கம்யூனிஸ்ட் மு.கார்த்திகேசன் படைப்புகள்


லங்கை மக்களைப் பொறுத்தவரையில் தோழர் கம்யூனிஸ்ட் மு.கார்த்திகேசன் அவர்களைத் தெரியாதவர்கள் இல்லை எனச் சொல்லலாம். அவ்வளவுதூரம் அவர் இலங்கை மக்களுடன் பின்னிப் பிணைந்து வாழ்ந்தவர்.

அவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவர். தலைசிறந்த ஆசிரியர். யாழ்.மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர். ஓய்வொழிச்சல் இல்லாத மக்கள் ஊழியர். இப்படிப் பல தகைமைகளின் சொந்தக்காரர்.

அதுமட்டுமின்றி, தனது வாழ்நாள் முழுவதும் எழுதியும் குவித்தவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை அவர் மேற்கொண்ட காலத்தில் அங்கு மாணவர் அமைப்பு வெளியிட்ட ‘Student News’ என்ற ஆங்கில செய்தி ஏட்டின் ஆசிரியராகத் தனது எழுத்துலக வாழ்க்கையை ஆரம்பித்தார்.


பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராகச் செயற்பட ஆரம்பித்ததும், கட்சி வெளியிட்ட ‘Forward’  என்ற ஆங்கிலப் பத்திரிகையிலும், ‘தேசாபிமானி’ என்ற தமிழ் பத்திரிகையிலும் ஏராளமான அரசியல் கட்டுரைகளை எழுதினார்.
1963இல் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி உருவான பின்னர் அக்கட்சி வெளியிட்ட ‘தொழிலாளி’ என்ற தமிழ்ப் பத்திரிகையிலும், ‘Red Flag’  என்ற ஆங்கிலப் பத்திரிகையிலும் நிறையக் கட்டுரைகள் எழுதினார்.


பின்னர் 1972ஆம் ஆண்டு முதல் இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியால் வெளியிடப்பட்டு வந்த ‘போராளி’ என்ற பத்திரிகையிலும் கட்டுரைகள் எழுதினார்.
இவை மாத்திரமின்றி அவர் யாழ்.இந்துக் கல்லூரியில் மிக நீண்ட காலம் ஆசிரியராகவும், இறுதியில் அதிபராகவும் இருந்த போதும், கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி என்பனவற்றில் அதிபராகப் பணிபுரிந்த போதும், கல்லூரிகளின் சஞ்சிகைகளில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அத்துடன் இதர பாடசாலைகளின் வெளியீடுகள், சனசமூக நிலையங்கள் வெளியிட்ட வெளியீடுகள், பலவிதமான வைபவங்களின் போது வெளியிடப்பட்ட மலர்கள் என்பனவற்றிலும் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். இதுதவிர, கொழும்பிலிருந்து வெளிவந்த பல ஆங்கில, தமிழ் பத்திரிகைகளிலும் அவ்வப்போது பல பத்திகள், ஆசிரியருக்கான கடிதங்கள் என்பனவற்றை எழுதியுள்ளார்.

அவரது எழுத்துக்கள் ஆழமும் சுவையும் கொண்டவை. ஆனால் தூரதிஸ்டவசமாக அவரது எழுத்துக்களின் ஒருபகுதி தன்னும் இன்றுவரை தொகுக்கப்படவில்லை. அவரது எழுத்துக்கள் தொகுக்கப்பட்டால், அவை என்றென்றும் சந்ததி சந்ததியாக மக்களுக்குப் பயன்படக்கூடியவை.
எனவே அவருடன் பணிபுரிந்த கட்சித் தோழர்களாகிய நாம் அவரது எழுத்துகளைத் தேடியெடுத்து நூலுருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இந்த நல்ல பணிக்கு தோழர் கார்த்திகேசனுடன் பழகிய பல்துறை சார்ந்தவர்களினதும் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம். கட்சி வேறுபாடுகள், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இந்த நல்ல பணிக்கு உதவுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
எனவே, தயவு செய்து அவருடைய எழுத்துக்களை வைத்திருப்பவர்கள் அவற்றைத் தந்துதவும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். தங்களிடமுள்ள மூலப்பிரதியின் நிழற்பிரதியொன்றை நீங்கள் அனுப்பி வைத்து உதவலாம். இதில் ஆர்வமுள்ளோர் தயவுசெய்து பின்வரும் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும். சகல தொடர்புகளும் இரகசியமாகப் பேணப்படும்.
நன்றி.

கம்யூனிஸ்ட் மு.கார்த்திகேசன் படைப்புகள் வெளியீட்டுக் குழு

மூலம் : வானவில் இதழ் 82- நவம்பர் 2017

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...