மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் (பாகம்- 7

.                                                                                                                எஸ்.எம்.எம் பஷீர். 

மீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன் முடங்கிப்போன முஸ்லிம் (பாகம்- 7 )

 எஸ்.எம்.எம் பஷீர். 

பிரபாகரனுக்கும் ரணில் விக்கிரமசிங்காவிற்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட சமாதான உடன்படிக்கையைத் தொடாந்து (22.02.2002 ) வன்னியில் சிறுவர்களுக்கான ஆயுதப்பயிற்சியினை மார்ச் மாதம் புலிகள் தீவிரப்படுத்தியமைக்கான ஆதாரங்கள் பல உள்ளன. 

சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் லண்டனில் 23 /03/2002 ல் இலண்டன் மார்லபோனிலுள்ள  ஹில்டன் ஹோட்டலில் (Hilton Hotel , Marylebone London)  ஹக்கீம் நடத்திய சந்திப்பு ஒன்றில ஒப்பந்தத்தில் முஸ்லிம்களின் நிலைப்பாடு குறித்து எனது அதிருப்தியினை நான் வெளிப்படுத்தியபொழுது ரவூப் ஹக்கீம் முஸ்லிம்களை ரணில் விக்கிரமசிங்கா கவனிப்பாரென்றும் ஏனைய சமூகங்களுடன் சமமாக நடத்துவதை உறுதிசெய்வாரென்றும் குறிப்பிட்டார் . ஆனால் ஹக்கீம் அந்த சந்திப்பு நிகழ்வு ஸ்ரீ.ல.மு.காவினால் ஒழுங்கு செய்யப்பட்டது என்று உண்மைக்கு மாறாக உறுதியாக குறிப்பிட்டார்.ஏனெனில் ஹோட்டல் நிர்வாகத்தினர் இக்கூட்டத்தினை ஒழுங்கு செய்தவர்கள் ஐக்கிய ராஜ்யத்திலுள்ள இலங்கை தூதவராலயத்தினர் என்று நிரலிட்டிருந்தனர். 



மேலும் இக்கூட்டத்தில் ஹக்கீமின் அமைச்சில் பணிபுரியும் இரண்டு சிங்கள  உத்தியோகஸ்தர்களும் முஸ்லீம் சமூக கலந்துரையாடல்களுக்கு சம்பந்தமில்லாமல் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் நோர்வேயினது சகல செயற்பாடுகளும் தீவிரமாக ஆராயப்படவேண்டும், இது குறித்து ஒரு ஆணைக்குழு ஒன்றினை நியமித்து விசாரிப்பது அவசியம் என்று கருதுகிறேன். இலங்கைபற்றிய தனது ஆய்வொன்றில் பேராசிரியர் அலன் கீனன் (Prof. Alan Keenen ) என்பவர் 

“ஐ.தே.கட்சி –நோர்வேயினது வியூகம்,  புலிகளுக்கு இராணுவ சுதந்திர ஆதிக்கத்தை வடகிழக்கில் வழங்கியது,  யுத்த நிறுத்தம் தொடர்ந்தவுடனே ஆரம்பித்த புலிகளின் அரசியல் படுகொலைகளையோ தொடர்ந்த சிறுவர் படைச்சேர்ப்பு ஆயதக் கட்டமைப்பினையோ அல்லது சட்டமீறலான வரிவிதிப்பினையோ  ஐ.தே.கட்சி அரசு பகிரங்கமாக ஒருபோதும் விமர்ச்சிக்கவில்லை”. என்று குறிப்பிட்டுள்ளார். இவர் இலங்கையின் நேரடியாக விஜயம் மேற்கொண்டு தனது ஆய்வுகளை மேற்கொண்டவராவார். மேலும் இவர் புலிகளின் இடைக்கால தன்னாட்சிச்சபைக்கான நிர்வாக சபை (ISGA )குறித்து “பெயரில் தவிர இடைக்கால தன்னாட்சிக்கான நிர்வாக சபை ஒரு சுதந்திர நாட்டிற்கான திட்டவரைவு” என தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். 

 புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சமதையாக முஸ்லிம்களின் தேசியத் தலைவரென தம்மை பிரகடனப்படுத்தி ஒப்பந்தத்தில் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் என்றும் முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் என்றும் ஒத்துக்கொள்ளப்பட்ட சரத்தான ”அரசிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையில் ஆரம்பிக்கப்படவுள்ள பேச்சுவார்த்தைகளின்போது முஸ்லிம் மக்கள் சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளும் ஒரு தரப்பாக பங்குபற்றுவதென்றும”;. என்று ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஹக்கீம் பிரகடனப்படுத்திய விஷயம் புலிகளின் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் இடம்பெறவில்லை. அதற்கு மாறாக  புலிகள் திட்டவட்டமாகவே ஒப்பந்தமீறல்கள் செய்தது மட்டுமல்ல முஸ்லிம்களை மூன்றாம் தரப்பாக எச்சந்தர்ப்பத்திலும் அங்கீகரிக்கவில்லை.

