"நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் ! " -எஸ்.எம்.எம்.பஷீர்




"ஊரில் அக்கறை உள்ளவர் நடப்பாய்
மாரித் தவளை முகாரி எடுப்பாய்
நாரியுந் தெறிக்க முழக்க மிடுவார்
சேரியைச் சுற்றி சேவையும் தொடுப்பார்"
                                                             
கவிஞர் அனலக்தர்

முஸ்லிம் காங்கிரஸ் உட்பட்ட சகல முஸ்லிம் கட்சிகளும் இவ்வருட  ரமலான் மாதத்தில் அரசியல் நன்மைகளை கொள்ளை கொள்ள தங்களின் மாகான சபைத் தேர்தல் பணிகளை  பிள்ளையார் சுழி போட்டு , மன்னிக்கவும்  786 போட்டு ( இந்த இலக்கம் எண்ணியல் படி இறைவனின் பெயரால் ஆரம்பிப்பதாக உள்ள அரபு சொற்றொடரான " பிஸ்மில்லா .. " எனும் சொற்றொடரின் எழுத்துக்களின்  எண் கூட்டுத் தொகையே  786 என்று கூறப்பட்டாலும் இது ஒரு பிழையான சமாச்சாரம் என்பது ஒருபுறமிருக்க ) தங்களின் தேர்தல் பணிகளை பூர்வாங்கமாக ஆரம்பித்து வைத்துள்ளார்கள் .    எதுவாயினும் நமது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு பிழையான சுயநல வியாபார அரசியலுக்கு பிழையானதே சரியானதுதான்.

கிழக்கு மாகாணத்தில் இப்போதெல்லாம்  கொளுத்தும் வெயிலில் நோன்பு அனுஷ்டித்து மாலையில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வுகள்  அரசியல்  நிகழ்ச்சி நிரலாக  மாற்றப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாணத்துக்கான தலைமை வேட்பாளராக முஸ்லிம்  காங்கிரசின் பிரதித் தலைவர் ஹாபீஸ் நசீர் அஹமத் தன்னை கிழக்கில் அறிமுகம் செய்யும் ஆக்ரோஷமான கருத்துக்களை உமிழ்ந்து வருகிறார். இவர் அஸ்ரபின் அகால மரணத்தின் பின்னர் " அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும் "  என்ற நிலையில் நடைபெற்ற உயர்பீட தலைமைத்துவப் போட்டியில் தலையை நுழைக்க முடியாமல் போனாலும் , பின்னர் முஸ்லிம் காங்கிரசின் கட்சியிலிருந்து வெளியேறி தனக்கென " ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு "  (Democratic Unity alliance) என  ஒரு கட்சியை உருவாக்கி மேல் மாகாணத்தில் அரசியல் அதிகாரத்தினை கைகொள்ள முயற்சித்து அதில் சிறு அளவில் வெற்றியும் பெற்றவர். ஆனால முஸ்லிம் காங்கிரசில் அஸ்ரபின் மூலம் பல நிதி அனுகூலங்களை பெற்றவரில் இவரும்  ஒருவர் என்று பரவலாக சொல்லப்படுகிறது. அஸ்ரபின் மரணத்தின் பின்னரான தலைமத்துவப்போட்டியில் தலைமையகத்தைக் கபளீகரம் செய்ய நசீர் அஹமது முயன்றார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. ஆகவே அவர் அன்று தலைமைத்துவப் போட்டியில்  ஈடுபடவில்லை பேரியல் அஸ்ரபும் , ஹக்கீமும், அதாவுல்லாவும் தலைமைத்துவத்துக்குள்ளும் வெளியேயும் தொப்பிச் சண்டை (குடும்பிச் சண்டைக்கு ஒத்த சொற்றொடர் ) போட்டு அங்கிருந்து நீங்கிய பின்னர் கட்சியின் தலைமையகமான "தாருஸ் ஸலாம் " கட்டடத்துள் நசீர் அஹமது நுழைந்து அஸ்ரபின் தலைமைச் செயலகம் தொடர்பான எழுத்திலுள்ள நம்பிக்கைப் பொறுப்பின் பிரதிநிதி நானே என்று கூறி கட்டடத்தின் அறைகளை பூட்டி கட்டடத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர். .    


