பயிரை மேய்ந்த வேலிகள்- 9, 10 &11 ராஜ் செல்வபதி

(பிள்ளைகளை பறிகொடுத்தபோதும் தலைவரை புகழ்ந்த மக்கள்)
Fence 9அதே நேரம் புலிகளின் தீவிரஆதரவாளர்களாக செயற்பட்டோர் இந்த கட்டாய ஆட்கடத்தல் விடையத்தில் அவர்களுக்கு உதவ பின் நிற்கவில்லை. புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சொந்த மக்களுக்கு எதிரான அராஜகத்தை மூடி மறைப்பதிலும், காட்டுதீ போன்று அந்த செய்திகள் மக்களிடையே பரவாமல் இருப்பதற்காகவும் இவர்கள் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்தனர். புலிகளால் கடத்தி செல்லப்பட்டவர்களின் குடும்பங்களை தொடர்புகொண்டு அவர்களை அசுவசப்படுத்துவதிலும், அவர்களின் பிள்ளைகளை கண்டுபிடித்து தருவதாக கூறு அந்த குடுமங்களிடம் பணத்தை கறந்தவர்களும் இருந்தார்கள்.


புலிகளின் அராஜகத்துக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் ஒரு நியமன வசனத்தை அவர்கள் கைவசம் வைத்திருந்தனர். “இது எல்லாம் தலைவருக்கு தெரியாது” என்பதுதான் அந்த வசனம். ஒரு போர் வெற்றி என்றால் அது தலைவரின் நேரடி மேற்பார்வையில் நடைபெறுவதாக கூறிதிரிந்தவர்களால் மிக தெளிவாகவே திட்டமிட்டு வெளிப்படையாகவே சொந்த மக்கள் மீது அவிழ்த்து விடப்பட்ட இந்த அராஜகமும் அதனால் ஊர் முழுவதும் கேட்கும் ஒப்பாரியும் ஓலங்களும் மட்டு தலைவருக்கு தெரியாமல் இருந்ததுதான் பெரிய அதிசயமான விடையமாக இருந்திருக்க வேண்டும்.

அவ்வாறான ஒரு தீவிர ஆதரவாளர் ஒருவர் இந்த கதையை அவிழ்த்துவிட்டுக்கொண்டிருந்த போது தனது பிள்ளையை பறிகொடுத்த பெண்மணி ஒருவர் ”உங்கள் தலைவன் செவிடனா? அல்லது குருடனா?” என கேட்டுவிட்டார். ஒன்றும் பேசாது கிளிநொச்சி பன்னங்கண்டியை சேர்ந்த அந்த தீவிர புலி ஆதரவாளர் அங்கிருந்து புறப்பட்டு அப்படியே நேராக சென்று புலிகளிடத்தில் போட்டுக்கொடுத்துவிட்டார்.


சில மணி இடைவெளிக்குள் “உங்கள் மகனை பார்க்கலாம் உரிய ஆவணங்களுடன் வாருங்கள் தேவை ஏற்பட்டால் அவரை நீங்கள் மீளவும் அழைத்துச்செல்லலாம் என பரவிப்பாஞ்சானில் உள்ள புலிகளின் சமாதான செயலகத்திலிருந்து அந்த பெண்மணிக்கு தகவல் அனுப்பபட்டது. அடித்து பிடித்துக்கொண்டு அங்கு ஓடிய அந்த தாய்க்கு எங்கள் தலைவரை எப்படி நீ செவிடன் குருடன் என்று கூறலாம் என்று புலிகளின் மகிளீர் அரசியல் பிரிவினர் கொடுத்த அடியில் புலித்தேவனின் அந்தகாரியாலயத்திலேயே அந்த பெண் மயங்கி சரிந்து போனார். மாலையாகியும் மகனை பார்க்க போன மனைவியை காணாது அங்கு தேடிச்சென்ற வயதான மனிதர் இறுதியாக புலித்தேவனின் கருணைக்காக அவரை வேண்டி மன்னிப்பு கேட்டு மனைவியை மீட்டு வரவேண்டியதாயிற்று.

