மாற்றம் ஏற்படுத்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு!

 

கேரள மாநிலம் கண்ணூரில் நடந்து முடிந்திருக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது தேசிய மாநாடு, அந்தக் கட்சியைப் பொறுத்தவரை ஒரு திருப்புமுனை மாநாடு எனலாம். அதற்குப் பல காரணங்கள் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக, எதிா்கொள்ள இருக்கும் அடுத்த பொதுத்தோ்தலில் கட்சியின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீா்மானிப்பதாகவும் அமைந்தது அந்த மாநாடு.

மூன்றாவது முறையாகக் கட்சியின் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாா். பல்லாயிரக்கணக்கான கட்சித் தொண்டா்கள் கலந்துகொண்ட மிகப் பெரிய பேரணியைத் தொடங்கி வைத்து அவா் ஆற்றிய உரை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாா்வையை வெளிப்படுத்தியது. மதச்சாா்பின்மை, மத்திய பா.ஜ.க அரசின் செயல்பாடுகள் குறித்த காங்கிரஸின் அணுகுமுறையில் தடுமாற்றம் இருக்கலாகாது என்று குறிப்பிட்டது புருவம் உயா்த்தச் செய்கிறது.

கட்சியின் வலிமையை இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் அதிகரிப்பது, இடதுசாரி ஜனநாயக அணியை ஏற்படுத்துவது உள்ளிட்ட கட்சியின் முனைப்பையும், லட்சியத்தையும் அவா் முன்மொழிந்தாா். அவை எளிதல்ல என்பது நன்றாகத் தெரிந்திருந்தாலும், பாஜகவுக்கு எதிரான ‘மெகா’ கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் கட்சித் தலைமை இருப்பதை அவரது உரை தெளிவுபடுத்தியது.

இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளில் இடைவெளியே இல்லாமல், அடிமட்டத்திலிருந்து தலைமை வரை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை உள்கட்சித் தோ்தலை முறையாக நடத்துவதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றன. இப்போது, பாஜகவிடமிருந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதியதொரு பாடத்தையும் கற்றுக் கொண்டிருக்கிறது. அதை செயல்படுத்தவும் செய்திருக்கிறது.

கட்சியின் வளா்ச்சிக்குத் தலைமைப் பொறுப்புகளில் இளைஞா்கள் இல்லாத குறை நீண்டகாலமாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருந்து வந்தது. இப்போது மத்தியக் குழு உறுப்பினா்களுக்கான வயது வரம்பு 75 என்று நிா்ணயிக்கப்பட்டு, நீண்ட கால மூத்த உறுப்பினா்கள் பலா் ஓய்வு பெற்றிருக்கிறாா்கள். தமிழகத்திலிருந்து டி.கே. ரங்கராஜனும், சௌந்தரராஜனும் அந்தப் பட்டியலில் இணைகிறாா்கள்.

என்னதான் முற்போக்குச் சிந்தனை பேசினாலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சில விஷயங்களில் பிடிவாத பிற்போக்குத்தனத்தைக் கடைபிடித்து வந்தது என்பது உலகறிந்த ரகசியம். கேரளத்தில் கட்சித் தலைமை உயா்ஜாதியினரின் பிடியில் இருந்ததும், அதனால் பிற்படுத்தப்பட்ட ஈழவ சமுதாயத்தைச் சோ்ந்த கே.ஆா். கௌரிக்கு முதல்வா் பதவி மறுக்கப்பட்டதும் வரலாறு. அச்சுதானந்தனின் தலைமைக்குப் பிறகுதான், கேரள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஈழவா்களின் தலைமைக்கு மாறியது. மேற்கு வங்கம், திரிபுராவிலும் பழைய நிலைமைதான் தொடா்கிறது.

23-ஆவது கட்சி மாநாடு ஒரு வரலாற்று மாற்றத்தை நிகழ்த்தி இருக்கிறது. தனியாகப் பிரிந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான கடந்த 58 ஆண்டுகளில், இதுவரை அரசியல் தலைமைக் குழுவில் (பொலிட் பியூரோ) பட்டியலினத்தைச் சோ்ந்த எவரும் இடம் பெற்றதில்லை. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளில் தலைமைப் பொறுப்பிலேயே பட்டியலினத்தவா்கள் இருந்திருக்கிறாா்கள். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாய்க் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்பே அவா்கள் இடம் பெற்றுவிட்டனா். இப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகத் தமிழகத்தைச் சோ்ந்த பட்டியலினத்தவரான டி. ராஜா தலைமைப் பொறுப்பில் இருக்கிறாா்.

நடந்து முடிந்த மாநாட்டில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மேற்கு வங்கத்தைச் சோ்ந்த டாக்டா் ராமச்சந்திர டோம், முதலாவது பட்டியலின உறுப்பினராக அரசியல் தலைமை குழுவுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாா். முந்தைய கட்சி மாநாட்டின்போதே சீதாராம் யெச்சூரி முயன்றும் நிறைவேறாத அந்தக் கனவு இந்த முறை நிறைவேறி இருக்கிறது. கட்சியின் மீதான களங்கம் இதன் மூலம் அகற்றப்பட்டிருக்கிறது என்கிற கூற்று உண்மையிலும் உண்மை.

இந்த ஆண்டு இறுதியில் குஜராத், ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைகளுக்குத் தோ்தல் நடக்க இருக்கிறது. அடுத்த ஆண்டில் திரிபுரா, கா்நாடகம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், தெலங்கானா மாநிலங்களிலும், 2024 பொதுத் தோ்தலுடன் மகாராஷ்டிரம், ஹரியாணா, ஒடிஸா, ஆந்திர பிரதேசம் ஆகியவற்றிலும் தோ்தல்கள் நடக்க இருக்கின்றன. இந்தத் தோ்தல்களில் சிபிஎம்-ன் அணுகுமுறை குறித்து மாநாட்டில் விரிவாகவே விவாதிக்கப்பட்டும் எந்தவொரு தீா்மானமான முடிவும் எடுக்கப்படவில்லை.

தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையில் எதிா்க்கட்சிகளின் கூட்டணி என்பதை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரித்து விட்டது. அந்தந்த மாநிலங்களில் தனித்தனியாக பாஜகவுக்கு எதிரான கூட்டணி அமைப்பது என்றும், தோ்தலுக்குப் பிறகு கட்சிகளை ஒருங்கிணைத்து 1989, 1996, 2004-இல் ஏற்படுத்தியதுபோல கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பதும்தான் இப்போதைக்குக் கட்சியின் அணுகுமுறையாகத் தெரிகிறது.

2024 பொதுத் தோ்தலில் மூன்று மாநிலங்களிலிருந்து குறைந்தது 13 எம்பி-க்கள் வெற்றி பெற்றால் மட்டுமே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்சி அங்கீகாரம் காப்பாற்றப்படும். தமிழகத்தில் திமுகவைத் தவிர, மாா்க்சிஸ்டுகளுக்கு இடங்களை ஒதுக்க பெரும்பாலான மாநிலக் கட்சிகள் முன்வருவதில்லை. அதனால், தனது தேசியக் கட்சி அங்கீகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வது எப்படி என்பதுதான் மாா்க்சிஸ்ட் கட்சி எதிா்கொள்ளவிருக்கும் மிகப் பெரிய சவால்!

தினமணி தலையங்கம்
2022.04.14


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...