எது எப்படி இருப்பினும் அரசியலில் ஒருவர் நுழைந்தால் , அதிலும் ஆளும் அரசில் அங்கத்துவம் வகித்தால் பண பலம் அதிகரிக்கும் என்பதற்கு முஸ்லிம் காங்கிரசும் விதி விலக்கல்ல. இதைக் குறிப்பிடும் போது, ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. அதை சொல்லிவிட்டு இக் கட்டுரையினைத் தொடர்வோம்.

முஸ்லிம் காங்கிரசின் முதலாவது வடக்கு கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டு அன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஜிரோ வாகனத்தில் கல்முனைப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது , அவருக்காக முஸ்லிம் காங்கிரசுக்காக மாகாண சபைத் தேர்தலில் பணியாற்றிய மிக முக்கியமான ஆதரவாளர் ஒருவர் வீதி அருகாமையில் நிற்பது கண்டு சேகு இஸ்ஸதீன் வாகனத்தினை நிற்பாட்டி சுகம் விசாரித்தார். எப்படி சுகமா ? என்று கேட்க அவர் சுகம் சொல்லிவிட்டு , என்ன நிலைமைகள் என்று கேட்க. அந்த ஆதரவாளர். நிலைமைகள் என்ன எங்களுடன்  நீங்களும் சில நாட்களுக்கு முன்பு வரை சைக்கிளில் சென்றீர்கள் இப்போது குளு குளு பஜிரோவில் சாரதி உங்களை ஓட்டிச் செல்ல , உங்களைப் காவலாளிகள் பாதுகாக்க பயணம் செய்கிறீர்கள். ஆனால் நான் அதே சைக்கிளுடன் அதே வீதியில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அதுதான் எங்களது  நிலைம  என்று கூறி அரசியலில் அப்பாவி வாக்காளனுக்கும் அவனால் அந்தஸ்தும் வாழ்வும் வளமும் பெறும் தன்னையொத்த சாமான்ய மனிதனுக்கும் இடையே அரசியல் அந்தஸ்து உருவாக்கிய (உருவாக்கும்) பிரத்தியட்ச மாற்றத்தை சுட்டிக்காட்டினார்.

சரி நமது கிழக்கு மாகான முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளாராக திடீரென்று முளைத்த ஹாபிஸ் நசீர் அஹமத் பற்றிய சங்கதிக்கு வருவோம்.
இவர் முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினர் அல்ல , முஸ்லிம் காங்கிரஸ் வளர்ந்து முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சரானதும் இவர் அஸ்ரபுடன் நெருங்கி உறவாடியதன் மூலம் , அஸ்ரபின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தார்.  கட்சியின் சர்வதேச தொடர்பாடலுக்கு பொறுப்பானவராக நியமிக்கப்பட்டார். ஏனெனில் ஸ்ரீ மு. காங்கிரஸின் தொடக்க கால உறுப்பினராகவிருந்த ஹக்கீமின் மிக நெருங்கிய குடும்ப உறவினரான   இனாமுல்லா மஸிஹுதீன்  முஸ்லிம் காங்கிரசிலிருந்து சேகு இஸ்சதீனுடன்  விலகிச் செல்லும் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச தொடர்பாடலுக்கு (சர்வதேச விவகாரங்களுக்கான இயக்குனர் ) பொறுப்பானவராக விருந்தவர் . சர்வதேச தொடர்பாடல் என்பதே முஸ்லிம் காங்கிரஸ் அரபு நாடுகளுடன் ஏற்படுத்தும் தொடர்புகளுக்காக அரபு மொழியாற்றல் உள்ளவர் என்ற வகையிலே கட்சியால் நியமிக்கப்படுபவர்களாகும் . இனாமுல்லா மஸிஹுதீன் ( சர்வதேச விவகாரங்களுக்கான இயக்குனர் ) விலகிச் சென்றதும் நிலவிய இடைவெளியை சவூதியில் கல்விகற்ற நசீர் நிரப்பினார்.  இவர் எகிப்தில் உள்ள அல்- அஷ்கார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க மறைந்த மட்டக்களப்பு எம்.பீ யும் பிரதி அமைச்சருமான பாரீத்  மீராலேப்பை எம்.பீ மூலம் சந்தர்ப்பம் பெற்றவர் என்று கூறப்பட்டது . பின்னர் அங்கிருந்தே அவர் சவூதி சென்று கல்வி கற்றார் என்று சொல்லப்படுகிறது நசீர் அரசியலில் குறிப்பிடக் கூடிய பின்னணியைக் கொண்டிருக்கவில்லை . ஆயினும் முன்னாள் மறைந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான பரீத் மீராலேப்பையுடன் , நெருக்கமான தொடர்புகளினைக் கொண்டிருந்தவர்.