பிள்ளைகளை பறிகொடுத்தாலும் பிரபாகரன் என்கின்ற பெயரை உச்சரிக்காமல் அவரை புகழ்ந்து மரியாதையுடன் பேசவேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் அதற்கான தண்டனையை எதிர்நோக்குவதுடன் அவர்களின் பிள்ளைகளை மீள காணவே இயலாது என்றும் இப்போது மக்களை அச்சுறுத்த தொடங்கியிருந்தனர் புலிகள் இயக்கத்தினர்.
தங்கள் பிள்ளைகளுக்கு எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக மககளும் தலைவரை வெளிப்படையாக திட்டுவதை தவிர்த்து அவரை புகழ்வதை தவிர அவர்களால் வேறு எதனையும் செய்ய முடியவில்லை.



பயிரை மேய்ந்த வேலிகள்- 10

(கணணி கற்கலாம் எனகூறி பிள்ளையை காலனிடம் அனுப்பிய தந்தை)
Fence-10இவ்வாறு புலிகளின் இந்த அராஜகத்துக்குத்  துனைபோன அவர்களின் தீவிர ஆதரவாளர்கள் தமது விசுவாசத்தின் உச்சகட்டமாக இயக்கத்தில் தமது பிள்ளைகளை கொண்டு சென்று வழியே ஒப்படைத்ததார்கள். உள்ளூர் பத்திரிகையில் புகைப்படத்துடன் தமது பிள்ளையை எழிலனிடம் ஓடைக்கும் படம் வருமாறும் பார்த்துக்கொண்டனர். சிலர் தாங்களும் இயக்கத்தில் இணைந்துவிட்டதாக வரிப்புலி சீருடையுடன் காட்சி கொடுத்தனர். அவ்வாறு கிளிநொச்சியில் வரிப்புலி உடையுடன்  தோன்றிய ஒருவர் இன்று வடமாகாண அரசியல்வாதியாக வலம் வந்துகொண்டிருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

கணணிப் பிரிவில் கொம்புயூட்டர் இஞ்சினியராக தமது பிள்ளைகள் கற்றுக்கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டு தம்மை போன்று பிள்ளைகளை வழியே கொண்டு சென்று ஒப்படைக்காதவர்களை புலிகளுக்கு காட்டிக்கொடுத்துக்கொண்டிருந்தவர்களின் வீடுகளுக்கும் இப்போது சீல் செய்யப்பட்ட சவப்பெட்டிகள் வந்து இறங்கத்தொடங்கியிருந்தன. இவ்வாறு புலிகளின் கதையை நம்பிய புலிகளின் தீவிர ஆதரவாளர் ஒருவர் தனது மூத்த பெண்பிள்ளையை பலிகொடுத்த சோக சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் நடந்தது.

புலிகள் இயக்கத்தில் ஊறிய அதிவிசுவாசமான குடும்பத்தை சேர்ந்த மருதநகரில் வசிக்கும் ஒருவர் தனது முதல் பிள்ளையான 19 வயது பெண்பிள்ளையை புலிகள் இயக்கத்தில் வலியே சென்று இணைத்துவிட்டு வந்திருந்தார். இவரின் இந்த செயலை அவரின் உறவினர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். ஆனால் அவரோ தமது ஏனைய பிள்ளைகளை பாதுகாக்க தனக்கு இதைதவிர வேறு வழி இல்லை என்று தனது செயலுக்கு நியாயம் கற்பிக்க தொடங்கியிருந்தார்.

பிள்ளை பிடிக்க வேண்டிய வீட்டுக்கு அப்போது புலிகள் உங்கள் பிள்ளையை அடுத்துவரும் சில நாட்களுக்குள் கொண்டுவந்து இயக்கத்தில் சேர்க்க வேண்டும் என கடிதம் அனுப்புவதுண்டு. கடிததுக்கு சாதகமாக பதிலளிக்காத குடும்பங்களுக்குள் பலவந்தமாக புகுந்து அவர்களின் பிள்ளைகளை பிடித்து செல்லுதல் என்ற ஒரு வழிமுறைய இந்த பிள்ளை பிடிக்காரர்கள் கடைபிடித்த காலம் அது. ”உனது வீட்டுக்கு தான் இன்னும் கடிதம் வரவில்லையே பின்பு ஏன் அவசரப்பட்டு உனது பிள்ளையை கொண்டு சென்று ஒப்படைத்தாய்?”என்று கேட்டவர்களுக்கு பதிலாக ”எனது பிள்ளை கணணி பிரிவில் கொம்பியூட்டர் படிக்கின்றது” என்று கூறிச்  சமாளித்தார்.

