இலங்கையில் இலக்கிய சந்திப்பை நடத்தவிடாதுசண்டித்தனம் பண்ணி தடுக்கும் சீமான்கள் யார்? அம்பலபடுத்துகிறார் ராகவன்

இலங்கையில் இலக்கிய சந்திப்பை நடத்தவிடாதுசண்டித்தனம் பண்ணி தடுக்கும் சீமான்கள் யார்? அம்பலபடுத்துகிறார் ராகவன்

 

இலண்டன் இலக்கியச் சந்திப்புக் குறித்து இறுதியாகச் சில சொற்கள்:
- ராகவன்

பல்தரப்பட்ட பிரச்சாரங்களினூடான நியாயப்படுத்தலினால் தவறுகள் சத்தியமாகாது, யாரும் கவனிக்காமல் போனாலும் சத்தியம் தவறாவதில்லை.
- காந்தி 

கடந்த ஏப்ரல் 6 – 7 ம் தேதிகளில் லண்டனில் நடந்து முடிந்த 40வது இலக்கிய சந்திப்பின் பின், நேர்மையற்ற பொய் தகவல்களையும் புரட்டுகளையும் நண்பர்கள் சிவலிங்கம் – சுசீந்திரன் இருவரும் தங்களது இணைய அறிக்கைகளில் அவிழ்த்து விட்டிருப்பது வேதனைக்குரியது. இவ்வறிக்கைகள் இவர்களது அரசியற் பண்பாடு, நேர்மை, ஜனநாயகம் ஆகியவற்றை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றன.



இலக்கியச் சந்திப்பு நிகழ்ந்து முடிந்து, பொதுசபையில் இலங்கையில் நடத்துவதாக முடிவும் எடுக்கப்பட்ட பின்பு, அந்த முடிவை சுசீந்திரனும் சிவலிங்கமும் கொச்சைபடுத்தி பொறுப்பற்றதனமாக அறிக்கைகளை வெளியிட்ட செயல் இலண்டன் இலக்கிய சந்திப்புக் குழுவினரையும் இலக்கிய சந்திப்பில் கலந்து கொண்டவர்களையும் மட்டுமல்லாமல் ஜனநாயக நெறியையும் கேவலப்படுத்துவதாகும்.இலண்டன் இலக்கிய சந்திப்பு நிகழ்வு நடந்து முடிந்தவுடன் நான் ஒரு சிறு குறிப்பை எழுதி நண்பர் பௌசருக்கு அனுப்பி அவரது கருத்தைக் கேட்டேன். அவர் எனது குறிப்புகளில் சில மேலதிக விடயங்களை சேர்க்குமாறு கோரினார். தனக்கு எனது குறிப்புகளில் கருத்து வேறுபாடு இல்லை என்றார். முக்கியமாக இலண்டன் சந்திப்பின் நோக்கமே இந்தப் பிரச்சனைகளை பொதுசபையில் வாதித்து ஜனநாயகரீதியான முடிவொன்றை எட்டுவதே என்றார். எனது குறிப்பு ஏப்ரல் 13ம் தேதி மின்னஞ்சல் சுற்றுக்கு அனுப்பப்பட்டு அதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. 

நான் சிவலிங்கத்திடமும் இது குறித்துப் பேசி நமக்கிடையேயான சிறு சிறு முரண்பாடுகளை பெரிதாக்குவது நல்ல விடயமாகாது என்றேன். அதற்கு அவர் சில பிரச்சனைகளை எனது மின்னஞ்சல் குறிப்பில் நான் சொல்லவில்லை என்றும் தான் ஒரு பதிவை எழுதப் போவதாகவும் கூறினார். நான் நல்ல விடயம் என்றேன். சுசீந்திரனுக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பி தோழமைரீதியாகப் பிரச்சினைகளை அணுகுமாறும் நான் கேட்டேன். ஆனால் சிவலிங்கமும் சுசீந்திரனும் இவ்வாறு முன்னுக்கு பின் முரணாகவும் அயோக்கியதனமாகவும் அறிக்கைகளை வெளியிடுவார்கள் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. 

நான் எழுதிய சிறு குறிப்பு பலருக்கும் எனது மின்னஞ்சல் ஊடாகவே அனுப்பப்பட்டது. ஆனால் சிவலிங்கம் எழுதிய குறிப்பு 40வது இலக்கிய சந்திப்பின் பிரத்தியேக மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டது தற்செயலானதா எனக் கேள்வி எழுப்ப விரும்புகின்றேன். இலண்டன் இலக்கிய சந்திப்பு குழுவினர் அனைவரதும் அனுமதியைப் பெற்று இலக்கியச் சந்திப்பின் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி சிவலிங்கத்தின் அறிக்கை அனுப்பப்படவில்லை. நான் பௌசரிடம் சிவலிங்கத்தின் தனிப்பட்ட கருத்து இலக்கிய சந்திப்பு மின்னஞ்சலால் அனுப்பப்பட முடியுமெனில் எனது கருத்தும் அவ்வாறே அனுப்பபடவேண்டும், நானும் இலண்டன் இலக்கியச் சந்திப்புக் குழுவில் இருந்தேன் என்றேன் . அது குறித்துப் பேசுவதாகச் சொன்ன பௌஸரிடமிருந்து இதுவரை ஒரு பதிலும் இல்லை. ஆனால் சிவலிங்கத்தினது நியாயமற்ற பொய் அறிக்கை இலக்கியச் சந்திப்பு மின்னஞ்சல் ஊடாகப் பரப்பப்படுகிறது. தனிப்பட்ட சுற்றுக்கு விடப்பட்ட அந்த அறிக்கை இணயதளங்களிலும் அரங்கேறுகிறது. இதனைத் தொடர்ந்து நண்பர் சுசீந்திரன், இலண்டன் இலக்கியச் சந்திப்பு பற்றிய குறிப்பொன்றை ‘சித்தன் கொட்டில்’ என்ற தனது வலைப்பதிவில் எழுதி அது முகப் புத்தகங்களிலும் மின்னஞ்சலிலும் சுற்றுக்கு விடப்பட்டிருக்கிறது.