அஸ்ரபுடன் சேர்ந்த வகையில் , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வலைப்பின்னல் ஊடாக பெற்ற ஒப்பந்தங்கள் மூலம்  , விசேடமாக ஈரானிய கம்பனிகளினூடாக தெருக்கள் அபிவிருத்தி அதிகார சபைக்கு  (Road Development Authority)  பித்மேனை ( bitumen- கார்பெட்-கம்பள - வீதி எனப்படும் வீதிகளுக்கு போடப்படும் பெற்றோலிய உப உற்பத்திப் பொருள்) வழங்கும் ஒப்பந்தங்களை பெற்றதன் மூலம்   தனது நிதி வளங்களில் ஒரு பகுதியினை நசீர் அஹமத் ஈட்டியுள்ளார் என்றும் சொல்லப்பட்டது. தனது முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடனான நெருக்கத்தினூடாக கொம்பனித்தெரு வீதியில் அமைந்துள்ள  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்  தலைமையகத்தில் தனது வியாபார அலுவலகத்தை நடத்தி வந்தார்.

முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்த நசீர்  தானே ஒரு கட்சியின் தலைவனாக வேண்டும் என்று விழைந்தார், அதில் வெற்றியும் பெற்றார். அதேவேளை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீமை விமர்சிப்பதில் அரசியலில் முன்னணியும் வகித்தார்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது துஆ  கட்சி சார்பில் அஜித் அராஜிகே  என்பவரை போட்டியிடச் செய்தார் . அவர் சுமார் ஐயாயிரம் வாக்குகளையே பெற்றார். அதனையடுத்து ஜனாதிபத்தி மஹிந்த ராஜபக்சவை நாடி அவரின் ஆலோசகர் பதவியைப் பெற்றார் . அவ்வாறு பதவி வகித்தபோது ஐக்கிய தேசியக் தேசியக் கட்சியையும் அதன் தலைவரையும் , ரவூப் ஹக்கீமையும் தாக்குவதில் முனைப்புடன் செயற்பட்டார்.   

"ஸ்ரீ மு. காங்கிரஸின் யாப்பு அன்று நிலவிய  விந்தையான சூழ்நிலைக்குப் பொருந்துகின்றவாறு அஸ்ரபுக்காக உருவாக்கப்பட்டது . அதனை ரவூப் ஹக்கீம் தனது சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலை அடைவதற்காக பயன்படுத்தி (யாப்பை) துஸ்பிரயோகம் செய்துள்ளார். ஒருநாள் கட்சி உறுப்பினர்களை நீக்குகிறார்.  மறுநாள் ஒற்றுமைக்காக அழைப்பு விடுக்கிறார் " ( "The SLMC constitution was tailor-made for the late Mr. M.H.M. Ahsraf to suit the peculiar circumstances that prevailed then and Hakeem has abused the constitution using it to serve his own agenda." ) என்று ஹக்கீமிக்கு எதிராக குரல் கொடுப்பதில் முன்னணியில் நின்றவர் நசீர்

