வெண். ப்ரஹ்மான்வத்த சீவலி தேரருடன் ஒரு சந்திப்பு.
எஸ்.எம்.எம்.பஷீர்
இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம் மக்கள் மீது காழ்ப்புணர்வு கொண்ட ஒரு சில பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அடாவடித்தனங்கள் இலங்கை மக்களின் சக சீவியத்திற்கு சவாலாக அமைந்து வருகிறது . ஒரு புறம் மென் மேலும் தீவிரமுற்று வரும் முஸ்லிம் சமூகத்தின் மத வாழ்க்கைமுறைக் கெதிரான அடக்குமுறைகளும் மறுபுறம் அதற்கெதிராக குரலெழுப்பும் , கண்டனம் தெரிவிக்கும் , இன முரண்பாட்டு சூழலில் பரஸ்பர நெருக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன .
அந்த வகையில் அண்மையில் இலங்கை சென்றிருந்த வேளை , எனக்கு அறிமுகமான சீவலி தேரரை சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. இலங்கையில் நடைபெறும் ஹலால் பிரச்சினை மற்றும் பொது பல சேனாவின் முஸ்லிம் சமூகத்தின் மீதான பௌத்த மேலாதிக்க அடக்குமுறை பற்றி பிரஸ்தாபிக்க , கருத்தறிய ஒரு சந்தர்ப்பமாக அது அமைந்தது. சமகால எதோச்சை நிகழ்வாக அன்றைய தினம் சீவலி தேரர் ஜம்மியத்ல் உலமா மற்றும் பௌத்தமத தேரர்கள் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார் என்பதையும் அவர் மூலம் அறிய முடிந்தது. தனது சமூக சமய வேலைப் பளுவுக்கு மத்தியில் என்னை சந்திக்கஅவர் எனக்கு நேரம் வழங்கினார். சீவலி தேரர் உட்பட பௌத்த மத உயர்பீட தேரர்கள் கலந்து கொண்ட அந் நிகழ்வில் எய்தப்பட்ட தீர்மானங்கள் குறித்து பொது பல சேனாவும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் மேலும் புதிய சமாச்சாரங்களை முஸ்லிம் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலில் வேறு சேர்த்துக் கொண்டது. அதேவளை முஸ்லிம்களில் ஒரு தரப்பினரும் அத்தீர்மானங்களை எதிர்ப்பதாகவும் , அத் தீர்மானங்களை அங்கீகரித்த அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினரை கண்டிப்பதாகவும் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
எவ்வாறெனினும் அவரின் கருத்தின் மீதான விவாதத்தினை முன்னெடுப்பதாக எமது கலந்துரையாடல் அக்குறுகிய நேரத்தில் அமையவில்லை . என்றாலும் அவரின் இலங்கை மக்களின் பொது நலன் , சக ஜீவிதம் , மத உரிமைகள் , கடப்பாடுகள் குறித்த ஆர்வம் , இன மத அடிப்படையிலான குரோதங்கள் குறித்த எதிர்ப்பு , அமைதியை விரும்பும் அனைவரின் கவனத்திற்குரியவை.
No comments:
Post a Comment