இவர்கள் இருவரதும் அறிக்கைகளினது சாரம்சம்:
1. சிவலிங்கம் ‘இலங்கையில் நடத்துவதா இல்லையா என்பதை வாக்களிப்பு மூலம் தீர்மானிக்க முடியாது .வாக்களிப்பவருக்கான அடிப்படை தகுதி வரையறுக்கப்படாத நிலையில் வாக்கெடுப்பு என்ற அம்சம் பொருத்தமற்ற தேர்வாகிறது’ என்கிறார்.
சுசீந்திரன் இன்னுமொருபடி மேலே போய் ‘அடுத்த இலக்கியச் சந்திப்பு எங்கே நடாத்துவது என்ற முடிவெடுக்கின்ற தருணம் பார்த்து அந் நிகழ்வுக்குத் தலைமைவகுத்து, இலக்கியச் சந்திப்பின் நீண்ட 25 வருட வரலாற்றில் இதுநாள்வரை எவ்வித சம்பந்தமுமேயில்லாத பார்வையாளர்களை திட்டமிட்டுக் கொண்டுவந்து கையுயர்த்தக் கோரி, இனிமேலும் பொருத்த முடியாதபடி இலக்கியச் சந்திப்பினை உடைத்து, உற்சாகமாக இயங்கும் பலரது அரசியல் சமூக அக்கறைகளைத் தகர்த்தெறிந்து மகிழ்கின்றவர்களாக சிலரைக் காணமுடிகிறது’ என்கிறார்.
2. “லண்டன் இலக்கியச் சந்திப்பு குழுவினரின் தீர்மானப்படி சாத்திரி பேச அழைக்கப்பட்டிருந்தார். லண்டன் சந்திப்பு குழுவில் அங்கம் வகித்த ராகவன் அக்குழுவின் ஜனநாயக முடிவை மதிக்காமல் தானும் இணைந்து எடுத்த முடிவை எதிர்த்து அங்கு நடந்து கொண்ட முறை அவரது ஜனநாயகம் பற்றிய புரிதல்களை கேள்விக்குட்படுத்துகிறது” என்றும் சொல்கிறார் சிவலிங்கம். 

இலக்கிய சந்திப்பு பற்றிய சர்ச்சைகள் இருந்த போது இப்பிரச்சனைகளை சுமுகமாகத் தீர்க்க நான் ஒரு பரிந்துரையை லண்டன் சந்திப்பு குழுவினருக்கும் இலங்கை இலக்கியச் சந்திப்புக் குழுவினருக்கும் பொதுவாக முன்வைத்தேன் ‘இருதரப்பினரும் புரிந்துணர்வுடன் 40வது சந்திப்பை ஏப்ரலில் லண்டனிலும், 41வது சந்திப்பை யூலையில் இலங்கையிலும் நடத்துவதாக ஓர் உடன்பாட்டுக்கு வந்து அதைக் கூட்டறிக்கையின் மூலம் பொதுவில் அறிவிப்பது”. என்பதே எனது பரிந்துரையாக இருந்தது. இதனை இலங்கையில் நடத்த விரும்பியவர்கள் ஆதரித்து பெப்ரவரி 2013 இலண்டன் இலக்கிய சந்திப்பு குழுவினருக்கு ஒரு மடலை அனுப்பியதோடு அதைப் பகிரங்கமாக வெளியிடவும் செய்தார்கள். அதற்கு லண்டன் குழுவினர் அளித்த பதில்: நண்பர் ராகவன் அவர்களின் முன்மொழிவு “இருதரப்பினரும் புரிந்துணர்வுடன் 40வது சந்திப்பை ஏப்ரலில் லண்டனிலும், 41வது சந்திப்பை யூலையில் இலங்கையிலும் நடத்துவதாக ஓர் உடன்பாட்டுக்கு வந்து அதைக் கூட்டறிக்கையின் மூலம் பொதுவில் அறிவிப்பது” : இந்த விடயத்தில் முடிவெடுத்து அறிவிக்கும் பொறுப்பு எமக்கு இல்லை என தெளிவாகவே உணர்கிறோம். இலக்கிய சந்திப்பு பொது அரங்கிலேயே இந்த விடயம் பேசப்பட்டு தீர்மானிக்கப்படல் வேண்டும் என்றே கருதுகிறோம்” என இருந்தது.

இதற்கு முன் டிசம்பர் 2012 அளவில் சிவலிங்கம் தனது கருத்தை மின்னஞ்சலில் இவ்வாறு தெரிவித்தார்: “இலக்கிய சந்திப்பு எங்கு நிகழ்த்தப்படவேண்டுமென்ற தீர்மானம் ஜனநாயக அடிப்படையில் ஏகோபித்த ஆதரவோடும் அத ன் வளர்ச்சியில் தமது தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கி வரும் இலக்கிய ஆர்வலர்களின் அனுசரணையோடும் அம் முடிவுகள் எடுக்கப்படுவது வழமையானதாகும். இதற்கான பிரதான காரணம் இதற்கென தனியான அமைப்பு வடிவம் இல்லாமையே ஆகும். அமைப்பு வடிவம் இல்லாமல் சகலரின் ஒப்புதலோடு எடுக்கப்படும் முடிவே உயர்ந்த ஜனநாயக வழிமுறை எனக் கருதப்படுகிறது. இதனையே கிரேக்க நாட்டில் ஆரம்பித்த ஜனநாயக கோட்பாடு கூறுகிறது. இவ் வழிமுறையை பலவீனம் எனக் கருதி எடுப்பார் கை பிள்ளை போல யாரும் உரிமை கொண்டாடலாம் எனக் கருதும் போக்கு மிகவும் விசனிக்கத் தக்கது”.