யுத்த நிறுத்த ஒப்பந்தம் புலிகளுக்கும் அரசுக்குமிடையில் செய்யப்பட்டு பின்னர் பீ டோம் எனப்படும் சுனாமிக்கு பின்னரான புலிகளுக்கும் அரசுக்குமிடையிலான ஒப்பந்தம் ( Post-Tsunami Operational Management Structure (P-TOMS), பற்றி நசீர் அஹமத் குறிப்பிடுகையில்  ரவூப் ஹக்கீமின் துரோகத்தனமான செயற்பாட்டுத் தொடரில்  யுத்த நிறுத்த ஒப்பந்தம் முதலாவதாகும், அதில் அவர் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகளை விற்றார். அந்தக் குரூரச் செயலை  முஸ்லிம் சமூகம் மறக்கவோ அல்லது மன்னிக்கவோ  மாட்டாது . முஸ்லிம்களில் அநேகமானோர் ரவூப் ஹக்கீமை  யு என்,பீ யின் எடுபிடியாகவும் முஸ்லிம் சமூகத்தின் இலட்சியங்களை பதவி நலன்களுக்காக வியாபாரம் செய்து விட்டவராக காண்கிறார்கள்.

( The CFA agreement was the first in a series of treacherous acts by Rauf Hakeem in the history of Sri Lankan Muslims where he sold the Muslims' political rights and the Muslims would never ever forget or forgive this act of savagery. Nazeer Ahmed claimed that most Muslims see Rauf Hakeem as a stooge of the UNP and that he had traded the Muslims' cause for the plums of office.)

யூ என்.பீ மேற்குல சார்பானது என்றும் சியோனிஸ ஆதரவு தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கிறதென்றும்  , இஸ்ரேலக்குக்கு அதன் பாலத்தீன மக்களின் இனச் சுத்திகரிப்பிற்கு , இனப் படுகொலைகளுக்கு ஆதரவாக செயற்படும்  மேற்குலக ஏகாதிபத்திய சக்திகளின் கட்டளைப்படி செயற்படுகிறது என்று குறிப்பிட்டதை மிக இலகுவாக மறந்துவிட்டு பொன்சேகாவின் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருடன் சேர்ந்து எவ்வித சங்கோஜமுமில்லாமல்   சேர்ந்து பணியாற்றியவர்.


(‘UNP’s pro-West and pro-Zionist leadership has only worked to the dictates of its. Imperialist backers in the West who have supported Israel fully in its genocide and ethnic cleansing of the Palestinian people,’)