மறுபுறம் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சௌகரியமாக இதனை மறந்துவிட்டு பத்திரிகை அறிக்கைகளில் தமது சவால்களை காட்டிவந்தனர். 
இவ்வாறான சூழ்நிலையில்தான் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் தளமானது ஏகபோக உரிமைக்குரலானது மேலும் மேலும் நெருக்கடிக்குள்ளானபோது நோர்வேயின் செயற்பாடுகளில் முஸ்லிம்கள் தொடர்பான மூன்றாம் தரப்புப் பிரச்சினை அதிலிருந்து வெளியேறிய பிரிவினரால் தீவிரமாக முன்வைக்கப்பட்டபோது; இந்நிலைப்பாட்டினுடைய சிக்கல்களை உணர்ந்துகொண்ட நோர்வே அரச ஒரு அதிரடி நடவடிக்கையினை மேற்கொண்டது. ஹக்கீம பாலசிங்கத்தை லண்டனில் சந்திப்பதற்கு எற்பாடு செய்யப்பட்டது. ஹக்கீம் பாலசிங்கத்தை சந்திக்கமுன்பு இலண்டனில் அன்றைய தினம் என்னை சந்தித்து விட்டே சென்றார்.ஆயினும் எனக்கும் அவருக்குமிடையிலான சந்திப்பு தனிப்பட்டதாவே அமைந்தது.அவர் எதிர்கொள்ளப்போகும் பேச்சுவார்த்தை குறித்து எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை. 

ஆனால் பின்னர் முஸ்லிம்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டு விட்டதென்றும் பாலசிங்கத்துடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்ததென்றும் ஹக்கீம் எவ்வித ஆதாரமுமற்று வெளிப்படையான எதிர்த்தரப்பு (புலிகள்) உறுதிப்பாடுமின்றி கருத்துக்களை பொது வெளியில் முன்வைத்தார். பாலசிங்கம் இறந்தபொழுது பிரபாகரனுக்கு சமமாக அனுதாபச் செய்தியினையும் ஹக்கீம் வெளியிட்டார். “அதாவது பாலசிங்கம் சிறந்த புத்திஜீவி தத்துவ வித்தகர் யாக்கிரதையான பேரம்பேசுபவர் ராஜதந்திரி தமிழ் தேசியவாதி புலமையாளர் முஸ்லிம்களின் குரலை ஆர்வத்துடன் செவிமடுத்த தமிழ் தேசத்தின் காதுகள் அரசியல் தத்துவஞானி” என்று குறிப்பிட்டார். பிரபாகரன் பாலசிங்கத்தினை தமிழ் தேசத்தின் குரல் என்று விதைந்துரைக்க ரவூப் ஹக்கீம் முஸ்லிம்களின் குரலுக்கு செவிமடுத்த காதுகள் என்று வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பொழுது செவிடாய் இருந்த காதுகள் பற்றி விதைந்துரைத்தார்.

மேலும் இவரே தமிழ் செல்வன் இறந்தபோதும் அவர்களுக்கிடையிலான உறவு குறித்து சிலாகித்து பாராளுமன்றத்திலே அனுதாபம் தெரிவித்தவராவார்.இலங்கை அமைச்சர்களில் இருவரே பிரபாகரனை சந்தித்துள்ளார்கள் இவ்விரண்டு சந்திப்புக்களும் ஐ.தே கட்சி ஆட்சியிலிருந்தபொழுதே நடைபெற்றிருக்கின்றன ௧௮ ஏப்ரல் ௧௯௯௦ ம் ஆண்டு முன்னாள வெளியுறவு அமைச்ர் ஏ.சி.எஸ் ஹமீத் அவர்களுக்கு பின்னர் சந்தித்தவா ரவூப் ஹக்கீமாகும் ஆனால் முன்னையவரின் சந்திப்பு பிரேமதாசாவின் தூதினை எடுத்துச்செல்ல பின்னே வரும் சந்திப்பு தமது சுய அரசியலை ஸ்திரப்படுத்துவதற்கும் நோர்வே அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்படுவதற்குமாகும். 


(தொடரும்)

July 15, 2009

thenee.com,lankamuslims.com.mahavalai and unmaikal


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...