எனவே பொதுவெளியில் தீர்மானிக்கப்பட வேண்டுமென்றும், ஜனநாயகரீதியாக தீர்மானிக்கப்பட வேண்டுமென்றும், பொதுச்சபை அங்கீகாரம் வேண்டுமென்றும் விடாப்பிடியாக நின்றவர்கள் சிவலிங்கம் உட்பட்ட லண்டன் சந்திப்பு குழுவினரே. இப்பொழுது சிவலிங்கம் தடம் புரண்டு கூறுகிறார்; “வாக்களிப்பவருக்கான அடிப்படை தகுதி தீர்மானிக்கப்படாதவரை வாக்களிப்பு பொருத்தமற்றது”. 

ஆதி கிரேக்க ஜனநாயகத்தில் அடிமை, அன்னியர், பெண்கள் தவிர்ந்த கிரேக்க பிரஜைகளே பொதுசபையில் பங்கு பற்றி வாக்களிக்கத் தகுதி கொண்டவர்கள். அவர்களது பெரும்பான்மை முடிவே கிரேக்க ஜன நாயகம். இலங்கையில் பொதுவாக்களிப்பு குறித்த விவாதம் வந்தபோது சாதிப் பற்றாளர் பொன்னம்பலம் இராமநாதனும் கிரேக்க வழியைப் பின்பற்றி பொது சனவாக்களிப்பை நிராகரித்து இது தலித்துகளினதும் படிப்பறிவற்றவர்களதும் பெரும்பான்மைக்கு வழிவகுக்கும் எனக் கூறியிருந்தார். ஒருவேளை இலக்கியச் சந்திப்பிலும் பொன்னம்பலம் இராமநாதனின் பரிந்துரையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறாரா சிவலிங்கம்?

இதில் முக்கியமான விடயம் எதுவெனில் இலக்கிய சந்திப்பு குழு ஏற்பாட்டுக் கூட்டங்களில் பொது சபை தீர்மானம் பற்றிய எவ்வித ‘தகுதி’ பிரச்சனைகளையும் சிவலிங்கம் எழுப்பவில்லை. அத்துடன் நடந்து முடிந்த இலக்கிய சந்திப்பின் இரு நாட்களிலும் எவ்வித கருத்தும் சிவலிங்கத்திடமிருந்து எழவில்லை. இறுதி நாள் மாலை அரங்கில் 2 மணி நேரம் அடுத்த இலக்கிய சந்திப்பு குறித்த விவாதத்திற்காக ஒதுக்கப்பட்டு பலர் விவாதத்தில் பங்கு பற்றினர். சிவலிங்கம் ‘சிவலிங்கமாகவே’ மூச்சுப்பேச்சில்லாமல் இருந்தார். ஒருமித்த கருத்து ஏற்படாத போது வாக்களிப்பு தவிர்ந்த வேறு வழி கிரேக்க ஜனநாயகத்திலும் இருக்கவில்லை என்பது சிவலிங்கத்திற்கு தெரிந்து அமைதிகாத்தார் என்பதே உண்மை. 

இதற்கு இன்னுமொரு படி மேலேபோகும் சுசீந்திரன் அடுத்த இலக்கியச் சந்திப்பு எங்கே நடாத்துவது என்ற முடிவெடுக்கின்ற தருணம் பார்த்து அந் நிகழ்வுக்குத் தலைமைவகுத்து, இலக்கியச் சந்திப்பின் நீண்ட 25 வருட வரலாற்றில் இதுநாள்வரை எவ்வித சம்பந்தமுமேயில்லாத பார்வையாளர்களை திட்டமிட்டுக் கொண்டுவந்து கையுயர்த்தக் கோரியதாக ஓர் அபாண்டமான குற்றச்சாட்டைக் கூறுகிறார். சிவலிங்கம் ‘தகுதி’க்குள் ஒளிந்து கொண்டு இலக்கியச் சந்திப்பின் பெரும்பான்மை முடிவை நிராகரிப்பதும், ஆட்களை திட்டமிட்டு அழைத்துவந்து வாக்களிக்க வைத்ததாக சுசீந்திரன் கபடத்தனமாக அவதூறு சொல்வதும் எவ்வகையில் நியாயமென்பதற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் லண்டன் இலக்கியச் சந்திப்புக் குழுவின் முதன்மையாளர்களாகச் செயல்பட்ட ராஜாவும் பௌசருமே. ஏனெனில் அவர்களே பொதுசபை தீர்மானத்தைத் தொடந்து வலியுறுத்தியவர்கள். அவர்களது கள்ள மௌனமும் 40வது இலக்கிய சந்திப்பு மின்னஞ்சலை சிவலிங்கத்தின் ‘தனிப்பட்ட கருத்துக்கு ‘ பயன்படுத்த அனுமதித்ததும் அவர்களது நேர்மையின் மீது சந்தேகத்தை எழுப்புவதால் நான் இந்த அவதூறுகளிற்குப் பதிலளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன். அதேபோன்று இவை குறித்தெல்லாம் பதிலளிக்க வேண்டிய அறம்சார்ந்த கட்டாயம் அவர்களிற்குமுண்டு.