அதனையடுத்துவந்த , 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் , திடீரென்று கட்சி மாறி ஜனாதிபதி வேட்பாளர் பொன்சேகாவை ஆதரிக்க முன்வந்தது மட்டுமல்ல  ,  விமல்வீரவன்சவின்  ஜாதிக நிதகஸ் பெரமுன கட்சியின் உறுப்பினரான முன்னாள் எம்.பீ முசம்மிலை , முன்னாள் எம்.பீ , மை ஓவன் முஸ்தாபாவுடன் சேர்ந்து கையூட்டு வழங்கி பொன்சேகா கட்சிக்கு மாற துணைபோனார். இந்த இலஞ்சக் குற்றச் சாட்டுக்கள் நீதிமன்ற விவகாரமாக மாற,  மை ஓவன் முஸ்தபா  நீதிமன்ற அழைபபானைக்குத் தப்பி நாட்டைவிட்டே வெளியேறிவிட்டார். நசீர் வழக்கம்போல் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த வேளையில் முஸ்லிம் காங்கிரசிற்கும்  அவருக்குமிடையில் நிலவியதாக சொல்லப்படும்  கட்சி நிதி, கட்சித் தலைமையைக அலுவலக ஆக்கிரமிப்பு என்ற சமாச்சாரங்கள் திடீரென்று முடிவுக்கு வந்துள்ளன. அதற்கு வெகுமதியாக முஸ்லிம்  காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினர்கள் கட்சியின் உயர் அதிபீட ஜாம்பவான்கள் , நிசாம் காரியப்பர் போன்ற பெரும் கட்சியின் முன்னணி பிருகிருதிகள் தவம் கிடக்க நசீர் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நசீர் அஹமட்டுக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் எந்த அடிப்படையில்  ஒப்பந்தம் ஏற்பட்டது என்பது இதுவரை கட்சியின் கட்சி உறுப்பினர்களுக்கு ( "போராளிகளுக்கு" ) விளங்காத புதிர் . அதுபற்றி அவர்கள் கவலை கொள்ளப் போவதுமில்லை . நசீர் ஹாபீசை கட்சியில் சேர்ப்பதற்கு முன்னர் சேகு தாவூத் முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப் போவதாக கட்டியம் கூறியிருந்தார்.

முஸ்லிம்களின் தவறும் தண்டனையும்
கிழக்கு மாகான சபைத் தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பத்தை பெறுமளவு கட்சியில் உபதலைவராக சேர்ந்து சில மாதங்களுக்குள் தனது  அஸ்திரங்களைப் பயன்படுத்தி கிழக்கு மாகான சபைத் தேர்தலில் குதித்து இஸ்லாமிய ஒற்றுமை , மறைந்த தலைவரின் கனவுகள் உரிமைபோராட்டங்கள் , என முழங்கி  ஹக்கீமுக்கு எதிராக மெலிதாகவும் ஆசாத் சாலிக்கு எதிராக தீவிரமாகவும் எதிரணிகள் எழுப்பும் பிரதேசவாதத்திற்கும் , உள்ளிடையான மாகான மட்டத்தில் நிலவும் ஊர் வாதத்திற்கும் எதிராக பிரச்சாரங்களை முடுக்கிவிடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார் நசீர். தமிழர்களின் நண்பர் என்று ஹக்கீமைப் போல் பேச வேண்டும் தமிழர்களுக்கு அறிவுரை சொல் வேண்டும் தமிழர்களின் வாக்குகளை மிகச் சிறிய எண்ணிக்கையிலாயினும் பெற முயற்சிக்க வேண்டும் , ஆல்லது ஆகக் குறைந்தது அவர்களின் நண்பர்களாக காட்டு வேண்டும் என்பதற்காய் சில முஸ்லிம்களின் தலைகளை உருட்ட வேண்டும்.  ஆட்டைக் கடிச்சு மாட்டைக்கடிச்சு மனிசனைக் கடிச்ச கதையாக இப்போது திடீரெண்டு தமிழர் போராட்டத்தைக் காட்டிகொடுத்த  சில முஸ்லிம்கள் உண்டு என்று கண்டு பிடித்து தமிழர் மனங்குளிரப் பேசி அரசியல் செய்ய முனைந்துள்ளார் நசீர். அண்மையில் அவர்


"தமிழர் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் என்ற குற்றச்சாட்டும் முஸ்லிம்களுக்கு உண்டு. முஸ்லிம்களில் ஏதோ ஓரு சிலர் செய்த தவறுக்காக ஒட்டு மொத்த சமூகமும் அந்நாட்களில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தது. வடக்கே முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது உள்ளடங்களாக பல்வேறு காயங்கள் வரலாற்றில் அழிக்கமுடியாத வடுக்களாக இருக்கின்றன." என்று குற்றச்சாட்டு உண்டு என்று கூறி , அக்குற்றச்சாட்டை நிரூபிக்கும் கைங்கரியத்தில் "ஏதோ ஓரு சிலர் செய்த தவறுக்காக" என்று குற்றச்சாட்டை தனது "சுய நீதிமன்றில்"  நிரூபித்து  அதற்கான தண்டனையை ஒட்டு மொத்த சமூகமும் அனுபவித்தது என்பதையும் கூறி வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதனையும்  அந்த தண்டனைக்குள் உள்ளடக்கி விடுகிறார்.

