ஜெயம்பதி விக்கிரமரத்ன இலங்கையின் பிரபல அரசியல் அமைப்பு விவகார
நிபுணர். அவர் லங்கா சமசமாஜக் கட்சியின் நீண்டகால மத்திய குழு
உறுப்பினரும் கூட. 2015 ஜனாதிபதித் தேர்தலின்போது சமசமாஜக் கட்சி அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிப்பது எனத் தீர்மானித்ததைத் தொடர்ந்து (மகிந்த தலைமையிலான அரசாங்கத்தில் சமசமாஜக் கட்சியும் நீண்டகாலமாக அங்கம் வகித்து வந்தது),ஜெயம்பதியும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் கட்சியில் இருந்து வெளியேறி; ‘மாற்று அணி
ஒன்றை’ அமைத்தனர். அந்த அணிக்கு “ஐக்கிய இடது முன்னணி” எனப்
பெயரும் வைத்தனர்.
இந்தக் கட்டம்வரை அவர்களது மாற்று நிலைப்பாடு குறித்து கேள்வி
எழுப்புவதற்கு இடமில்லை. ஏனெனில் எந்தவொரு கட்சியிலும்
மாற்றுக்கருத்துக்கு இடமுண்டு. அதிலும் சமசமாஜக் கட்சி போன்ற ஒரு
இடதுசாரிக் கட்சியில் அதற்கு நிறைய இடமிருக்கும். ஆனால் ‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்பது போல, அதுவரை காலமும் ஏகாதிபத்தியத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் எதிராக மார்க்சிசமும் சோசலிசமும் பேசி வந்த ஜெயம்பதி அணியினர் தமது முன்னணியை இலங்கையில் முதல்தர ஏகாதிபத்திய சார்பு – வலதுசாரிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைத்துக் கொண்டனர்.
2015 ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய தேசிய முன்னணி நிறுத்திய ‘பொது
வேட்பாளர்’ மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்தனர். அதன் மூலம் ஐ.தே.க. கூடாரத்துக்குள் முழுமையாக மூழ்கினர். அதற்குப் பிரதியுபகாரமாக ஜெயம்பதிக்கு ஐ.தே.க. தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்றை வழங்கியது. புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் வேண்டும் என்று கூறி வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து பெருமளவு நிதியை ஐ.தே.க. பெற்றுக் கொள்வதற்கு இவர் உடந்தையாக இருந்துள்ளார்.
ஆனால் எதிர்வரும் நொவம்பர் 16இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. சஜித் பிரேமதாசவை தனது வேட்பாளராக நிறுத்தியதை விரும்பாத ஜெயம்பதி குழுவினர், ஜே.வி.பி. வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவை ஆதரிக்கப்போவதாக அறிவித்தனர். அதற்கு அவரது கட்சிலிருந்த ஐ.தே.க. ஆதரவில் மூழ்கிப்போன உறுப்பினர்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. அதன் காரணமாக இப்பொழுது மீண்டும் ஐ.தே.க. வேட்பாளரை ஆதரிக்கும் நிலைக்கு ஜெயம்பதி விக்கிரமரத்தின
தள்ளப்பட்டிருக்கிறார். கம்யூனிஸ்ட் மு.கார்த்திகேசன் அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை நினைவுக்கு வருகிறது. அவர் சொல்லுவார்: “சறுக்கு கம்பத்திலிருந்து சறுக்கியவன் இடையில் நிற்க முடியாது”
அவரது இந்தக் கூற்று ஜெயம்பதிக்கும் அச்சொட்டாகப் பொருந்தும்.
No comments:
Post a Comment