ஆட்களை கூட்டி வந்து வாக்கு போட வைத்தது என்ற சுசீந்திரன் கூற்று மிகவும் அபத்தமானதும் உண்மைக்கு புறம்பானதும் காழ்ப்புணர்வின் உச்சக்கட்ட வெளிப்பாடுமாகும். நான் ஏதோ திட்டமிட்டு திடீரென்று அவ்வமர்வுக்குத் தலைமை தாங்கினேன் என சுசீந்திரன் புலம்புவதோ இன்னும் வேடிக்கை. இறுதி அமர்வை ராஜாவும் நானும் வழிப்படுத்துவதென்பது லண்டன் இலக்கிய குழு எடுத்த தீர்மானம். நான் இறுதி அமர்வில் வழிப்படுத்துனர்களில் ஒருவராக இருக்க விரும்பியது உண்மையெனினும் இது குழுக்கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்ட சங்கதி. இது இலக்கிய சந்திப்பு அழைப்பிதழில் வெளிப்படையாக பதிவாகிய விடயம். அதைவிடுத்து நான் திடீரென தலைமை தாங்கியதாகவும் இலக்கிய சந்திப்பில் இதுவரை கலந்து கொள்ளாதவர்களை அழைத்ததாகவும் இவர் கூறுவது அபத்தம். இதற்கு பதிலாக இறுதி நாளன்று கலந்து கொண்டவர்களின் பட்டியலை நான் ஒரளவுக்கு எனது ஞாபகத்திலிருந்து தருகிறேன். ஒருசிலர் தவற விடப்பட்டிருக்கலாம். மிஞ்சினால் இரண்டு மூன்று பேர்கள் தவற விடப்பட்டிருக்கலாம். 
1. சந்தூஸ்- இலக்கிய சந்திப்பில் நீண்டகாலம் பங்கு பற்றியவர். 
2. உமா – இலக்கிய சந்திப்பில் நீண்டகாலம் பங்கு பற்றியவர்
3. முரளி- இலக்கிய சந்திப்பில் நீண்டகாலம் பங்கு பற்றியவர்
4. சுசீந்திரன் – இலக்கிய சந்திப்பில் நீண்டகாலம் பங்கு பற்றியவர்
5. தேவதாஸ்- இலக்கிய சந்திப்பில் நீண்டகாலம் பங்கு பற்றியவர்
6. அசுரா- இலக்கிய சந்திப்பில் நீண்டகாலம் பங்கு பற்றியவர்
7. லக்ஸ்மி- இலக்கிய சந்திப்பில் நீண்டகாலம் பங்கு பற்றியவர்
8. ராஜா- இலக்கிய சந்திப்பில் நீண்டகாலம் பங்கு பற்றியவர்
9. ராகவன் – 5 இலக்கிய சந்திப்பில் பங்கு பற்றியவர்
10. ராசனாயகம் – 4-5 இலக்கிய சந்திப்பில் பங்கு பற்றியவர்
11. ஜெயபூர்ண பாலா- 2-3 இலக்கிய சந்திப்பில் பங்கு பற்றியவர்
12. கீரன் – பல இலக்கிய சந்திப்பில் பங்கு பற்றியவர்
13. காண்டீபன் – 4-5 இலக்கிய சந்திப்பில் பங்கு பற்றியவர்
14. சேனன் – இலக்கிய சந்திப்பில் முன்னர் பங்கு பற்றியவர்
15. போல் சத்திய நேசன் – லண்டன் இலக்கிய சந்திப்பில் 2006 இல் பங்கு பற்றியவர்
16. சத்தியசீலன் – தமிழ் சமூகங்களின் செயற்பாட்டக கூட்டங்களுக்கு தவறாமல் வருபவர்.
17. சலீம் – இலங்கை
18. சல்மா- இந்தியா
19. சிவலிங்கம் – சில இலக்கிய சந்திப்புகளில் பங்கு பற்றியவர். தமிழ் சமூகங்களின் செயற்பாட்டக கூட்டங்களுக்கு தவறாமல் வருபவர்
20. சாள்ஸ்- தமிழ் சமூகங்களின் செயற்பாட்டக கூட்டங்களுக்கு வருபவர். முன்னர் இலக்கிய சந்திப்பில் கண்டதாக தெரியவில்லை.
21. ஜெயன் தேவா- தமிழ் சமூகங்களின் செயற்பாட்டக கூட்டங்களுக்கு வருபவர். முன்னர் இலக்கிய சந்திப்பில் கண்டதாக தெரியவில்லை
22. முத்து – ஒரு சில இலக்கிய சந்திப்பு கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கலாம் . தமிழ் சமூகங்களின் செயற்பாட்டக கூட்டங்களுக்கு வருபவர்
23. வண்ணன் – . தமிழ் சமூகங்களின் செயற்பாட்டக கூட்டங்களுக்கு வருபவர். சலீமின் நண்பர்
24. புதியவன்- . தமிழ் சமூகங்களின் செயற்பாட்டக கூட்டங்களுக்கு வருபவர். இலக்கிய சந்திப்புகளிலும் கலந்து கொண்டவர்.
25. ஜூட்- . தமிழ் சமூகங்களின் செயற்பாட்டக கூட்டங்களுக்கு வருபவர். அரசியல் கூடங்களில் கலந்து கொள்பவர். சலீமின் நண்பர். 
26. சசீவன்- . தமிழ் சமூகங்களின் செயற்பாட்டக கூட்டங்களுக்கு வந்திருக்கிறார். நூலக நிருவனர்களில் ஒருவர். 
27. கெங்கா- . தமிழ் சமூகங்களின் செயற்பாட்டக கூட்டங்களுக்கு வருபவர். லண்டன் இலக்கிய சந்திப்புகளில் பங்கு பற்றியவர்.
28. சபேசன் – . தமிழ் சமூகங்களின் செயல்ப்பாட்டக கூட்டங்களுக்கு வருபவர். இதற்கு முன் 1994 இல் லண்டனில் நடந்த இலக்கிய சந்திப்பின் பொறுப்பளர்களில் ஒருவர். 
29. பௌசர் – . தமிழ் சமூகங்களின் செயற்பாட்டக கூட்டங்களுக்கு வருபவர். ஏற்பாட்டளர். இலக்கிய சந்திப்பு கூட்டங்களில் கலந்து கொண்டவர்.
30. சுகுணசபேசன் – . தமிழ் சமூகங்களின் செயற்பாட்டக கூட்டங்களுக்கு வருபவர்
31. மாலி – அரசியல் கூட்டங்களில் பங்கு பெற்றவர். பத்திரிகை துறை.
32. ரஞ்சி- இலக்கிய பெண்கள் சந்திப்புகளில் பங்கு பற்றுபவர். 
33. நவஜோதி – . தமிழ் சமூகங்ககளின் செயற்பாட்டக கூட்டங்களுக்கு வருபவர்
34. சரவணன் – இலக்கிய சந்திப்பில் நீண்டகாலம் பங்கு பற்றியவர்
35. கலையரசன்- இலக்கிய சந்திப்பில் நீண்டகாலம் பங்கு பற்றியவர்
36. ரயாகரன் – அரசியல் கூட்டங்கள். முன்னர் இலக்கிய சந்திப்பில் பங்கு பற்றியவர்
37. ராஜ் கவுதமன்- இந்தியா 
38. திருமதி ராஜ் கவுதமன் – இந்தியா
39. ஜமுனா ராஜேந்திரன் – எழுத்தாளர். இலக்கிய சந்திப்பில் பங்கு பற்றியவர்
40. இன்பா- இலக்கிய சந்திப்பில் நீண்டகாலம் பங்கு பற்றியவர்
41. பாலன் – தமிழ் சமூகங்களின் செயற்பாட்டக கூட்டங்களுக்கு வருபவர்
42. சிவராசா- இலக்கிய சந்திப்பில் நீண்டகாலம் பங்கு பற்றியவர்
43. விஜயன்- தமிழ் சமூகங்ககளின் செயற்பாட்டக கூட்டங்களுக்கு வருபவர். சலீமின் நண்பர்.
44. விக்டர் செருபிம்- தமிழ் சமூகங்ககளின் செயற்பாட்டக கூட்டங்களுக்கு வருபவர்
45. சின்ரா- இலக்கிய சந்திப்புகள் அரசியல் கருத்தரங்குகளில் பங்கு பற்றியவர்
46. வனஜா- இலக்கிய சந்திப்புகள் அரசியல் கருத்தரங்குகளில் பங்கு பற்றியவர்
47. தங்கவடிவேல் மாஸ்டர்- அரசியல் கருத்தரங்குகளில் பங்கு பற்றியவர்
48. பாலசுகுமார்- இலக்கிய சந்திப்புகள் அரசியல் கருத்தரங்குகளில் பங்கு பற்றியவர் 
49. ராமமூர்த்தி – தமிழ் சமூகங்ககளின் செயற்பாட்டக கூட்டங்களுக்கு வருபவர்

