கணம் கோட்டார் அவர்களே!




                                                                                     எஸ்.எம்.எம்.பஷீர்


 “தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர்  பழிநாணுவார்”.( திருக்குறள் )


அண்மையில் யாழ் சட்டத்தரணி நண்பர் ஒருவர் எனக்கனுப்பிய மிண்னஞ்சல் தனிப்பட்ட சுற்றுக்காக அனுப்பப்பட்டிருக்கலாம் என்ற எனது அணுமானம் ஓரிரு நாட்களின் பின்னர் அம்மின்னஞ்சல் இணையம் ஒன்றில் பதிவாகி பகிரங்கமாகியபின் , அது குறித்த எனது பார்வை இது. முன்னாள் இலங்கையின் உச்ச நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் மதிப்புக்குரிய திரு விக்னேஸ்வரன் அவர்களின் 24.06.2010ல் யாழ் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் குறிப்பிட்ட எழுந்தமானமான ஒரு குறிப்பிட்ட சமூக பெண்களை கொச்சைப்படுத்தும் கருத்து குறித்து தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தனர்  அந்தப் பிண்ணனியில் யாழ் மேட்டுக்குடி இனவாத சக்திகளின் வண்மத்துக்கு வகை சேர்த்த நீதியரசரின் கருத்து மக்கள் நீதிமன்றிலே விசாரனைக்கு விடப்பட்டுள்ளது. இங்கே நான் “கணம் கோட்டார் அவர்களே” என்று விளிப்பது இந்திய தமிழ் சினிமாவிலும் நாடகத்திலும் பிரயோகிக்கப்படும் சொற்றொடர் ஆயினும் நிஜத்தில் கோட்டில் அவ்வாறுதான் விளிக்கப்படுகிறது.


வாதி: யாழ் ஆய்வறிவாளர் அணியம்

பிரதிவாதி: மதிப்புக்குரிய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் திரு விக்னேஸ்வரன் அவர்கள்

சாட்சி:- ஐயா,! மதிப்புகுரிய முன்னாள் நீதியரசர் திரு விக்னேஸ்வரன் அவர்கள் எனது அனுபவத்தில் நான் கண்ட நீதிபதிகளில் மிகவும் சிறந்த பண்புகளை கொன்டவர். அவர் வெளியிட்ட கருத்து ஒரு சமூகத்தின் மீதான அவதூறும் இனவாதத்தையும் தூண்டும் கருத்துமாகும் என்ற குற்றச்சாட்டின் மீதான விசாரனையில் சாட்சியமளிப்பதில் நான் மகிழ்வடையவில்லை.
ஆயினும் நான் அறிந்த நீதியரசரின் அரசியல் கருத்துக்கள் சிந்தனைப் போக்குகள் என்னை ஆரோக்கியமானதாக இருக்கவில்லை என்ற காரனத்தினால்தான் இந்த விசரனையில் நான் சாட்சி சொல்ல விரும்புகிறேன். தமிழ் தேசிய கடும்போக்கு இனவாதிகளுக்கு முட்டுக்கொடுக்கும் கருத்துக்களை அவ்வப்போது தெளித்தவர், உதாரணமாக ஐயா!, கருனா பிரிந்தபோது மதிப்புகுரிய முன்னாள் நீதியரசர் திரு விக்னேஸ்வரன் அவர்கள் அவர்களையெல்லாம் துரோகிகளாக பகிரங்கமாக விமர்சனம் செய்தவர், கருத்துக்களை சொன்னவர். பிரபல தமிழ் தினசரிகள் இவரது பேச்சினை பிரசுரம் பன்னி மகிழ்ந்தன. அவ்வாறே மாற்று கருத்தாளர்கள், எதிரனி தமிழ் கட்சிக்காரர்கள் புலிகளுக்கு பலியானபோது புலியிலிருந்து பிரிந்த கிழக்கு புலிகள் கொல்லப்பட்டபோது வாளாதிருந்தவர்.

