் வெற்றியாக நினைவாக்கப்பட்டது.

இந்த லட்சியத்தை அடைந்ததிலே முதலானவர்கள் என்பதை ரஷ்ய தொழிலாளர்கள் நிரூபித்துக் காட்டினர். ஆனால் 1917-ம் ஆண்டின் போது, அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர்கள், தாங்கள் 1890-ல் முழங்கிய குறிக்கோளிலிருந்து வெகுதூரத்தில் இருந்தார்கள். அவர்களின் முக்கிய நோக்கம் முதலாளித்துவ அமைப்பை பாதுகாப்பதும், அமெரிக்க ஏகாதிபத்திய வளர்ச்சிக்கு சுலபமான வழிவகுப்பதுமாக இருந்தது. உலகத் தொழிலாளர் ஒற்றுமை, முதலாளித்துவ அமைப்பிலிருந்து விடுதலை போன்ற பிரகடனங்களை முழங்கிய மே தினத்திற்கு புதிய சக்தியை வழங்கிய ரஷ்ய புரட்சியினால் அமெரிக்க தொழிலாளர்கள் உத்வேகம் பெறுவதை அந்த தலைவர்கள் விரும்பவில்லை.

1923ம் ஆண்டு மே தினத்தின் போது ‘தொழிலாளி’ என்ற வார பத்திரிகையின் ஆசிரியர் சார்லஸ் ரத்தன்பர்க் பின் வருமாறு எழுதுகிறார். “மே தினம் உலகெங்கிலுமுள்ள முதலாளிகளின் உள்ளத்திலே அச்சத்தையும், தொழிலாளிகளின் உள்ளத்திலே நம்பிக்கையும் உருவாக்கும் தினம். வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அமெரிக்காவில் கம்யூனிஸ இயக்கம் பலமாக இருக்கும். மாபெரும் சாதனைகளுக்கான பாதை தெரிவாக இருக்கிறது. அமெரிக்காவிலும், உலகின் மற்ற பகுதிகளிலும் எதிர்காலம் என்பது கம்யூனிஸத்திற்கே உரியதாய் இருக்கும்”.

அதே ‘தொழிலாளி’ பத்திரிகையில் ஒரு தலைமுறைக்கு முன் 1907-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் நாள் மே தினம் குறித்து யூகின் டெப்ஸ் என்பவர் பின்வருமாறு எழுதுகிறார். “இந்த தினம்தான் முதலாவதும், ஒன்றேயுமான உலகத் தொழிலாளர் தினம். இந்த நாள் புரட்சிக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட தொழிலாளி வர்க்கத்துக்குரிய நாளாகும்”

மே தினத்தின் வளர்ந்து வரும் போர்க்குண பாரம்பரியத்தை எதிர்க்கும் வகையில், செப்டம்பர் முதல் திங்கட்கிழமையை மே தினத்துக்கு பதிலான தொழிலாளர் தினமாக கொண்டாடுவதாக அமெரிக்க கூட்டமைப்பின் தலைவர்கள் ஊக்குவித்தனர். இந்த தினம் முதன் முதலில் 1885-ல் உள்ளூர் அளவில் கொண்டாட்டங்களை முறியடிக்கும் வகையில் நடத்தப்பட்டது.

இதே போன்று மே தினத்துக்கு எதிராக, ஹூவர் நிர்வாகம் அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்போடு சேர்ந்து மே முதல் நாளை குழந்தைகள் நல தினமாக அறிவித்தது. குழந்தைகள் நாளில் திடீரென்று பிறந்த இந்த அக்கறையின் உண்மையை நாம் 1928-ம் ஆண்டு அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் மாநாட்டில் நிர்வாகக்குழு சமர்ப்பித்த அறிக்கையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அந்த அறிக்கை பின்வருமாறு சொல்கிறது.

“கம்யூனிஸ்டுகள் மே முதல் நாளை தொழிலாளர் தினமாக கொண்டாடுகிறார்கள். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இனிமேல் மே முதல் நாளை, அமெரிக்க மக்கள், குழந்தைகளை தினமாக கொண்டாடும்படி அழைக்க வேண்டும் என்று தலைவரைக் கேட்டுக் கொள்கிறது. ஆண்டு முழுவதும் குழந்தைகள் நலனை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம். இதுதான் மிகுந்த பயனுள்ள நோக்கமாகும். அதே நேரத்தில் இனி மே தினம் கம்யூனிஸ்டு தினமாகவோ அல்லது வேலை நிறுத்த தினமாகவோ அறியப்படமாட்டாது.”