இதில் கிரேக்க ஜனநாயக முறைப்படி தகுதியற்றவர் யார் என்பதற்கு சிவலிங்கம் பதில் சொல்லட்டும்! இதில் யார் வாக்களிக்க அழைத்துவரப்பட்டவர்கள் என்பதற்கு சுசீந்திரன் பதில் சொல்லட்டும்!! இந்த கூட்டத்தின் புகைப்படங்களும் வீடியோக்களும் லண்டன் இலக்கிய சந்திப்பு குழுவினரிடம் இருக்கிறது. அவர்களும் அதனை பரிசீலித்து யார் கூட்டி வரப்பட்டவர்கள் என ஒரு பட்டியலைப் போடலாம். 
நான் ஆட்களை கூட்டிவந்தேன் என்று அவதூறு செய்கிறார் சுசீந்திரன். அவ்வாறு ஆள் கொண்டு வர நினைக்கும் அற்ப புத்தி எனக்கு இல்லை. லண்டனில் நடக்கும் இலக்கியச் சந்திப்புக்கு லண்டனில் உள்ளவர்கள் பெரும்பாலோர் வருவது இயற்கையே. அது தவிர பௌசரும் ராஜாவும் இலக்கிய சந்திப்பை இம்முறை வித்தியாசமாக நடத்தவேண்டும் என்று சொல்லிகொண்டிருந்தார்கள். தொடர்ந்த மின்னஞ்சல்கள், தீபம் தொலைக்காட்சி பேட்டி, தொலைபேசி அழைப்புகள் எனப் பரப்புரை செய்து அதிகப்பேரை வரவழைக்க அவர்கள் முயற்சி செய்தனர். அப்படியிருந்தும் லண்டனில் தமிழ் பேசும் சமூகங்களின் செயற்பாட்டக கூட்டங்களுக்கு வருபவர்களே பெரும்பான்மையாகச் சந்திப்பில் கலந்து கொண்டனர். 

உண்மையில் லண்டன் இலக்கிய சந்திப்பு குழுவில் அங்கம் வகித்தவர்களில் சிலர் முன்னைய இலக்கியச் சந்திப்புகளில் பங்கு பற்றாதவர்கள். வித்தியாசமாக இலக்கியச் சந்திப்பை இம்முறை செய்வோம் என்று சொன்ன ராஜாவும் பௌசரும் நியமித்த இந்த குழுவுக்கு இருக்கிற தகுதி கூட இரண்டு நாள் கலந்து கொண்டவர்களுக்கு இல்லை என்பது வந்தவர்களை அவமானப்படுத்தும் செயல். அவர்கள் வாக்களிக்க திட்டமிட்டு அழைக்கப்பட்டவர்கள் என்பது அவர்கள் சுயமாக சிந்திக்க தெரியாதவர்கள் என வந்தவர்கள் மேல் வைக்கும் அவதூறாகும். 
இரண்டாவது நாள் இறுதி அமர்வின் போது எனக்கருகில் இருந்த ராஜாவின் அவமதிப்பையும் பொருட்படுத்தாமல் இலக்கிய சந்திப்பு எங்கு நடத்தப்படவேண்டும் என்ற விவாதம் தொடர நான் வழி செய்தேன். வாக்கெடுப்பு ஏதோ உடனடியாக அறிவிக்க பட்டதென்ற தொனியில் சுசீந்திரன் சொல்வது உண்மைக்குப் புறம்பானது. அதே தொனியில் “இதே போன்று, 41வது இலக்கியச் சந்திப்பு தொடர்பான விவாதத்தில் தலைமை வகித்த நிலையில், தன்னிச்சையான பக்கச்சார்புடன் எவ்வித ஆலோசனையுமின்றி வாக்கெடுப்பிற்கு விட்டிருந்ததும் சந்தேகத்தை தருகிறது. குறிப்பில் கொடுத்த விளக்கங்களை விட அவரது செயற்பாடுகள் அதிக விளக்கங்களை பார்வையாளர்களுக்கு வழங்கியது என்பதே யதார்த்தம் ” என அலம்புகிறார் சிவலிங்கம்.