கிழக்கு மாகான முஸ்லிம் தலைமை

வடக்கு மக்கள் குறிப்பாக யாழ்ப்பான மக்கள் வடக்கிலிருந்து வெளியேறி மீண்டும் யாழ் சென்று வாழ வேண்டும் என்று வெளியேற்றப்பட்டு ஏழாண்டின்  பின்னர் (1997)  கொழும்பில் கூடியபோது அக்கூட்டத்தில் கலந்து கொண்ட யாழ் மாவட்ட முன்னாள் மாநகரசபை உறுப்பினர் கே .பி .எஸ்.ஹமீது பஷீர் , ஒஸ்மானியாக் கல்லூரியின் முன்னாள் அதிபர்களான அப்துல் குத்தூஸ் , ஜிப்ரி ஹாமீம், கல்விப் பணிப்பாளர் மன்சூர்  ,எனப்பலர் கலந்து கொண்டு மேற்கொண்ட தீர்மானத்தில் மிக முக்கிய அம்சங்களில் ஒன்று ஐ சி ஆர் சி மூலம் புலிகளின் முக்கியஸ்தர்களை கண்டு தமது நியாயபூர்வமான உரிமைகள் , கிழக்கு மாகாணத் தலைமையை  ஏற்றுவிட்டதாக தவறாக எண்ணிய புலிகளின் நிலைப்பாடு , வாழக்கூடிய அமைதியான சூழல் , பாதுகாப்பான எதிர்காலம் , இழந்த சொத்துக்கள் அமைதியான தொழிற் சூழ் நிலைகள் குறித்தும் பேசுவது.


இங்கு குறிப்பிட்டு நோக்க வேண்டியது புலிகள் தங்களை யாழ்பாணத்திலிருந்து வெளியேற்றியமைக்கு காரணம் தாங்கள் கிழக்கு மாகான முஸ்லிம் தலைமையை - அஸ்ரபின் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை -  ஏற்றுவிட்ட தாக புலிகள் தப்பாக எண்ணி தங்களை வெளியேற்றி இருக்கலாம் என்று அவர்கள் கருதினார்கள் , அது பற்றி அவர்கள் புலிகளிடமும் நேரடியாக பேசவும் விரும்பினார்கள். புலிகள் ஏன் தங்களை வெளியேற்றினார்கள் என தாங்களாகவே ஊகித்த காரணத்தை -அனுமானத்தை- புலிகளிடம் கேட்டுவிடவேண்டும் என்று வெளியேற்றப்பட்ட மக்கள் நினைத்து தீர்மானம் மேற்கொண்ட சமபவம் ஒருபுறம் சாட்சியாய், ஏன் ஒரு  புதிராய் கூட தொக்கி நிற்க , ஹாபிஸ் நசீர் அஹமது அதற்கான காரணத்தை புலிகளின் சார்பில் கண்டுபிடித்து முஸ்லிம்களில் ஒரு சிலர் தவறு செய்ததனால்தான் மொத்த சமூகமும் அதற்கான விலையை கொடுக்க வேண்டி நேரிட்டு விட்டதுபோல் காரண காரிய நியாயம் கற்பிக்கிறார். ஒரு சிலர் தவறு தவறு செய்தார்கள் , அதாவது நசீரின்படி காட்டிக் கொடுத்தார்கள் என்று ஒரு விவாதத்துக்கு வைத்துக் கொள்வோம் , ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் தண்டிப்பது யார் , அந்த குற்றச்சாட்டை புலிகள் பகிரங்கமாக தங்களின் அஸ்தமனம் வரை வெளிப்படையாக சொல்லவில்லை ( அந்தரங்கமாக அவர்கள் முஸ்லிம்கள் பற்றிக் கொண்டிருந்த  நிலைப்பாடு  பற்றிய தகவல்கள் மிக அதிர்ச்சியூட்டுபவை -அவை பற்றி இங்கு நான் எழுதவில்லை) . ஆனால் நசீர் அஹமது யாரோ முகம் தெரியாத சிலரின் எழுத்தையும் கருத்தையும் வைத்துக் கொண்டு , சில முகம் தெரியாத முஸ்லிம்களையும் சகட்டுமேனிக்கு  குற்றவாளியாக்கி தனது அரசியலை செய்ய புறப்பட்டுள்ளார்.