ஆனால் ஒருநாள் கணணிபிரிவில்  தமது பிள்ளை பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்தவரின் வீட்டிற்கு விசுவமடுவில் ஏதோ குண்டு வெடிப்பில் அந்தபிள்ளை இறந்துவிட்டதாக கூறி உடலை அனுப்பி வைத்திருந்தனர் புலிகள்.
இப்போது அந்த தந்தைக்கு தனது செயலுக்காக கண்ணீர்விட்டு கதறி அழுவதை தவிர வேறு ஒன்றும் அவரின் தெரிவாக இருக்கவில்லை. நம்பிக்கை துரோகம் என்றால் என்ன என்பதையும் நன்கு புரிந்து கொண்டும் இருந்தார்

பயிரை மேய்ந்த வேலிகள்–(11)
********************************************

(பயங்கரமான இரவுபொழுதுகள்)

Fence112006 ஜூன் தொடக்கம் -2009 மே வரையான இந்த காலப்பகுதி கிளிநொச்சி முல்லைத்தீவு மக்களுக்கு அவர்களின் வாழ்நாட்களில் மறக்க முடியாத இருண்ட காலமாகவே இருந்தது. மாலை ஆறுமணியாகிவிட்டால் வீட்டில் வெளிச்சம் வைக்கவே மக்கள் பயப்படதொடங்கியிருந்தனர். இரவில் நாய்கள் குறைத்தால் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அலைமோதும் இளைஞர் யுவதிகள் அவர்களை பாதுகாக்க வழிதெரியாது தவிக்கும் பெற்றோர்கள், உறவினர்கள் என அனைவரும் ஒரு அச்ச சூழ்நிலைக்குள் வாழவேண்டியிருந்தனர்.

83 ஜூலைக்கலவரங்களில் போது சிங்கள இனவாத காடையர்களால் அடித்து நொருக்கி கொன்று குவிக்கப்பட்ட தமிழ் மக்களை பாதுகாக்க அப்போது சிங்களவர்கள் தயங்கவில்லை. தமது அயலவரை கூடியவரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பதில் அன்று அவர்களிடம் இருந்த மனிதாபிமானம் கூட இப்போது இந்த தமிழர்களிடம் இல்லாமல் இருந்தது.

எங்காவது அகப்படுவான் அவனை பிள்ளைபிடிக்காரன்களுக்கு காட்டிகொடுத்துவிட வேண்டும் என்று கண்ணுக்குள் எண்ணை ஊற்றிக்கொண்டு 24×7 மணிநேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுக்காரனிடம் இருந்து தப்பிப்பதற்கு வழியை தேடிய பிள்ளைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மிக மோசமான காலமாகவே அந்த காலப்பகுதியின் இரவுகள் இருந்தன.

பேய்களும்,பிசாசுகளும், பாம்புகளும் உலாவிய பற்றைகளிலும், வாய்க்கால்களிலும் , காடுகளிலும், மர உச்சிகளிலும் இந்த இளம் வயதினர் தஞ்சமடைய வேண்டியதாயிற்று. இயற்கை கடன்களை கழிப்பது என்பது கூட இபோது அவர்களுக்கு உயிரை பணயம் வைக்கும் செயலாமாறிவிட்டிருந்தது.