விவாத நேரத்தில் 12 பேருக்கு மேல் கருத்து தெரிவித்தனர். இலங்கையில் அடுத்த சந்திப்புக்கு ஆதரவாக வாக்களித்த ராசநாயகம் கூட இலங்கையில் வைப்பது பற்றிய கேள்விகளை எழுப்பி அங்கு வைப்பது இப்போது அவசியமல்ல எனக் கருத்து தெரிவித்தவர் தான் . ஜெயபூர்ணபாலாவும் இலங்கையில் நடத்துவதற்கு எதிராகவே ஆரம்பத்தில் பேசினார். நான் அனைவரும் சேர்ந்து ஒருமித்த கருத்துக்கு வரவேண்டும் என்றே வலியுறுத்தினேன். அதற்கு வாய்ப்பில்லை என்ற நிலையில் ராஜாவும் நானும் சேர்ந்தே வாக்களிப்பை நடத்தினோம். இலங்கையில் சந்திப்பை நடத்துவதற்கு எதிர்க் கருத்து சொன்ன ராஜநாயகம் , ஜெயபூர்ணபாலா உட்பட பெரும்பாலோர் இலங்கையில் சந்திப்பை நடத்துவததற்கு ஆதரவு கொடுத்ததைக் கண்ட சுசீந்திரன் அதனைக் குழப்ப முயன்று ஆத்திரத்துடன் கத்தி கூச்சல் போட்டதே நிகழ்ந்த உண்மை. இதன் பின் பலர் குறுக்கிடுவதும் கூச்சலிடுவதாகவும் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. பின்னர் ஒரு மாதிரியாக அமைதிக்கு வந்து மீண்டும் வாக்கெடுப்பு வைக்கப்பட்டு இலங்கையில் சந்திப்பை நடத்துவதற்கான முடிவு இலண்டன் இலக்கிய சந்திப்பின் சார்பில் பௌசரால் அறிவிக்கப்பட்டது. இது தான் உண்மை. சுசீந்திரன் நேர்மையானவராக இருந்தால் ‘ஆட்களை கூட்டி கொண்டு வந்திருக்கலாம்’ என்ற சந்தேகத்தை அங்கு சொல்லியிருக்கலாம். அதனை விடுத்து சபை முடிவை அவமதித்து அபாண்டம் சொல்வது போக்கிரித்தனம் நண்பரே. 

சிவலிங்கம் ! ராஜா எனக்குப் பக்கத்தில் இருந்தது உங்களது கண்ணில் படவில்லையா, ராஜாவே வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என முன்மொழிந்தது உங்களது காதில் விழவில்லையா? அது என்ன தன்னிச்சையான பக்கசார்பு? பொதுசபையில் பொது வெளியில் முடிவுக்கு விடப்படவேண்டும் , இலங்கையில் சந்திப்பை நடத்துவது குறித்து முடிவெடுக்க லண்டன் குழுவுக்கு அதிகாரமில்லை என்று கடந்த 6 மாதங்களுக்கு மேலாக உபதேசம் செய்தவரின் கயிறு திரிப்பு இது. நீங்கள் அந்த அமர்வில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? வாக்கெடுப்புக்கு விடும் வழியைத் தவிர்த்து வேறென்ன செய்திருப்பீர்கள்?வாக்களிப்புத் தகுதி என்ற உங்களது உதிர்ப்புக்கு என்னதான் பொருள் ? தகுதிகாண் சுற்றில் பெண்களும் தலித்துகளும் நிராகரிக்க ப்பட்டிருப்பார்களோ? தகுதியைத் தீர்மானிக்கும் உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் நீங்கள் ஒருகணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சுசீந்திரன் தனது புலம்பலில் நான் நடு நிலைமை தவறினேன் எனவும் வெற்றி எமதே என்று கூறினேன் என்றும் எழுதியிருக்கிறார். இது கபடத்தனம். ராஜா சபைமுன் என்னை இரு முறை அவமதித்ததற்குப் பதிலாக காந்தியின் கூற்றொன்றை சொல்லி எனது பேச்சை ஆரம்பித்தேன். ‘முதலில் அவர்கள் எம்மை உதாசீனம் செய்வார்கள். பின்னர் எம்மை பார்த்து நகைப்பார்கள். அதன் பின் எம்முடன் சண்டைக்கு வருவார்கள். ஆனால் வெல்வது நாங்களே’ என்று எனது பேச்சில் குறிப்பிட்டேன். இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் காந்தியின் கூற்றின் கடைசி வசனத்தை மட்டும் பிய்த்தெடுத்து சுசீந்திரன் எழுதியிருப்பது யோக்கியமான செயல் அல்ல.

சாத்திரியை அழைக்க இலக்கிய சந்திப்புக் குழு தீர்மானித்தது. அதனை மீறி ராகவன் அகோரமாக நடந்து விட்டார், துண்டு பிரசுரம் விநியோகித்தார், சாத்திரி பேசும் போது குறுக்கிட்டார், அது ஜனநாயகம் பற்றிய அவரது புரிந்துணர்வை கேள்விக்குள்ளாக்கிறது என்று சுசீந்திரனும் சிவலிங்கமும் இரட்டை நாயனம் வாசிப்பது அபசுரமே. ஒரு புறம் 7 பேர் கொண்ட இலக்கிய குழுவின் முடிவுக்கு கட்டுப்படாத ராகவனுக்கு கிரேக்க ஜனநாயகம் போதிக்கும் சிவலிங்கம் மறுபுறம் 40 பேர் கொண்ட பொதுசபை எடுத்த ஜன நாயக முடிவை எதிர்த்து ‘தகுதி தராதரம்’ என்றெல்லாம் பேசுவது முரண் நகை. 

