இலங்கையில் வாழ்கின்ற மக்களில் 90 சத விகிதத்துக்கும் அதிகமானோர் அரிசியையும், அரிசியை அடிப்படையாகக் கொண்ட உணவுப் பொருட்களையுமே தமது நாளாந்த உணவாக உட் கொள்கின்றனர். ஆனால் இப்பொழுது ஏனைய பொருளாதார நெருக்கடிகளுடன் அரிசித் தட்டுப்பாடும் விலையுயர்வும் நாட்டில் ஏற்பட்டுள்ளது.
அரசாங்கம் மக்களுக்கு நியாயமான விலையில் அரிசி கிடைப்பதை உத்தரவாதம் செய்வதற்காக அரிசிக்கு உத்தரவாத விலையை நிர்ணயித்து செப்ரெம்பர் 28 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டது. ஆனால், அரிசி ஆலை முதலாளிகள் அரிசி உற்பத்தியை நிறுத்தியதுடன், அரிசி வர்த்தகர்கள் தமது அரிசிக் கையிருப்புகளைப் பதுக்கிவிட்டு, கள்ள மார்க்கட்டில் அரசாங்கம் நிர்ணயித்த விலையை விட ஒன்றரை மடங்கு அதிக விலைக்கு அரிசியை விற்கத் தொடங்கினர். இதனால் பொதுமக்கள் அரிசியைப் பெற முடியாமல் திண்டாடியதுடன், வாங்க முடிந்தவர்களும் அதிக விலை கொடுக்க வேண்டி ஏற்பட்டது. இதனால் அரசாங்கம் விலை நிர்ணயம் செய்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது ஒரு உண்மையை எடுத்துக் காட்டுகிறது. அதாவது, ஒரு அரசாங்கம் எவ்வளவுதான் மக்கள் ஆதரவைப் பெற்றிருந்தாலும், கொள்ளைக்கார வர்த்தகர்கள் நினைத்தால் மக்களை அரசாங்கத்துக்கு எதிராகத் திருப்பிவிட முடியும் என்பதே அந்த உண்மை. இது ஒரு முதலாளித்துவ சமூக அமைப்பில் உண்மையான அதிகாரம் யார் கைகளில் இருக்கிறது என்ற அடிப்படை உண்மையையும் எடுத்துக் காட்டுகிறது.
இலங்கையின் சனத் தொகையில் சுமார் 65 சத வீதமானோர் விவசாயத்தையே தமது பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். இலங்கை விவசாயிகள் வருடத்தில் கால போகம், சிறுபோகம் என இரண்டு போகங்கள் (மாவலி தண்ணீர் பெறும் சில பகுதிகளில் விவசாயிகள் மூன்று போகங்கள் செய்வதுமுண்டு) நெல் பயிரிடுகின்றனர். காலபோகத்தில் 9 இலட்சம் ஹெக்டயரும், சிறுபோகத்தில் 5 இலட்சம் ஹெக்டயருமாக மொத்தம் 14 இலட்சம் ஹெக்டயரில் நெல் செய்கை பண்ணப்படுகிறது. சராசரியாக ஒரு ஹெக்டயரில் 4,500 கிலோ நெல் விளைவிக்கப்படுகிறது.
முன்பு இலங்கை, சீனா, இந்தியா, பர்மா, தாய்லாந்து வியட்நாம், பாகிஸ்தான், யப்பான், கொரியா போன்ற நாடுகளில் இருந்து பெருமளவு அரிசியை இறக்குமதி செய்து வந்தது. (1952 இல் சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட அசிரி – இறப்பர் ஒப்பந்தம் சுமார் 25 ஆண்டு காலம் நீடித்திருந்தது)) காரணம், அப்பொழுது அதிக விளைச்சலைக் கொடுக்கும் நெல் ரகங்கள் இலங்கையில் இருக்கவில்லை. அத்துடன் உற்பத்தி முறைகளும் முன்னேற்றகரமாக இருக்கவில்லை. அதனால் உற்பத்தி செய்யப்படும் அரிசி நாட்டின் முழுச் சனத்தொகைக்கும் போதாமல் இருந்தது. ஆனால் நெல் ரகங்களிலும், உற்பத்தியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டதால் உற்பத்தி அதிகரித்தது. 2015 இல் இலங்கை அரிசியில் தன்னிறைவு அடைந்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
Source: vaanavil 123 december 2021
No comments:
Post a Comment