எஸ்.எம்.எம்.பஷீர்
பொருளில்லார்க்கு
இவ்வுலகில்லை;
அருளில்லார்க்கு
அவ்வுலகில்லை
என்றோதும்
குறளோனே !
நீ அவ்வுலகு
இவ்வுலகு
என்றெதனை
சொல்லிவைத்தாய்?
இவ்வுலகில்
பொருளில்லார்
இக வாழ்க்கை
இழந்திடுவார்.
அவ்வுலகில்
அருளில்லார்
மறு வாழ்க்கை
தொலைத்திடுவார்
நீ கண்ட
ஈருலகை
மு. வ
வழி மொழிந்தார்
மு.க
முரண்பட்டு
பொருளுரைத்தார்
பொருளில்லா
இல்லறம்
இன்னல் என்றார்
அருளில்லா
துறவறம்
அவலம் என்றார்
இரண்டுமே
இவ்வுலகில்
இருக்குமென்றார்
வள்ளுவனே !
பூவுலகில்
பொருளில்லையாயினும் ,
அருளோடு வாழ்ந்தவன் நீ
என்னானாய்?
எவ்வுலகம்
எதுவென்று
என் சொல்வாய் ?
குறிப்பு:
"அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு." குறள் 247:
மு. வரதராசன் (மு.வ )உரை:
பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.
கலைஞர் கருணாநிதி (மு.க ) உரை:
பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது. அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது.
No comments:
Post a Comment