சாத்திரி விடுதலை புலிகளின் ஆதரவாளர் என்ற காரணத்தால் மட்டும் அவர் பேசும் போது குறுக்கிட்டிருந்தால் அது நியாயமற்றது. ஆனால் சாத்திரி அவதூறு செய்தவர். அவர் தனது கடந்த கால அவதூறுகளுக்கு மன்னிப்பு கேட்டு விட்டு பேச்சை தொடரலாம் என்பதே எனது வாதமாக அங்கே முன்வைக்கப்பட்டது. அப்படியிருந்தும் சபையினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க நான் பின்னர் குறுக்கிடவில்லை. அவர் பேசினார். அவர் பேசி முடிந்த பின் நான் அவரிடம் ‘நீங்கள் இங்கு வந்தது மகிழ்ச்சி. ஆனால் நீங்கள் கடந்தகாலங்களில் இவ்வாறான அவதூறுகளை செய்ததற்கு தார்மீக பொறுப்பு எடுக்க வேண்டும்’ என்றேன். அவர் இரண்டாம் நாள் காலை நிகழ்ச்சிக்கும் வந்தார். தனது இணையத்தளத்தில் பின்னர் சாத்திரி ‘நான் சந்திப்பில் கலந்து கொள்ளவே கேட்டேன். பௌசர் தான் என்னை பேச கேட்டார். தலைப்பும் தந்தார்’ எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் முன்னைய ஏற்பாட்டுக் குழுக் கூட்டத்தில் ‘சாத்திரி தானும் பேச விரும்புகிறார்’ என்றே எங்களுக்கு பௌசரால் சொல்லப்பட்டது. இதையும் பௌஸர் விளக்கியாக வேண்டும். சாத்திரியை நிகழ்வில் பேச அழைப்பதற்கான அரசியல் என்னவென்பதைப் பௌஸரிடமிருந்து தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
சாத்திரியை பேச அழைப்பது பற்றிய விவாதம் சந்திப்பு குழுவில் எழுந்த போது நானும் நிர்மலாவும் சாத்திரி இலக்கிய சந்திப்பில் கலந்து கொள்வது பற்றி எமக்கு பிரச்சனை இல்லை. ஆனால் அவர் இந்த சந்திப்பு கூட்டத்தில் பேசுவது பற்றி நாம் எதிர்த்தோம். “இதை யோசிக்க வேண்டும். அவருக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். அவர் ‘ஒரு பேப்பர்’ போன்ற பத்திரிகைகளில் மிக மோசமான அவதூறுகளை எழுதி வந்தவர். எனவே அவர் கலந்து கொள்ளட்டும், ஆனால் அங்கு அவர் உரை நிகழ்த்த நாம் மேடையமைத்துக் கொடுப்பது சரியல்ல” என்றோம். ஏற்பாட்டுக் குழுவில் உடனடியாக இந்தப் பிரச்சினை வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது எம்மிருவரை தவிர சிவலிங்கம் உட்பட அனைவரதும் கைகளும் உயர்ந்தன. எனது மறுப்பை நான் குழுவில் தெரிவித்தேன். அந்த மறுப்பை எழுத்திலும் பேச்சிலும் இலக்கிய சந்திப்பு நிகழ்வில் பதிவு செய்வதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. நிகழ்வுக்கு பின்னால் அல்லாமல் நிகழ்விலேயே அதைப் பேச எனக்கு உரிமையுண்டு. அது இலக்கியச் சந்திப்பின் மரபுமாகும். நான் குறுக்கிட்டதைத் தொடர்ந்து, ரஞ்சி உட்பட பலர் ‘அவதூறுகளுக்கு மன்னிப்புகேட்ட பின் சாத்திரி பேசுவதே சரியானது’ எனச் சபையில் கருத்துக் கூறினார்கள். ஆனாலும் சபையினரின் விருப்பப்படி சாத்திரி பேச அனுமதிக்கப்பட்டார். சபையிலுள்ள பெரும்பான்மை நான் குறுக்கிட்டது தவறு என்று கூறும் பட்சத்தில் அந்தத் தவறை ஏற்றுக்கொள்ள எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நான் சாத்திரியின் பேச்சில் குறுக்கிட்டதற்கான இன்னொரு காரணம், சாத்திரியின் அமர்வை வழிப்படுத்திய சபேசன் மண்டபம் 5 மணிக்கு காலிசெய்யப்படவேண்டுமென்பதால் கலந்துரையாடல் இன்னொரு மண்டபத்தில் நிகழும் என அறிவித்த போது எங்களது கேள்விகளுக்கு சாத்திரி பதில் சொல்லாமலே போய்விடுவாரோ என்ற ஐயம் எழுந்தது. எனவே நான் குறுக்கிட வேண்டிய நிலை. 
சிவலிங்கம் அவர்களே எனக்கு ஒன்று புரியவில்லை ! இலக்கிய சந்திப்பினையும் மாற்று கருத்தாளரையும் அவதூறுக்குள்ளாக்கி, மாற்று இயக்கங்களை ஒழித்தது தர்மயுத்தம் என்றும் கம்யூனிஸ்டுகள் கொல்லப்படவேண்டும் என்றும் சொன்ன ஒருவருக்கு நீங்கள் மேடையமைத்து கொடுத்தது அவமானமாக உங்களுக்குத் தெரியவில்லையா? உங்கள் தோழரான விஜயானந்தனின் படுகொலையை கைத்தட்டி மகிழ்ந்து எழுதிய ஒருவரைப் பேச அழைத்து கைகட்டி வாய் பொத்தி இருந்த உங்களை ஒரு இடது சாரி என்றழைக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அவதூறுகளுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு பேசலாம் என நான் குறுக்கிட்டபோது ரஞ்சி உட்பட பலர் எனக்கு ஆதரவாக இருந்தனர். குகதாசன் போன்ற இடது சாரிகள் ஆத்திரமடைந்திருந்தனர். சல்மா என்னிடம் வந்து ஏன் இவரை பேச அழைத்தனர் என வினவினார். இது பற்றி உங்கள் கிரேக்க ஜன நாயகம் என்ன சொல்கிறது ? 