1929-ல் ஏற்பட்ட நெருக்கடி

முதல் உலகப் போருக்குப் பத்தாண்டுக்குப் பின்னும் லட்சோபலட்ச மக்கள் முதலாளித்துவ அழிவுப் பாதையில் சிக்கியிருந்தார்கள். அனுபவங்களிலிருந்து பாடம் பெற மறுத்த பிற்போக்கு தொழிற்சங்கத் தலைவர்களோ இந்த மக்களைத் திரட்டுவதற்கு பதிலாக முதலாளித்துவத்தின் கீழ் நிரந்தர செழுமை என்ற மாயையை பரப்புவதில் தீவிரமாய் இருந்தார்கள். 1929 இறுதியில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டது. அப்போது சொத்துடையவர்களும், ஏகபோகவாதிகளும் எல்லா சுமையையும் தொழிலாளர்கள் தலையின் மீது சுமத்தப் பார்த்தார்கள். அப்போது தொழிலாளர்களுக்கு ஒரே பாதுகாப்பாக இருந்தது வேலை நிறுத்தமும், வேலையில்லாதவர்களின் வெகுஜனப் போராட்டமுமேயாகும். கம்யூனிஸ்டுகள் இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கினர். இதனால் அமெரிக்கத் தொழிலாளர்கள் பெரும் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டனர். அவர்களின் ஜனநாயக உரிமைகள் விரிவுப்படுத்தப்பட்டன. என்றுமில்லாத அளவுக்கு அமெரிக்க தொழிலாளர் வரலாற்றில் 1930-களில் புதிய முன்னேற்றங்களை ஏற்படுத்த முடிந்தது. 1935-ம் ஆண்டு சி.ஐ.ஓ. துவக்கப்பட்டது. பெரும் தொழிற்சாலைகள் வேகமாக ஸ்தாபனப்படுத்தப் பட்டன. இவையெல்லாம் அமெரிக்க முக்கியத்துவத்தை தந்தது. அமெரிக்க தொழிலாளர்களின் இந்த எழுச்சியால் நீக்ரோ மக்களின் சம உரிமைக்கான போராட்டம் நடத்துவதற்கான காலம் ஏதுவானது. அதன் காரணமாக அமெரிக்க ஜனநாயக முன்னணி மேலும் வலுவடைய முடிந்தது.

ஏகாதிபத்திய யுத்தம், புரட்சி முன்னெப்போதும் இருந்திராத பொருளாதார நெருக்கடி இவைகள் பதினைந்து ஆண்டுகளுக்குள் முதலாளித்துவத்தை ஆட்டங்காண வைத்தன. இதனால் அது பெரும் நெருக்கடிக்குள்ளானது. முதல் உலகப் போருக்கு காரணமாய் இருந்த ஏகாதிபத்திய போட்டிகள் இப்போது இன்னும் தீவிரமாயின. மேலும் உலகின் ஆறில் ஒரு பகுதியில் முதலாளித்துவம் துடைத்தெறியப்பட்டதும், காலனி நாடுகளில் நடந்த விடுதலைப் போராட்டங்களின் அதிகரிப்பும், வளர்ந்து விட்ட முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் ஜனநாயக உரிமைக்காகவும் தீவிரமாக போராடியதும் இந்த பொதுவான முதலாளித்துவ நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தியது. இதனால் தங்கள் அரசியல் பொருளாதார வாழ்வை காத்துக் கொள்ளவும் தவிர்க்க முடியாத வரலாற்று வளர்ச்சியினை தடுத்து நிறுத்தவும் வேறு வழியின்றி முதலாளிகளும் ஏகபோக வாதிகளும், பாசிச பயங்கர சர்வாதிகாரம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்தார்கள். தோற்கடிக்கப்பட்ட ஜெர்மனி, மற்ற நாடுகளில் தொழிலாளர் மற்றும் முற்போக்கு சக்திகளிடையே இருந்த பலவீனம் மற்றும் ஒற்றுமையின்மையாலும், ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள், இந்த நாடுகளில் இருந்த பாசிச சக்திகளை ஊக்குவித்தாலும், இந்த நாடுகளில் பாசிசம் வெற்றி பெற ஏதுவாகிறது. நூற்றாண்டு காலமாய் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற ஜனநாயக உரிமையை அழிப்பதற்கு உலகம் முழுவதுமான ஏகபோக மூலதனத்தின் முயற்சியை இது காட்டுவதோடு, இரண்டாவது உலகப் போருக்கான பாதையையும் இது தெளிவாக்குகிறது.

