இன்னும் 4 நாட்களில் 2019
ஆம் ஆண்டு எம்மிடம் இருந்து விடைபெற இருக்கிறது.
இந்த 2019
ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியான நொவம்பர் 16 ஆம் திகதி பெரும்பாலான இலங்கை மக்கள் மகத்தான மாறுதல் ஒன்றைச் செய்துள்ளனர். அதாவது,
2015 ஜனவரி 8 ஆம் திகதியிலிருந்து நாட்டைப் பீடித்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை தூக்கி வீசியிருக்கின்றனர்.
எங்கே இந்தியாவில் நடந்தது போல, மாலைதீவில் நடந்தது போல இலங்கையிலும் மீண்டும் ஏகாதிபத்திய சார்பான வலதுசாரி அரசாங்கம் ஒன்றை மக்கள் தெரிவு செய்துவிடுவார்களோ என அஞ்சியிருந்த வேளையில், அதற்கு எதிராக இலங்கை மக்கள் செயற்பட்டு மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.
அந்த வகையில் இலங்கையின் பெரும்பான்மையான மக்களுக்கு 2019
ஆம் ஆண்டு ஒரு பொன்னான ஆண்டு. ஆனால், இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை 2019
ஐ ஒரு மண்ணான ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், நாட்டைப் பீடித்திருந்த பீடையை அகற்றும் பணியில் அவர்கள் பங்கெடுக்கவில்லை. அவர்கள் வழமைபோல தமது பிற்போக்கு தலைமையின் வழிநடத்தலில் ஏகாதிபத்திய சார்பு கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரித்து தமது தலையில் தாமே மண்ணை அள்ளிப் போட்டிருக்கின்றனர்.
அதிலும் எந்த ஐ.தே.க.
1958, 1977, 1981, 1983 ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிராக இன வன்செயல்களை முன்னின்று நடத்தியதோ, எந்த ஐ.தே.க. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக
1957, 1987, 2000 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முயற்சிகளை முறியடித்ததோ, அந்த கட்சியையே தமிழ்த் தலைமைகள் தொடர்ந்து ஆதரித்து வருகின்றன. அந்தத் தலைமைகள் எடுக்கும் தீர்மானத்துக்கு தலையாட்டும் மந்கை; கூட்டமாகவே பெரும்பாலான தமிழர்களும் இருந்து வருகின்றனர்.
அதுமாத்திரமல்ல, நொவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. வேட்பாளரை ஆதரித்து மூக்குடைபட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன், அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் ஆட்சியமைப்பதற்கு ஐ.தே.கவுக்கு ஆதரவு தேவைப்படுமாக இருந்தால் அதை வழங்குவதற்கும் தாம் தயாராக இருப்பதாக அண்மையில் ஊடகப் பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.
பின்னர் அவரது கருத்துக்கு எழுந்த எதிர்ப்பால் அவ்வாறு தான் கூறவில்லை என்றும், யாரை ஆதரிப்பது என்பது தேர்தல் நடைபெறும் நேரத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினாலும், இப்படிக் கூறிவிட்டு இறுதியில் யாரை ஆதரிப்பார்கள் என்பது சிறு பிள்ளைக்கு கூட தெரிந்த விடயம்.
ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை தமது தலைமை சொல்லும் தவறான முடிவுகளுக்கு எல்லாம் தலையாட்டும் மந்கை; கூட்டமாகத் தொடர்ந்தும் இருக்கப் போகிறார்களா என்பதை பிற்கப்போகும் புத்தாண்டிலாவது தீர்மானிக்க வேண்டும்.
ஏனெனில், தமிழர்கள் தாம்தான் உலகிலேயே கடவுளுக்கு நிகரான புனித இனம் என்று சொல்கிறார்கள், தாம்தான் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் தோன்றிய மூத்தகுடி என்றும் சொல்கிறார்கள். இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எல்லாம் தமது முன்னோர் காலத்திலேயே வழக்கத்தில் இருந்தன என்றும் கூறுகிறார்கள். தாம்தான் உலகிலேயே மண், இன, மொழி, மத, கலாச்சார உரிமைகளுக்காக விட்டுக் கொடுக்காமல் போராடும் ஒரேயொரு இனம் என்றும் சொல்கிறார்கள்.
இப்படியெல்லாம் தமது அருமை பெருமைகள் பற்றி உரக்கக்கூவும் தமிழினம், உலகிலேயே அரை நூற்றாண்டுக்கு மேல் தாம் நடந்து வந்த பாதை தவறானது, தமது தலைமை பிழையானது என்பதை மட்டும் ஏன் உணர்கிறார்கள் இல்லை என்பது முரண்நகையாக, விசித்திரமாக இருக்கிறது. அவ்வாறு அவர்கள் அவற்றை உணரவிடாமல் தடுப்பது எது?
அவர்களிடம் குடிகொண்டிருக்கும் பழமைவாதம், சாதிவாதம், இனவாதம், இறுமாப்பு, அகங்காரம், ஜனநாயகமின்மை என்பனவா?
இவைபற்றி எல்லாம் அவர்கள் புத்தாண்டிலாவது பாரதூரமாக (சீரியஸாக) சிந்திக்க வேண்டும். அந்தச் சிந்திப்பு தமது தற்போதைய தலைமையை நிராகரித்து, சரியான தலைமையை உருவாக்கும் ஆரோக்கியமாக மாற வேண்டும். அதை அவர்கள் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்தி, தாமும் மனித குலத்தின் முற்போக்கு அணியுடன் கைகோர்த்து நிற்கிறோம் என்பதை உலகறியப் பறைசாற்ற வேண்டும்.
No comments:
Post a Comment