‘இலக்கியச் சந்திப்பை புலம் பெயர்ந்தவன் ஒருவன் இருக்கும் வரை இலங்கைக்குக் கொண்டு செல்ல அனுமதிக்கமாட்டேன்’ என்று காலை நிகழ்வில் வீராப்புப் பேசி இறுதியில் வாக்கெடுப்பு மூலம் இலங்கைக்கு கொண்டு செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது மேசையில் குத்தி இலக்கிய சந்திப்பின் ஆன்மா இறந்து விட்டதெனக் கதறிய சுசீந்திரனும், இலக்கிய சந்திப்பு இலங்கையில் நடப்பதை பார்ப்போம் என்று சவால் விட்டு வெளியேறிய இன்பாவும், பரா சொன்னவர் இலக்கிய சந்திப்பு ஒரு முறை வெளியில் நடந்தால் திரும்பவும் ஜேர்மனிக்கு போகவேண்டுமென எனது கையிலிருந்த ஒலிவாங்கியைப் பறித்தெடுத்து மூடத்தனமாக விதண்டாவாதம் புரிந்த லஷ்மியுமா இலக்கிய சந்திப்பு எங்கு நடக்கவேண்டும் என தீர்மானிக்கும் கிரேக்க ஜனநாயகக் காவலர்கள்? இந்த மூவருடைய பிரச்சனையும் இலக்கியச் சந்திப்பு இலங்கைக்குப் போவது பற்றியதல்ல . இவர்கள் யார் எங்களை மீறி இலக்கிய சந்திப்பு செய்பவர்கள் என்ற தடிப்பும் திமிருமே இவர்களுக்கு . இது வரை காலமும் பலர் இது தான் பிரச்சனை, உனக்கு விளங்கவில்லை. கனடாவில் லண்டன் சந்திப்பு குழுவை வைத்து அவசர அவசரமாக அடுத்த சந்திப்பை கேட்க வைத்தவர்கள் இவர்கள் தான், நீ சமரசம் என்று மூக்குடையப்போகிறாய் என்று எச்சரித்தும் நான் ஒரு நம்பிக்கையில் தொடர்ந்தும் பிரச்சனையை சுமுகமாகத் தீர்க்க முயன்றேன். ஆனால் இந்த இலக்கிய சந்திப்பின் வெற்றி இவர்களது உண்மை முகங்களைத் தெருவுக்கு கொண்டுவந்தது தான். 

உண்மையிலேயே இலங்கையில் இலக்கியச் சந்திப்பை நடத்துவதைக் குறித்த பிரச்சினை கனடா இலக்கியச் சந்திப்பிலேயே முடிந்திருக்க வேண்டியது. அது தவறியிருப்பின் கூட இலங்கை ஏற்பாட்டுக் குழுவினருடன் நடத்திய பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளில் இது முடிந்திருக்க வேண்டியது. இறுதி வாய்ப்பாக ’40வது சந்திப்பை இலண்டனிலும் 41வது சந்திப்பை இலங்கையில் நடத்துவதுமாக ஓர் உடன்பாட்டுக்கு நாம் வரவேண்டும்’ என்ற எனது பரிந்துரையை இலண்டன் குழு ஏற்றிருந்தால் கூட இவ்வளவு குழப்பங்களும் தலைகுனிவுகளும் கதறல்களும் ஏற்பட்டிருக்காது. 

சுசீந்திரன், லஷ்மி ஆகியோரே இவ்வாறான இணக்கப்பாடு இருதரப்புக்குமிடையே ஏற்படாது பல்வேறு சதிகளாலும் கபடங்களாலும் முட்டுக்கட்டை போட்டு இலக்கியச் சந்திப்பின் தார்மீகத்தைக் குலைத்தவர்கள். அவர்களது திட்டமும் ‘கடின உழைப்பு’ம் இலண்டன் இலக்கியச் சந்திப்பில் பெரும்பான்மையால் தோற்கடிக்கப்பட்டபோது அவர்கள் மூர்க்கத்துடன் அவதூறுகளைச் சொரிய ஆரம்பித்துள்ளார்கள்.அவர்களது சொற்களைக் கேட்டு பொதுச்சபை, இரகசிய வாக்கெடுப்பு, பொதுவாக்கெடுப்பு என்றெல்லாம் விடாப்பிடியாக நின்ற இலண்டன் இலக்கியச் சந்திப்புக் குழுவினருக்கு முன் ஒரு பெரிய பொறுப்பு இருக்கிறது. இலண்டன் இலக்கிய சந்திப்பின் இறுதி நாளில் பொதுசபை எடுத்த முடிவு ஜனநாயகமானது, அது ஆட்சேர்ப்பால் நடக்கவில்லை என அவர்கள் அறிக்கை விடுவதே அரசியல் அறம். 

இதற்குமேல் இந்த சர்ச்சையில் ஈடு படுவதில்லை எனத் தீர்மானித்துள்ளேன். இப்பேச்சுவார்தைகளில் கடந்த ஒரு வருடமாக ஈடுபட்டு நான் களைத்து விட்டேன். இனி எனது முழுப் பிரயத்தனமும் இலங்கை இலக்கியச் சந்திப்பைக் காத்திரமாக நடத்துவதற்காக உழைப்பதிலேயே இருக்கும்.** நன்றி -பேஸ் புக் 

நன்றி
21.04.2013
தகவல் : சலசலப்பு
சிறு குறிப்பு: சுஷீந்திரன் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் பார்வையாளராக கலந்து கொண்டிருந்தார் - எஸ்.எம்.எம். பஷீர் 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...