தலைமயிர் வெட்டுவற்கோ முகச்சவரம் செய்வதற்கோ  இயலாத காரியமாயிற்று. ஒரு கட்டத்தில் பெற்றோரே தங்கள் பிள்ளைகளுக்கு நாவிதன் வேலை பார்க்கதொடங்கியிருந்தனர். சீரான முறையில் இயற்கை கடன்களை கழிக்கமுடியாமலும் குளிக்கவே முடியாத நிலையிலும் சில இளைஞர்கள் நோய்வாய்ப்பட்டனர். இதுதான் அவர்களுக்கான சவாலான காலகட்டம், உடல் நோயினால் மழைக்காலத்தில் கொட்டும் மழையிலும் மரங்களுக்குள்ளும் பற்றைக் காடுகளுக்குள்ளும் மறைந்திருந்தனர். மரங்களுடன் மரங்களாக இரவு பகலாக வாழவேண்டி இருந்தது. இருட்டில் வெளிச்சம் இல்லாமல் பற்றை காடுகளில் ஒழிந்திருப்போருக்கு விசப்பாம்புகளும் ஒரு அபாயமானவையாக இருந்தன. சுகவீனமடைந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய நிலையில் உடல் சுகமாகிவிட வேண்டும் என கடவுளை வேண்டுவதை தவிர அவர்களுக்கு வேறு வழியே இருக்கவில்லை.
இப்படியான சூழலில் ஒழிந்திருந்த ஒரு இளைஞன் பாம்பு தீண்டி இறந்து போன துயர சம்பவம் கிளிநொச்சி ஓராம் கட்டையில் நடந்தது. புலிகளுக்கு  அஞ்சி 43 நாட்கள் பற்றைக்காட்டில் பதுங்கியிருந்த அந்த இளைஞன் நாகம் தீண்டி இறந்து போனான். பிள்ளையை காப்பாற்ற நினைத்த பெற்றோர் உறவினர்களும் இறந்து போன இளைஞனின் உடலை வைத்துக்கொண்டு கதறி அழுவதை கூட கண்டுகொள்ளாமல் அந்த இளைஞனை இவ்வளவு நாட்களாக ஒழித்துவைத்திருந்த பெற்றோரை அடித்து உதைத்த கொடுஞ்செயலை அங்கு வந்த புலிகள் அரங்கேற்றிவிட்டு சென்றிருந்தனர். அவ்வாறு தங்கள் பிள்ளைகளை ஒழித்து வைத்திருந்தமை ஒரு குற்றசெயலாக கருதப்பட்டு அவர் துரோகி என்றளவில் அந்த இளைஞனுக்கு இறுதிகிரிகைகள் செய்வதற்குகூட இயலாமல் அந்த குடும்பம் தவித்தது. கிரிகைகள் செய்யவந்த மதகுரு அச்சுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பபட்டார்.

இறந்த இளைஞனின் உறவினர்கள் கிளிநொச்சி கரடிப்போக்கில் இருந்த அரசியல்துறை பணிமணைக்கு வரவழைக்கப்பட்டு தமது பிள்ளையை ஒழித்து வைத்தமைக்கான விளக்கத்தை அளிக்குமாறு பணிக்கப்பட்டிருந்தனர். பின்பு ஒரு கட்டத்தில் தாம் அவ்வாறு தமது பிள்ளையை தலைமறைவாக வைத்திருந்தமை தவறு என்றும் அதற்காக மன்னிப்பை கோருவதாக அந்த இறந்து போன இளைஞனின் பெற்ரோர் கெஞ்சி மண்டாடியதன் விளைவாகவும் அந்த இளைஞனின் 47 வயது மூத்த சகோதரன் எல்லைபடையில் சேர்ந்துகொள்ள இணங்கியமையாலும் நீண்ட இழுபறியின் பின்பு அவனது உடலை தகணம் செய்ய புலிகள் அனுமதித்திருந்தனர்.

கிளிநொச்சி நகரை அண்டிய பகுதிகளில் இருந்த ஊர்களில் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை என்றால் காட்டுபுர கிராமங்களில் வசித்த இளைஞர்கள் தமது உயிரை காப்பாற்றிக்கொள்ள காடுகளில் தஞ்சமைந்திருந்த போது வேறு ஒரு ஆபத்துக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது.
தொடரும்..


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...