“ஒவ்வொரு வீட்டிலும் 2 மரக்கன்றுகள் நட வேண்டும்!” – நடிகர் விவேக்கின் பசுமை பக்கங்கள்-த. ஜெயகுமார்


ஏப்ரல் 17, 2021

த. ஜெயகுமார்

ஒரு நடிகனாகத் திரைத்துறை அவரை நினைவுகூரும். ஒரு பசுமை மனிதனாக அவர் நட்ட மரங்கள் அவரை நினைவுகூரும்.

திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பால் இன்று அவரது உயிர் இயற்கையில் கலந்தது. நடிகர் விவேக்கின் அனைவரும் அறிந்த இன்னொரு பக்கம் மரம் வளர்ப்பு. எண்ணற்ற தனி மனிதர்கள், தன்னார்வ அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகளோடு இணைந்து மரம் நடும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். தமிழ்நாட்டில் இவர் இப்படி வளர்த்த மரங்களின் எண்ணிக்கை 30 லட்சம் இருக்கும். கிரீன் கலாம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தமிழகமெங்கும் மரம் வளர்ப்பை முன்னெடுத்து வந்தார். மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமோடு நல்ல நட்பு பாராட்டியவர். அந்த உறவின் அடையாளமாக கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் தமிழகம் முழுவதும் 1 கோடி மரங்கள் வளர்க்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற தொடர்ந்து இயங்கி வந்தார்.


அதேபோன்று சுற்றுச்சூழல், புவி வெப்பமயமாதல் போன்ற விஷயங்கள் பற்றி அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். பசுமை விகடன் பற்றியும் தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிந்திருந்த அவர், அனைவரும் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் ஒரு முறை பதிவிட்டு இருந்தார்.

அதேபோன்று உலக வன நாள், சுற்றுச்சூழல் தினம் என எந்தத் தினங்கள் வந்தாலும் அன்று மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தும் விதமாக ஏதாவது ஒன்றைச் செய்வார். அதேபோன்று சிறுதானியங்கள் சாப்பிடுவதும் பற்றியும் வலியுறுத்தி வந்தார்.

நடிகர் விவேக் 2011-ல் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதன்முதலில் தொடங்கியபோது அளித்த பேட்டியில், “நாட்டில் தண்ணீர் வேண்டுமென்றால் மழை வேண்டும். மழை வேண்டுமென்றால் மரங்கள் இருக்க வேண்டும். நாட்டில், விவசாயம் செய்வதற்கான மண் வளம், மனிதர்களுக்குத் தேவையன தூய்மையான ஒட்சிசன் ஆகியவை குறைந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் என்னிடம் கூறினார். 10 லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற அவரது கோரிக்கையை ஏற்று, திருச்சியில் பசுமை கலாம் (கிரீன் கலாம்) திட்டம் தொடங்கப்பட்டது.

சென்னையில் 10,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்துள்ளேன். கோவையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, சேலத்தில் 25,000 மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்படும். தொடர்ந்து வேலூர், வேதாரண்யம், தஞ்சாவூர், அடுத்து நான் பிறந்த திருநெல்வேலி என ஒவ்வோர் ஊராக இந்தத் திட்டம் நிறைவேற உள்ளது.

இறுதியாக 10 லட்சம் மரக்கன்றுகளின் இறுதி மரக் கன்றை கடலூரில் உள்ள கிராமம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நட்டு வைப்பார். வீட்டுக்கு இரண்டு மரம்… ஒவ்வொருவரும் வீட்டில் 2 மரக்கன்றுகளை நடவேண்டும். இந்த விஷயம் மக்கள் மனதில் பதிய வேண்டும். இவ்வாறு மரக்கன்றுகள் நட்டால் காற்றில் நச்சுத் தன்மை குறையும். எனவே, தமிழகத்திலிருந்து மரங்களின் பசுமைப் புரட்சி தொடங்க வேண்டும்” என்று பேசினார்.

சுற்றுச்சூழலைக் காப்பதிலும், மரங்களை வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்டவர். ஏராளமான மரங்களை நட்டவர். காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைக் கட்டுப்படுத்த அரசும், சமூகங்களும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கடந்த ஆண்டு காணொளி பதிவு ஒன்றை நான் வெளியிட்ட போது, அதை மனமுவந்து பாராட்டியவர்.

பத்மஶ்ரீ, கலைமாமணி என்று விருதுகள் வாங்கியிருந்தாலும், அவர் அடிக்கடி சொல்வது, “ரசிகர்களின் அன்பே ஒரு விருதுதானே! 35 ஆண்டுகளாக அதை வருடா வருடம் வாங்கிக் கொண்டு இருக்கிறேனே!”

வைரமுத்து விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது போல, “மனிதர்கள் மட்டுமல்ல விவேக்! நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன.”

ஆம்… ஒரு நடிகனாகத் திரைத்துறை அவரை நினைவுகூரும். ஒரு பசுமை மனிதனாக அவர் நட்ட மரங்கள் அவரை நினைவுகூரும்.

நடிகர் விவேக்கின் பசுமை செயல்பாடுகள் குறித்து மண்புழு விஞ்ஞானி சுல்தான் இஸ்மாயிலிடம் பேசியதுபோது, “பசுமையை மீட்டெடுக்கும் அவரது செயல்பாடுகள் நேர்மையானவை. அதில் எந்த போலித்தனமும் இல்லை. முதன்முறையாக தூர்தர்ஷன் தொலைக்காட்டியில் ஒரு நிகழ்ச்சியில்தான் அவரைச் சந்தித்தேன். அதிலிருந்து இருவருக்கும் நட்பு உருவானது.

இயற்கை விவசாயம் சம்பந்தமாகப் பேச அழைக்கும்போதுகூட என்ன பேச வேண்டும் என்று கேட்டுவிட்டுதான் நிகழ்ச்சிக்கு சென்று பேசுவார். `எங்களை அழைப்பதைவிட நம்மாழ்வார், உங்களைப் போன்ற ஆட்களைத்தான் அழைக்கணும்’ என்று சொன்னார். `நடிகர்கள் பேசும்போது அது இன்னும் பலபேருக்கு போய் சேரும். தாராளமாக பேசுங்கள்’ என்று சொல்வேன். அவருக்கு நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்று ஆர்வம் இருந்தது. ஆனால், அதற்கான காலம் கிட்டவில்லை.

சென்னை புதுக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தபோது பயோ சென்னை 2012 என்ற நிகழ்ச்சியை நடத்தினோம். அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர் மரக்கன்றை நட்டுவிட்டு வந்து சிறுதனியங்கள் பற்றிய சிறப்புகளைப் பற்றி பேசினார். இப்படி போகும் இடமெல்லாம் மரக்கன்றுகள் நடுவது, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு ஆலோசனைகளை வழங்குவது என்று செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவரது இழப்பு தமிழ்நாட்டில் பசுமை பணிகள் மேற்கொள்வோர் மத்தியில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

“நீலகிரி மாவட்டத்தில் 4 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய உறுதுணையாக இருந்தவர் நடிகர் விவேக்” என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னோசென்ட் திவ்யாவும் விவேக்கின் பணியை நினைவுகூர்ந்துள்ளார்.

-விகடன்
2021.04.17

Source: Chakkaram.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...