பாசிசத்திற்கு எதிரான யுத்தம்

1933-லிருந்து 1939 வரை ஜெர்மன் பாசிசம் உலகெங்குமுள்ள பிற்போக்குத்தனத்தின் முன்னோடியாய் திகழ்ந்தது. சோஷலிச நாடுகளுக்கு எதிராக ஆங்கில அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் நாஜி ஜெர்மனியை ஆதரித்தன. ஜெர்மனி பாசிசமோ உலகம் முழுவதையும் தன் கீழ் கொண்டு வர எண்ணியது. இதன் காரணமாக இரண்டாம் உலக யுத்தத்துக்கான தயாரிப்புகள் முறைப்படி செய்யப்பட்டன. அதே நேரத்தில் ஜப்பானிய ஏகபோகவாதிகளும் தங்கள் சொந்த நலனுக்காக இந்த சதியில் கை கோர்ந்து நின்றனர். இந்த யுத்தம் அதன் சொந்தத் தன்மை காரணமாக ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் சுதந்திரத்திற்கு எதிராக திருப்பப்பட்டது. இச்சூழ்நிலையில் மனித குல முன்னேற்றத்தின் விதி மற்ற இடங்களில் உள்ள விவசாய மற்றும் ஒடுக்கப்பட்ட காலனி மக்களோடு இணைகின்ற தொழிலாளர்களின் கையிலேதான் உள்ளது என்பது மிகத் தெளிவாக தெரிய ஆரம்பித்தது. ஏகபோக முதலாளிகள் வளர்ந்து வரும் அழிவு சக்தியை தடுக்கும் பொருட்டு ஜனநாயக மற்றும் தேசிய சக்திகளை திரட்டுவது என்பது இவர்களின் முயற்சி, ஒற்றுமை, எதிர்பு ஆகியவற்றின் அடிப்படையில்தான் இருந்தது. எனவே முப்பதுகள் முழுவதும் நடந்த மே தினம், புதிய உலக அழிவை தடுக்கும் பொருட்டு, பாசிச ஆக்ரமிப்புக்கு எதிராக, உலக மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் ஒற்றுமைக்காக குரல் கொடுப்பதாக இருந்தது.

உழைக்கும் வர்க்கம் நாட்டின் முதுகெலும்பு என்பதை சந்தேகத்திற்கிடமின்றி இரண்டாவது உலக யுத்தம் நிரூபித்தது. உழைக்கும் மக்கள் மட்டும் பிளவுபட்டிருந்தால், பாசிசம் தனது அதிகாரத்திற்கு உலகையே நாசகர யுத்தத்தில் மூழ்கடித்திருக்கும். ஆனால் பாசிசத்தால் ஜனநாயகம் மற்றும் முன்னேற்றத்தை பாதுகாக்க உலகம் முழுவதிலுமுள்ள பெரும்பான்மையான ஜனநாயக சக்திகளை திரட்டும், போராடக்கூடிய உழைக்கும் வர்க்கத்தை வெற்றி கொள்ள முடியவில்லை.

சுதந்திரம் ஜனநாயகம், வளர்ச்சி இவற்றிற்காக இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் இருந்தது. இந்தப் போராட்டத்தின் முன்னணியில் சோவியத் யூனியன், மற்ற நாடுகளின் உழைக்கும் மக்கள் இருந்ததை உலகெங்கிலுமுள்ள ஜனநாயக சக்திகள் கண்டனர். யுத்தத்தின் போது வேலை நிறுத்தம் மூலமும், பாசிச படையை அழிப்பதற்கான ஆயுதங்களை தயாரிப்பதன் மூலமும் எல்லா இடங்களிலும் உழைக்கும் வர்க்கம் மே தினத்தை அனுஷ்டித்தது. 1945-ல் யுத்தம் முடிவுற்றபோது பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் விடுதலையும், வெற்றியும் அடைந்த ஐரோப்பிய நாடுகளில் மே தினங்களின் போது திரண்டதை எல்லா நாடுகளும் கண்டன. அந்த ஆர்ப்பாட்டங்களின் போது, பாசிசத்தின் மிச்ச சொச்சங்களை வேரோடு அழிக்க தொடர்ந்து போராடுவது என்றும், பாசிச ஆயுதத்தை மீண்டும் கையிலெடுக்காத வண்ணம் ஏகபோகத்தை அழித்தொழிக்க மற்ற முற்போக்கு சக்திகளோடு தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை பூரணமாக்குவது என்றும், ஜனநாயகத்தை பாதுகாத்து விரிவுபடுத்தவும், மக்கள் சக்தியை ஆட்சியாக்கவும், நிலையான அமைதியை உருவாக்கவும், சுரண்டலும் ஒழுங்கு முறையும் அற்ற சோஷலிச உலகை நிர்மாணிக்க பாதை வகுக்கவும் தொழிலாளி வர்க்கம் உறுதி பூண்டது.

மனித குலத்தின் அமைதி மற்றும் மகிழ்வான எதிர்காலத்திற்காக போராடுவதன் மூலமும் எல்லா நாட்டிலுள்ள தொழிலாளி வர்க்கம், சர்வதேச ஐக்கியம் மற்றும் தோழமையுணர்வு அடிப்படையில் மே தினத்தன்று உலக மக்களை வணக்கம் செய்கிறது.

மூலம்: THE HISTORY OF MAY DAY

தமிழில்: எம். சிவகுமார்

source: chakkram.com 


 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...