இவர் பெரும்பான்மையான சிங்கள தமிழ் சமூக மேட்டுக்குடி மக்களினால் ஆக்கிரமிக்கப்பட்ட பாடசாலைகளில் ஒன்றான கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றவர். (சகல தமிழ் சிஙகள சமூக அரசியல் பிரபலஸ்தர்கள் இங்குதான் கல்வி கற்றார்கள் தீவிர சிங்கள தேசியவாதியும் இனவாதியுமாக கானப்பட்ட அனாகரிக தர்மபால அவருக்கு ஒத்தாசையாய் கன்டி சிங்கள முஸ்லிம் கலவரத்தில் (1915) முஸ்லிம்களுக்கு எதிராக மகாரானியிடம் தூது சென்ற அன்றைய சிங்கள இனவாதிகளினால் வீரபுருஷர் என போற்றப்பட்ட சேர் பொன் ராமனாதனும் அங்குதான் கல்விகற்றார்.)

பிரதிவாதியின் சட்டத்தரணி:- கணம் நீதிபதி அவர்களே! நான் இவ்வழக்கின் பிரதிவாதியை அவரின் சார்பில் ஆஜராவதற்கு அப்பால் தனிப்பட்டவகையில் அறிவேன். எனவே அவரின் சார்பான ஒரு சாட்சியாகவே எனது வாதங்கள் அமையலாம். அது குறித்து வழக்குத்தொடுனர் அல்லது நீதிமன்றம் ஆட்ஷேபிக்காது என்று நம்புகிறேன் ( இது உண்மையான சட்ட நீதிமன்ற குடியியல் வழக்கு நடைமுறையினை பின்பற்றிய எழுதப்பட்டதல்ல) இவர் வட மாகானத்திலும் நீதிபதியாக பனிபுரிந்தவர். வடக்கு கிழக்கு இனைந்த மாகான சபையின் உயர் நீதிமன்ற நீதிபதியாக இவர் இருந்த போது இவரை சட்ட அலுவல்கள் காரனமாக சந்தித்திருக்கிறேன். ஒரு நீதிபதி என்பதை விட எவ்வித பந்தாவுமில்லாமல் அன்புடனும் நட்புடனும் பழகுபவர். ஒரு கண்டிப்பான நீதிபதியாக அல்லாது மனித நேயமிக்க வழக்காளிகளிடையே மத்தியச்துவம் ( Mediation) செய்பவராக திகழ்ந்தவர். குறிப்பாக குடும்ப குடும்ப வழக்குகளில் அவர் செய்த மத்தியஸ்தம் குறித்தும் அவற்றின் நல் விளைவுகள் குறித்தும் அவர் கூறிய வழக்கு நிகழ்வுகள் ஒரு சிறந்த பஞசாயத்து முறையிலான அணுகுமுறைக்கும் இன்று மேற்குலக நாடுகளில் குடும்ப தகராறுகளில் மத்தியஸ்த்வம் ஒரு சட்ட செயன்முறையாகவே (Legal process) அவசியமாக்கப்பட்டுள்ள வேளையில் அவாறான சட்ட பரிசோதனை முயற்சிகளை செய்தவர்தான் திரு விக்னேஸ்வரன் .
இலங்கையின் நல்லதும் கெட்டதும் ரோயல் கல்லூரியில் கல்லூரியில் கல்விகற்ற பலரிடமிருந்தே வெளிவந்திருக்கிறது. ஆனால் மதிப்புக்குரிய நீதியரசர் அவர்கள் வாசுதேவா நானயக்காராவின் குடும்பத்துடன் சம்பந்தம் வேறு கலந்தவர்; அதன்மூலம் நடைமுறையில் இன ஒருமைப்பாட்டை பேணியவர்.