இஸ்லாமிய அமைப்பிலான ஒரு சமுதாய அமைப்பு

"
இஸ்லாமிய அடிப்படையிலான ஒரு சமுதாய அமைப்பை உருவாக்கப் பாடுபட வேண்டும்." என்று நசீர் அஹமது கூறுகிறார். உண்மையில் இஸ்லாமிய அமைப்பிலான ஒரு சமுதாய அமைப்பு என்றால் என்ன , அது எப்படி செயற்பட வேண்டும் என்ற கேள்விகளுகெல்லாம் அப்பால் , மிக முக்கிய கேள்வி இதுவரை காலமும் முஸ்லிம்  காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாம் கட்டடத்துக்குள் இருந்து கொண்டு முஸ்லிம் காங்கிரசுக்கு நசீர் விட்ட சவால் நீதிமன்றம் வரை சென்றதாக செய்தி , அஸ்ரப் கட்சியின் இலட்சக்கணக்கான பணத்தையும் சொத்துக்களையும் நசீர் அஹமதுவிடம் நம்பிக்கையின் படி விட்டு சென்றதான செய்தியின் உண்மைச் சங்கதி என்ன ? கட்சியின் பணத்தை அஸ்ரப் எப்படி ஒரு தனி மனிதனிடம் ஒப்படைக்க முடிந்தது. கடந்த தேர்தலில் முசம்மில் எம்'பீக்கு கொடுத்த இலஞ்சப் பணம் எப்படி பெறப்பட்டது. அதில் முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சரும் எம்.பியுமான மை ஒவன்  முஸ்தபாவுடன் சென்று அப்பணத்தை முசம்மிலுக்கு கொடுத்ததில்   நசீரின் பங்கு என்ன ?
சுனாமியின் பின்னர் சுனாமியால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்காக அவர் நடத்திய சுனாமி பிள்ளைகளின் கல்வி நம்பிக்கைப் பொறுப்பு ( Tsunami Children Education Trust) உதவி நிறுவனம் பற்றிய நிதி செயற்பாடுகளை , அவர் இங்கிலாந்து வரை வந்து அதற்காக சேகரித்த நிதி பற்றிய தகவல்களை வெளியிடுவாரா என்ற கேள்விகள் நியாயமானவையே. ஆக மொத்தத்தில் இஸ்லாமிய சமூக அமைப்பினை ஏற்படுத்த முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் அவசியமா என்பது மிக முக்கியமான கேள்வி. இஸ்லாமிய அமைப்பினை ஏற்படுத்துவதாக இருந்தால் அதற்கான நேர்மையும் தகுதியும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரிடம் மட்டுமல்ல கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸின் முன்னால்  அதிகாரங்களை பெற்று இன்று தனித்தனியாக கட்சிகளை அமைத்து மிகச் சிறிய சமூகத்துள் மிகக் கூடிய கட்சிகளையும் தலைவர்களையும் குடித்தொகை விழுக்காட்டுக்கு மேலாக கொண்டிருக்கும் இலங்கை முஸ்லிம் தலைவர்கள் பலருக்கு இல்லை என்பதும் ஒரு கசப்பான உண்மை.
29/07/2012


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...