திரு விக்னேஸ்வரன் அவர்கள் கொழும்பு மேல் நீதிமன்ற கொலை வழக்கொன்றில் மனைவியை கொன்ற தந்தைக்கெதிராக மகனே கண்கன்ட சாட்சியாய் (Eye Witness) முன்வந்தபோது , அந்த வழக்கில் குற்ற்வாளிக்கெதிராக ஆஜராகிய எம்மிடம் அந்த வழக்கின் சங்கடங்கள் பற்றி ஆலோசித்து வழக்கினை அனுகும் முறையில் மாற்றங்கள் குறித்து சிலாகித்து வழக்குக்கப்பால் அதன் ஊடக விளைவுகளை, தகப்பனுக் கெதிராக மகன் சாட்சியமளிக்கும் சூழலை தவிர்க்கவிரும்பிய அவரின் மனனிலையை உதாரணமாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஐயா, எனது கட்சிக்காரர் மிகுந்த மனிதாபிமானம் கொன்டவர்.சமூக சேவையாளர் கம்பன் கழகம் மூலம் இலக்கிய தமிழ் மொழிச் சேவையாற்றியவர். தீவிர சாயி பக்தர்.கொழும்பு சாயி சமாஜத்தின் முக்கிய உறுப்பினர். இவர் கொழும்பில் வாழும் தமிழ் மேட்டுக்குடி சமூகத்தினை பிரதிநிதிப்படுத்துபவர் என்பதில் எவ்வித தவ்றுமில்லை.இவ்வாறான கருத்தை நிச்சயமாக இவர் கூறியிருக்கமாட்டார். அவ்வாறு கூறியிருந்தாலும், அதனை நீருபிக்கும் ஆதாரங்களை அவர் ஒரு முன்னாள் நீதிபதி என்ற வரையில் விரைவில் இந் நீதிமன்றில் சமர்பிக்க நீன்ட கால அவகாசம் வழங்கி இவ்வழக்கின் தீர்ப்பை ஒத்திவைக்குமாறு கணம் நீதிபதி அவர்களை தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்.

நீதிபதி: இந்த வழக்கினை மேலதிக விசாரனைக்காக “காலவரையரையின்றி” ஒத்திவைக்கிறேன்.

இதனை எழுதும்போது மதிப்புக்குரிய முல்லா நசுருதீனையும் நினைக்க வேன்டி நேரிட்டுவிட்டது.. ஒருதடவை முல்லா நசுருடீன் நீதிபதியாக அமர்ந்து வழக்கொன்றை விசாரிக்க நேர்ந்தது, அவ் வழக்கின் வாதியின் குற்றசசாட்டுக்களை கேட்ட பின்னர் முல்லா ” நீ சொல்வதெல்லாம் சரி என்பதே எனது தீர்ப்பு.” என்று சொன்னார். பின்னர் அவர் பிரதிவாதியை கவனமாக கேட்டுவிட்டு அவரிடம் நீர் சொல்வதெல்லாம் கூட சரிதான்” என்று குறிப்பிட்டார். இதனைக் கேட்டு அவ்வழக்கின் சாட்சி ” ஐயா எப்படி அவர்கள் இருவரும் சரியாக இருக்க முடியும்” என்று முல்லாவிடம் கேட்டான். முல்லா நிதானமாக பதிலளித்தார். ” நீ சொல்வது கூட சரிதான்”. ஐயா நீங்கள் எப்படி ?.


அடிக்குறிப்பு:
.
(கணம்) கோட்டார் அவர்களே என்ற தலைப்பு எனக்கே உடன்பாடற்றது. ஏனெனில் கோட்டு (Court) எனும் ஆங்கிலச்சொல்லை நீதி மன்றை விளிக்கும் சொல்லாய் மாற்ற “ஆர்” எனும் தமிழ் சொல்லுடன் முரண் மொழிப் புணர்வு செய்வித்து தமிழில் வழக்காடும் வழக்கறிஞர்கள்தான் தமிழ்நாட்டில் தமிழில் வழக்குகள் நடத்தப்படவேன்டுமென்று போராட்டம் வேறு செய்கிறார்கள். கோட்டார் என்று மரியாதைக்கு ” ஆர்” போட்டுவிட்டார்கள் இல்லாவிட்டால் கோட்டான் என்ற சொல் வேறு ஆந்தை என்ற அர்த்தத்துடன் சுத்தமான தமிழில் இருந்து தொலைக்கிறது. நமக்கேன் மொழியாராச்சி; அதுதான் செம்மொழி பயில்வான்களின் வேலையாயிற்றே.. ஆயினும் இத்தலைப்பும் கட்டுரையின் அமைப்பும் (structure) அங்கத தொனியை அடிப்படையாகக் கொன்டு எழுதப்பட்டது.

Thenee.com, lankamuslims.com and amhavali.com (11/07/2010)

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...